சனி, 8 ஆகஸ்ட், 2009




தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை அமைப்பு (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு (EROS)மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT) ஆகியவற்றின் அங்கத்தவர்கள் ஒருங்கிணைந்து ஓர் அறிக்கையினை (திம்பு பிரகடனம்: 1985 ஜூலை 13), பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பான இந்திய அதிகாரிகளிடம் அளித்தனர். பின்னர் இந்த அறிக்கை பத்திரிகைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.அவ்வறிக்கை வருமாறு:தமிழ் தேசிய பிரச்னைக்கான பயனுள்ள தீர்வு எதுவாக இருந்தாலும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்டையாகக் கொண்டிருக்க வேண்டும்.(1) இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.(2) இலங்கையில் தமிழர்களுக்கென்று இனங் காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளது என்பதை அங்கீகரித்தல்.(3) தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.(4) இலங்கைத் தீவைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழர்களினதும் பிரஜாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.இக் கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள், பல்வேறு அரசாங்க முறைகளை வகுத்துள்ளன. எமது மக்களுக்கு இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதனால் எழுந்துள்ள இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, நாம் சுதந்திரமான அரசொன்றைக் கோரியுள்ளதுடன், அதற்காகப் போராடியும் வந்துள்ளோம்.இப்பிரச்னைகளுக்குத் தீர்வாக, இலங்கை அரசாங்கம் அளித்துள்ள ஆலோசனைகள் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. எனவே 1985 ஜூலை 12-ஆம் தேதி எமது அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, நாம் அவற்றை நிராகரித்துள்ளோம்.எனவே, சமாதானத்துக்கான எமது உளப்பூர்வமான விருப்பத்தின் காரணமாக, மேற்குறிப்பிட்ட எமது கோட்பாடுகளுக்கிணங்க முன்வைக்கும் ஆலோசனைகளை நாங்கள் பரிசீலனை செய்வோம் - என்று கூறி அனைத்து அமைப்பின் அங்கத்தவர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.இதன் அடிப்படையில் இலங்கை அரசு இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு சரியான திட்டங்களுடன் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இதன் மூலம் ஈழமே தீர்வு என்கிற நிலையிலிருந்து கீழிறங்கியதுடன், இதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு இலங்கை அரசையும் உட்படுத்தினர்.காரணம் போராளிகள் எப்போதும் சமரசத் தீர்வுக்கு உடன்படமாட்டார்கள் என்று இலங்கை அரசுகள் அது எந்த அரசாக இருந்தாலும் கூறி, அவை ஒவ்வொன்றும், இந்தியாவையும் பிற உலக நாடுகளை நம்ப வைத்திருந்தன. இதன் காரணமாகவே, இப்போது முடிவெடுக்கும் நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளினர்.இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 1985 ஆண்டில், ஆகஸ்டு 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி முடிவடையும் காலக் கெடுவைக் கொண்டிருந்தது. இப் பேச்சுவார்த்தை தொடங்கியதுமே அரசுத் தரப்பு நான்கு முக்கிய கோட்பாடுகளை முற்றிலுமாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பே திம்பு பேச்சுவார்த்தை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்த்தியது.இதனால் எரிச்சல் அடைந்தது இலங்கைத் தரப்பு அல்ல; மாறாக - தமிழ்ப் போராளிகள் மீது இந்திய அரசு அதிகாரிகள் கடும் கோபம் கொண்டனர்.இதே நேரத்தில் அதாவது திம்பு பேச்சு முடிவடையும் நாளுக்கு முந்தின நாள் (16-ஆம் தேதி) வவுனியா ராணுவ முகாம் அருகே உள்ள மதகொன்றின் கீழ் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் வவுனியா நூல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அந்த நூல்நிலையத்தினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, தீயும் வைக்கப்பட்டது.நூலகத்தில் இருந்த ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் தீக்காயத்துக்கு ஆளாயினர். கடைகள், கட்டடங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தில் இரண்டாயிரம் பேர் அகதிகளாயினர்.இந்நடவடிக்கையினால் கோபமுற்ற போராளிக் குழுக்கள் போர் நிறுத்த காலத்தில் சிங்கள ராணுவத்தினரின் செயல் ஓர் ஒப்பந்த மீறல் என்று வாதிட்டனர். இதனை ஏற்க இலங்கை அரசுத் தரப்பு மறுத்தது. இந்திய அதிகாரிகள் போராளிக் குழுவினருக்கு நெருக்குதல் கொடுத்தனர். தொடர்ந்து, போராளிக் குழுக்களின் அங்கத்தவர்கள் உடனடியாக தங்களது நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை இந்திய மத்தியஸ்த பார்வையாளர்களிடம் அளித்தனர்.அந்த அறிக்கையில், "இலங்கைத் தரப்பில் அளிக்கப்பட்ட யோசனைகளில் மாவட்ட சபைக்கு அதிகாரம் என்று கூறப்படுகிறது. உண்மையில் மாவட்ட சபைகளுக்கு நிர்வாகப் பொறுப்புகளே இல்லை. கீழ்மட்ட சட்டங்களைத் தயாரிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சட்ட நிர்ணய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவும் கூட ஜனாதிபதியின் அதிகார வரம்புக்குட்பட்டதுடன் அவரது அங்கீகாரத்தையும் பெற்றாக வேண்டும்.அதுதவிர, மாவட்ட சபைகளுக்கு உரிய நிதி கிடையாது. ஜனாதிபதி நியமிக்கும் கமிஷன் ஒன்று மாவட்ட சபைகளுக்குத் தேவையான நிதியை சிபாரிசு செய்து, அதையும் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்.இலங்கை அரசாங்கம் வைத்துள்ள யோசனைகள் மத்திய இலங்கை அரசை வலுப்படுத்துபவையாகவே உள்ளன. மாவட்ட சபை நிர்வாக அமைப்பிலும் தமிழ் மக்களை அடக்கும் நோக்கமே அதிகம்' - என்று கூறப்பட்டிருந்தது.மேலும் அந்த அறிக்கையில், "தமிழர் தேசிய இனத்துக்குரியவர் அல்ல - அவர்களுக்குத் தாயக உரிமையும் இல்லை - சுயநிர்ணய உரிமையும் கிடையாது - மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் உரிமையும் கிடையாது என்று இலங்கை அரசு மறுக்கிறது. பொதுவான சர்வதேச சட்டத்தின் மறுக்க முடியாத அம்சங்களில் சுயநிர்ணய உரிமையும் ஒன்று - அது மறுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் "பயனுள்ள கருத்துப் பறிமாறல்' நடைபெறும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டியும் பயன் இல்லை' என்றும் அறிக்கை கூறியது.அறிக்கையின் இறுதி அம்சமாக கூறப்பட்டது என்னவென்றால், "நாம் முன்வைத்த நான்கு முக்கிய கோட்பாடுகள் - தமிழ் மக்களது அடிப்படையானதும் - அத்தியாவசியமான உரிமைகளுக்குப் போராடும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையும் ஆகும். 1950-ஆம் ஆண்டில் சமஷ்டியாட்சி கோரியதால் அடக்குமுறையும் பாகுபாடும் தலைதூக்க, தவிர்க்க முடியாத நிலையில் ஈழமெனும் சுதந்திரத் தமிழ்நாடு கோரிக்கை உருவானது. ஆயிரக்கணக்கான தமிழர் மாண்டு, பல்லாயிரக்கணக்கானோர் சொத்துக்களை இழந்து, உழைப்பு, வசதிகள் இழந்து, அழிந்து, இன்னல்கள் அனுபவித்தது அனைத்தும் தமிழ் மக்கள் சம உரிமையோடும் - சுதந்திரமாகவும் இருப்பதற்காகவே.""ஆகவே குரோதமின்றி பொறுமையோடு இன்று நாம் திம்புவிலிருந்து பிரகடனப்படுத்துவது, தமிழ் தேசிய இனம் சார்பில் அல்லாது பேச்சுவார்த்தைகள் திம்புவிலோ அல்லது வேறு எங்குமோ நடைபெறுவது இயலாது. பேச்சுவார்த்தையின்போது நாம் வெளிப்படுத்திய மூலக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நியாயமான பேச்சு நடத்த இலங்கை அரசு தயாரா என்பதைத் திட்டவட்டமாக கூறும்படியும் கேட்கிறோம்.நாம் பேச்சுவார்த்தை நடத்தி வரும்பொழுதே எமது இனத்தை பூண்டோடு அழிக்கும் இலங்கை அரசின் நோக்கம் வெளிப்படுகிறது. கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்தினரால் வவுனியாவிலும் இதரப் பகுதிகளிலும் அப்பாவி மக்கள் 200 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நம் தாயகத்தில் தமிழ் மக்கள் சமாதானத்துடன், பாதுகாப்பாக வாழ முடியாத வேளையில் சமாதானப் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருப்பது கேலிக்கூத்தாகும். சமாதானப் பேச்சை நாம் நிறுத்திக் கொள்ள முயலவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படை நிபந்தனையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிவிட்டதனால் பேச்சுவார்த்தைகளே நடைபெற முடியாதிருக்கிறது''-என அவ்வறிக்கை கூறியது. இந்த அறிக்கையை இந்திய அரசுத் தரப்புக்கு அளித்து பத்திரிகைகளுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி, போராளிக் குழுவினரைச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் போராளிக் குழுவினர் இந்தச் சந்திப்புக்குத் தயங்கினர். இந்திய அதிகாரிகள் நெருக்குதலை அதிகரிக்க அதிகரிக்க அவை வாக்குவாதத்தில் முடிந்தது.
சகமனிதன் மீது அன்பு
ஆற்றல் பயன்பட வேண்டும்:
பாரதி கிருஷ்ணகுமார்



ஈரோடு,ஆக. 7: சகமனிதன் மீது அன்பு செலுத்த மட்டுமே மனித ஆற்றல் பயன்படவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு "எய்த விரும்பியதை எய்தலாம்' என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:இலக்கியப் படைப்புகள் சமயங்களுக்கு அப்பாற்பட்டவை. நல்ல புத்தகங்கள்தான் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துகின்றன. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் யாவும் வல்லரசாகிவிட முடியாது. வறுமையும், மதப் பிரச்னைகளும் எங்கு இல்லையோ அந்த நாடுதான் வல்லரசு தகுதியைப் பெறுகிறது.பேச்சும், எழுத்தும் சம அளவில் வைத்து போற்றப்பட வேண்டும். ஆற்றல்மிக்க பேச்சுகள் மூலம் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்பினால் பெறும் அதிகாரம்தான் நிலைக்கும். உலகில் பல நாடுகள் தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள, தன் சொந்த நாட்டு மக்களோடு சண்டையிட்டு வருகின்றன. அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் சிந்தனைகளை அடக்க நினைக்கும் நாடுகள் கண்டிப்பாக சிதைந்துபோகும்.சகமனிதனின் வளர்ச்சிக்கு மட்டுமே மனித ஆற்றலை பயன்படுத்தும் நிலை உருவாக வேண்டும். தற்போது உள்ள சந்ததியினர் ஒரு நல்ல சமுதாயத்தைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனாலும், எதிர்கால சந்ததி, நல்ல சமுதாயக் கட்டமைப்பில் வாழ்வதற்கு களம் அமைத்துக் கொடுக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.தவறுகளை தட்டிக்கேட்கும்தன்னம்பிக்கை வேண்டும்"இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பில் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியது:உலகில் உள்ள அனைத்து மொழிகளைக் காட்டிலும், தமிழ்மொழியில்தான் திறமையான எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்களுக்குரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. கேரளம் போன்று தமிழகத்திலும் சாகித்ய அகாதெமி ஏற்படுத்த வேண்டும். பிழைப்புக்காக தமிழை உரிமை கொண்டாடும் நிலை மாறி, தமிழுக்காக உண்மையாக உழைக்கும் நிலை ஏற்பட வேண்டும். உணவுக்கு வழியில்லாதவர்களின் வாழ்க்கை நிலையை எவ்வாறு முன்னேற்ற முடியும் என்பதை ஒரு நாடு சிந்திக்க வேண்டும். இதேபோல் வசதியுள்ளவர்களுக்குக் கிடைக்கும் தரமான கல்வி, மருத்துவம் போன்றவை சாதாரண மக்களுக்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும். காந்திய சிந்தனைகள் உள்ள மக்கள் இந்த நாட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவறுகளைத் தட்டிக்கேட்கும் தன்னம்பிக்கை, படித்தவர்களிடமும் உருவாக வேண்டும். நாட்டின் கலாசாரம், உணவு, உடை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் சமுதாய கட்டமைப்பை சீரழித்துவிடும். இந்தியர்களுக்கு உலகியல் சிந்தனை உண்டு. இவர்கள் மூலம் இந்தியா உலகுக்கு நிச்சயம் வழிகாட்டும் என்றார்.எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி கெüரவிக்கப்பட்டார். கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் வி.ஆர்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

கருத்துகள்

2/2) (1/2 இன் தொடர்ச்சி) எதற்கெடுத்தாலும் அரசையே நம்பி யிருப்பதை விட இலக்கிய ஆர்வலர்களும் படைப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் இலக்கியக்கழகம் ஒன்றைத் தொடங்க முன் வர வேண்டும். பேச்சுத் திறனும் செயல் திறனும் மிக்க ஆசிரியர் அதற்கான ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2009 2:52:00 AM

1/2) புத்தகத் திருவிழாவில் அனைவரும் அருமையாகப் பேசியுள்ளனர். பழ.கருப்பையா, பாரதி கிருட்டிணகுமார், ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் உரைகள் அனைவரும் உள்ளத்தில் பதிந்து வைத்துப் போற்றப்பட வேண்டியவையே. தமிழ் நாட்டில் 'சாகித்ய அகாதமி' தொடங்க வேண்டும் என ஆசிரியர் பேசியுள்ளார். அதன் கிளை தமிழ் நாட்டில் உள்ளது. அது போன்ற அமைப்பு தொடங்க வேண்டும் என்று பேசியிருந்தார் எனில், அவ்வாறு சொல்லித்தான் 'குறள் பீடம்' தொடங்கப்பட்டது. ஆனால், செயல்பாடின்றியே மறைந்து விட்டது. தமிழ் நாட்டில் யாருக்கேனும் பதவி கொடுக்க வேண்டும் என்றால் அமைப்பு தொடங்கப்படும். வைரமுத்துவிற்குப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு முடிவெடுத்தால்கூடக் குறள்பீடம் தொடங்கப்படலாம். ஆனால், தமிழ்நாட்டு அமைப்புகள் எல்லாம் துதி பாடவும் தமிழ்நலச் செயல்பாடின்மைக்காகவுமே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் பயன்பெற உதவலாம். ஆகவே, எந்த அமைப்பு இருந்தாலும் பயன் என்ன? புத்தக விழாக்கள் நடத்தும் அமைப்பினர் ஒன்று கூடி அப்படிப்பட்ட ஓர் இலக்கிய அமைப்பைத் தொடங்கி 'சாகித்ய அகாதமியின்' பணியை ஆற்றலாம். தொடர்ச்சி 2/2 காண்க.

By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2009 2:52:00 AM

நல்ல நூல்கள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கும்: பழ.கருப்பையா



ஈரோடு,ஆக. 7: நல்ல நூல்கள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை என்றார் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான பழ.கருப்பையா.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் "யோசிக்கும் வேளையில்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை இரவு அவர் பேசியது: பூங்குன்றனார் எழுதியது 14 வரிகள்தான். அதில் கூறப்பட்டுள்ள ""யாதும் ஊரே; யாவரும் கேளிர்'' என்ற வரிகள்தான் தமிழர்களின் சிந்தனையாக உலகெங்கும் அறியப்பட்டுள்ளது. எனவே குறைந்த அளவில் எழுதினாலும், நல்ல விஷயங்களை எழுதுவது சிறந்தது.மக்களுக்குப் பயனில்லாததை எழுதுவதைவிட, அதை நிறுத்திவிடுவது நல்லது. இதேபோல் மக்களும் நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். முதலில், படிக்கின்ற பழக்கம் உருவாகும்போது, தகுதியற்ற நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மிடமிருந்து படிப்படியாக அகன்றுவிடும். பின்னர் சிறந்த நூல்களை மட்டுமே வாசிக்கும் நிலை உருவாகும்.நாட்டுப்பற்று, தாய்மொழிப்பற்றை ஊட்டும் நூல்களை அதிகம் படிக்க வேண்டும். தொடர்ந்து நூல்கள் படிப்பது நம்மிடம் பல நல்ல மாற்றங்களை உருவாக்கும். சிறந்த சிந்தனைகள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கக் கூடியவை.திருவள்ளுவருக்கு... உலகின் மிகச்சிறந்த நூல் திருக்குறள்தான். இதை எழுதிய வள்ளுவருக்கு சிலை வைக்க, பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. தமிழர்கள் அறிந்திராத கன்னடக் கவிஞரின் சிலையை தமிழகத்தில் வைத்தால்தான், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. வள்ளுவரின் சிந்தனைக்கு மேலான சிந்தனை எதுவுமே இல்லை. சிலைகள் என்பவை வெறும் அடையாளங்கள்தான். கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்துவிட்டதாலேயே, மக்கள் அனைவரின் மனதிலும் திருக்குறள் புகுந்துவிட்டது என்று கூற முடியுமா? எனவே பெங்களூருவில் வள்ளுவருக்கு சிலை வைக்காவிட்டால் தமிழுக்கு நஷ்டமேற்பட்டுவிடப் போவதில்லை.தற்போது ஒழுக்கம் இல்லாத சமுதாயம் உருவாகி வருவது கவலைக்குரியது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலைநடக்கும் என்பது வேதனையளிக்கும் நிகழ்வு. கட்டுப்பாடு, ஒழுக்கம், நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் தலைமுறையின் தேவை அவசியமாகியுள்ளது.அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிப்பது மட்டும்தான் குறிக்கோள் என்ற லட்சியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு போதுமென்ற மனம், பகிர்ந்து வாழ்தல் ஆகியவற்றைப் புரியவைக்க வேண்டும் என்றார் பழ.கருப்பையா. தொழிலதிபர் கேகேஎஸ்கே.ரபீக் தலைமை வகித்தார். "மேவும் விரல் யார் உனக்கு?' என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சுதாங்கன் பேசினார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், டாக்டர் கே.எம்.அபுல் ஹசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

என்னம்மா, போன் ஒர்க் பண்ணலியா...? பாவம்மா நீ, என்னமோ தெரியலை, டெல்லியில உனக்கு மட்டும் எதுவுமே ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது...
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை காக்க கனடாவின் காத்திரமான நடவடிக்கை தேவை: 'தி பார்ரி எக்சாமினர்'
[வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 05:46 பி.ப ஈழம்] [பி.தெய்வேந்திரன்]
இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கனடா தனது பலத்தைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கனடாவில் இருந்து வெளிவரும் 'தி பார்ரி எக்சாமினர்' நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளேட்டில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் விபரம் வருமாறு:

இலங்கையில் நிலவிவரும் அரசியல் சூழ்நிலை சிறப்பானதாக இல்லை. அத்துடன், எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி தனிநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் சிறுவர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தனிநபர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் சித்திரவதை செய்யப்படுவதும் எல்லாப் பக்கங்களிலும் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன.

களத்தின் உண்மை நிலை என்ன என்பதை ஆராய்ந்தறிவதற்கான சுயாதீன வழிகளை அரசு தடைசெய்திருப்பது அனைவரதும் கவனத்திற்குரியது.

உள்நாட்டுப் போரில் தப்பிப்பிழைத்த தமிழர்கள் அரசின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் பட்டினி மற்றும் படுகொலைகள் மூலம் வாராந்தம் 1,400 பேர் உயிரிழக்கின்றனர் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல் உறுதியானது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கனடா உள்ளிட்ட எந்தவொரு அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளையோ அமைப்புக்களையோ சிறிலங்கா அரசு அந்த முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை.

இது எங்கோ தொலைவில் உள்ள மண்ணில் நிகழும் அட்டூழியங்கள் அல்ல. இங்கே பார்ரியில் உள்ள எமது உறவுகளினதும் நண்பர்களினதும் உள்ளங்களை நொறுக்கும் சோகம் இது.

ஆரோனும் றஞ்சி சுரேஷ்குமாரும் பார்ரியில் வசிக்கும் 40 தமிழர்களில் இருவர். ஒருநாள் றஞ்சி கண்ணீருடன் எனது அலுவலகத்திற்கு வந்தார்.

ஏனெனில், வன்னி முகாமில் உள்ள அவரது உறவினரின் நிலை குறித்து அவர் மிகவும் கவலை அடைந்துள்ளார்.

றஞ்சிக்காக நான் கவலைப்பட்டேன். ஏனெனில் அவரது குடும்பத்தை இலங்கையில் பாதுகாப்பதற்காக இந்த உலகினால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்.

இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கனடா தனது பலத்தைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு வழங்க மறுத்துள்ள உணவு, குடியிருப்பு வசதிக்கான பொருட்கள், மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்கள் போன்ற உதவிகள் நேரடியாக தமிழ் மக்களுக்குக் கிடைப்பதை நாம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

இந்த வழியில் நாம் வழங்கியுள்ள 75 லட்சம் டொலர் பெறுமதியான உதவிகள் மிகச் சரியான நடவடிக்கை. இந்த முகாம்களுக்கு இப்போது உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.

எமது வெளிவிவகாரத்துறை அமைச்சர் லோறன்ஸ் கனொன் இது தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மோதல் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதைத் தடுப்பது மற்றும் அனைத்துலகப் பார்வையாளர்கள் அவர்களிடம் செல்வதைத் தடுப்பது போன்ற செயல்களை சிறிலங்கா அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருக்கும் என்பதை கனடா சிறிலங்காவிற்குப் புரிய வைக்க வேண்டும்.

கனடாவின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஓபரேய், இந்த முகாம்களுக்குப் பயணம் செய்ய வேண்டும்.

இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஏனைய நாடுகளின் அவதானிகள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அறிவதும் ஆர்வம் தரக்கூடியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் காணாமல் போய்விடும்: கேணல் ஹரிகரன்
[சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2009, 11:48 மு.ப ஈழம்] [செ.நடராஜா]
சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும்.

சிறிலங்கா அரசு தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக இருந்தால் கடந்த 30 வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியாவின் அரசியல் ஆய்வாளரும் இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் இவ்வாறு தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தபோது அதனது புலனாய்வுத்துறையின் தலைவராகச் செயற்பட்டவர் கேணல் ஹரிகரன்.

அவரது கட்டுரையின் முழு விபரம் வருமாறு:

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கீழான சிறிலங்கா அரசு, நாட்டின் சுதந்திரத்திற்கான போர் என்ற கூச்சலுடனேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டைக்குத் தான் சென்றதாகக் கூறியது.

மக்கள் அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படாது வாழும் ஒரு நாடு பற்றிய கனவு குறித்தும் அது பேசியது.

இப்போது, பெரும் தொகையான ஆட்களையும் பொருட்களையும் அழியக் கொடுத்து போரை முடித்துவிட்ட பிறகு, அங்கு மேற்கிளம்பிவரும் சமூக - அரசியல் சூழல் அந்தக் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. அந்தக் கனவு கனவாகவே போய்விடக்கூடும்.

இப்போது ஒன்று தெளிவாகிவிட்டது, இலங்கை அரசியலில் வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற சொற்களின் பட்டியலில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் தூக்கி வீசப்பட்டுவிடும். அந்தப் பட்டியலில் 'சிறுபான்மையினர்' என்ற சொல்லும் விரைவில் சேர்ந்துகொள்ளக்கூடும்.

மேற்கிளம்பும் புதிய ஒழுங்கு

இலங்கை முழுவதும் இப்போது ஒரு புதிய ஒழுங்குமுறை மேற்கிளம்பி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கூட்டணிக்குள் மட்டுமல்ல, ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளும் இந்தப் புதிய ஒழுங்கைக் காணமுடிகிறது.

முதன்மை அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் இதனைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படை சமஷ்டிதான் என்று 2002 அமைதிப் பேச்சுக்களின்போது ஏற்றுக்கொண்டிருந்தார்.

இப்போதோ, தமது அரசியல் தேவைக்கேற்றாற்போல் அந்த விடயத்தை பலிபீடத்தில் தூக்கி வீசிவிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவோ அவரது கட்சியோ வெட்கப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதனைவிட மேலானது ஒன்றல்ல.

அரசியல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடுகள்

சிறிலங்காவை அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்சிகள், அவர்களின் தலைவர்கள் பலரைப் போலவே இவ்வாறு குத்துக்கரணம் அடிப்பது வழமையானதுதான். இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. அது அவர்களின் அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது.

தேர்தலுக்கு முன்னராக எடுக்கப்படும் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகளால் பொதுமக்கள் கவரப்படுவார்களாக என்பது சந்தேகத்திற்குரியதுதான்.

சிறிலங்காவின் அரசியல் நடவடிக்கைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்ததற்கு இத்தகைய அரசியல் இரட்டைப் பேச்சுக்களே முதன்மைக் காரணம். இறுதியில், சரியோ தவறோ, தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தூக்கினார்கள். ஏனெனில் தோற்றுப் போன அரசியல் நடவடிக்கைகளையே அவர்கள் தொடர்ந்தும் பார்த்து வந்திருந்தார்கள்.

மகிந்தவும் அவரது வாக்குறுதிகளும் தேர்தலும்

கிழக்கு மாகாணத் தேர்தல்கள் முடிந்ததும், அரசியலமைப்பின் 13 ஆவது சட்டதிருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் மீண்டும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், இப்போது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அவர் எந்த அவசரத்தையும் காட்டவில்லை போன்றே தோன்றுகின்றது. இதற்கு வலுவான உள்நாட்டு அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கலாம்.

தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த தீர்மானித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இப்போது தனக்கு உள்ள பிரபலத்தை/செல்வாக்கை லாபமாக்கி இரண்டாவது பதவிக் காலத்தையும் பெற்றுவிடுவதற்கு அவர் எண்ணுகிறார் என்பது, அண்மையில் அவர் அளித்த நேர்காணலில் இருந்து தெரிகிறது. குறிப்பாக தெற்கில் தனது வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் விரும்புகிறார்.

அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பான்மை மக்களின் அனுமதி உண்மையில் தேவையா?

ஒருவேளை அப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மக்களின் ஆணை வேண்டும் எனில், அவர்களின் நாடித்துடிப்பை அறிந்து பார்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தலே உண்மையானதாக இருக்கும்.

அரச தலைவர் தனது பதவிக் காலத்தின் ஒரு பகுதியை இழக்காமலேயே நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கும் அது உதவும்.

மாறாக, அரச தலைவருக்குக் கிடைக்கக்கூடிய உறுதியான ஆதரவானது நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரும் வெற்றி பெறுவதற்குக்கூட வழிவகுக்கலாம்.

அப்படி நடந்தால், சிறிய கட்சிகளில் தங்கியிருக்கும் நிலையில் இருந்து அரச தலைவரை வெளியே கொண்டுவருவதற்கு இது உதவக்கூடும்.

ஆளும் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் போன்றோர் அரச தலைவரின் கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் நிலையைக் குறைக்கவும் உதவக்கூடும்.

ஜனநாயகத் தேர்தல் சாத்தியமா?

முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ஏறத்தாழ தமிழர் சனத்தொகையில் 20 விழுக்காட்டினர் விடுவிக்கப்பட்டால், தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடக்கும்.

அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அரசு பதிலளிக்க வேண்டிய கேள்வி இது.

ஏனெனில் மக்களின் விடுதலை தொடர்பில் அரசின் வெவ்வேறு கிளைகளில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. அத்தோடு அரசின் இலக்குக்கும் அது அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் பாரம்பரியமாகவே பெரிய இடைவெளி காணப்படுகின்றது.

அனைத்துக் கட்சிக் குழு முடிவு

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்ந்த அனைத்துக் கட்சியின் முடிவுகள் தொடர்பிலும் அரச தலைவர் ஆர்வத்துடன் இருக்கிறார். இந்தக் குழு 2006 ஆம் ஆண்டு மகிந்த அரச தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பெரும் ஆரவாரங்களுடன் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் முடிவுகள் எவையும் செயற்படுத்தப்படவில்லை என்றால் அது செயல் இழந்துபோன ஏனைய குழுக்களைப் போன்ற ஒன்றாகவே அமையும்.

குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. நிறைவேற்று அரச தலைவர் முறையில் இருந்து அடிமட்டங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை வழங்குவது வரையில் பரந்தளவு விடயங்களை அது உள்ளடக்கியுள்ளதாக குழுவின் தலைவர் திச விதாரண கூறினார்.

எனினும் இந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இப்போது ஆபத்தில் உள்ளது. அரசியலமைமைப்பைத் திருத்துவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட முயற்சியின் வரிசையில் இதனையும் வரலாறு சேர்த்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்திய நிலைப்பாடு

இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது.

அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது.

எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது.

ஆனால், இவை எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய உறுதியளிக்கப்பட்ட பாதையில் நிகழும் நடவடிக்கைகள் அல்ல.

இது சிறிலங்காவின் குறைபாடும் அல்ல அவர்களின் நடைமுறைப்படுத்தலில் உள்ள குறைபாடு.

சிறுபான்மையினர் அற்ற இலங்கை

சிங்களவர்கள் அல்லாத சமூகத்தவரை சிறுபான்மையினர் என்று சொல்வதை அகற்றிவிடுவதே தனது விருப்பம் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அதாவது சிறுபான்மையினர் அற்ற சிறிலங்காவை உருவாக்குவதே அவர் கனவு.

இது மிகச் சிறந்த உணர்ச்சிகரமான விடயம். ஆனால் அரசியல், பொருளாதார, அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை அந்தக் கனவு அது நனவாகவோ யதார்த்தமாகவோ முடியாது.

சிறுபான்மையினர் இல்லாத சிறிலங்கா என்கிற கனவு, யதார்த்தத்துக்குத் திரும்பும் நடவடிக்கைகளால் கலைக்கப்படும் வரையில் தூரத்தில் தெரியும் கனவாகவே தொடரும். அதுதான் உண்மையாகும் என்று தோன்றுவதான் கவலை தரும் விடயம்.

சாத்தியமாகா அதிகாரப் பகிர்வு

இரு சமூகங்களுமே ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் செய்து கொண்டதன் மூலம் இனப் பிளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மேற்கிளம்பி வரலாம்.

தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு தட்டிக்கழித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும்.

முன்னர் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி 6 மாதங்களுக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படாமல் 3 லட்சம் மக்களும் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவது இதற்கு மேலும் மேலும் உரமூட்டுவதாக அமையும்.

பல பத்தாண்டு வலிதரும் முரண்பாடுகளின் பின்னர் இப்போது பயம் மற்றும் சந்தேகம் இல்லாத சூழலே இலங்கை மக்களுக்கு வேண்டியது. முடிவெடுக்கும் அதிகாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமான பங்கு கிடைக்கும் போதே அது சாத்தியமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.

மீண்டும் ஒரு சுழற்சி தேவையா?

சிங்கள - தமிழ் சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சிங்கள, தமிழ் அரசியலுக்கு இடையில் 'பாணும் பட்டரும்' மாதிரி அது வந்துவிட்ட பின்னர், ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடையாளத்தை கரு மேகங்களாக அது மறைக்கின்றது.

அதன் விளைவு இலங்கை அரசியலில் இருந்து கடும்போக்கு வாதத்திற்கும் அதில் இருந்து ஆயுத முனைப்புக்கும் அதில் இருந்து கிளர்ச்சிக்கும் அதில் இருந்து பயங்கரவாதத்திற்கும் அதில் இருந்து போருக்கும் அதில் இருந்து இப்போது அரசியலுக்குமாக ஒரு முழுச் சுழற்சியை முடித்துள்ளது.

இதே மாதிரியான சுற்றுக்குள் மீண்டும் ஒருமுறை இலங்கை பயணிக்க வேண்டுமா? இதுதான் இன்று ஆட்சியாளர்கள் முன்னும் மக்கள் முன்னும் உள்ள புறந்தள்ள முடியாத முக்கியமான கேள்வி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் இனச்சிக்கலுக்குத் தீர்வாகாது


பிடித்தது: எனக்குப் பிடித்த புத்தகம்



சின்ன வயதில் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களையே புரட்டிப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தன. "இரும்புக் கை மாயாவி, இமயத்தில் மாயாவி, மஞ்சள் பூ மர்மம்' போன்ற முத்து காமிக்ஸ் புத்தகங்களே அகராதிகளைப் போல எங்கள் கைகளில் அதிகமான புழக்கத்தில் இருக்கும். அப்போது பரிசுப் புத்தகங்களாக பாரதியாரின் கவிதைகளும், வனவிலங்குகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கும்.கல்லூரிப் பருவத்தில் "முன்னேற்றப் பதிப்பகம்' மூலம் சலுகை விலையில் கிடைக்கும் பல பொதுவுடைமைப் புத்தகங்கள் எனக்குள் சமூகம் சார்ந்த உள்ளுணர்வை ஏற்படுத்தின. அப்போதுதான் "குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. "வால்காவிலிருந்து கங்கை வரை' நூலைப் படிக்கும்போது ஒப்புமையை உணர முடிந்தது.கல்லூரி நாட்களில் புதுக் கவிதை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. வெகுஜன இதழ்களில் வருகிற வரிகளை இரசித்து, உணவுக் கூடங்களில் நடக்கும் விவாதங்கள் சுவாரசியமானவை. கல்லூரி முடித்துப் போட்டித் தேர்வுக்கான ஆயத்தங்களில் இலக்கியம் கைகளிலிருந்து நழுவ, பொதுஅறிவு, சரித்திரம், பூகோளப் புத்தகங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. களப்பணியின் பணியே படிப்பானது; மக்களே புத்தகமானார்கள்; அரசு இலக்குகளே மனப்பாடப் பகுதிகளாயின; ஆய்வுக் கூட்டங்களே வாசக வட்டங்களாயின.மனம் குறித்த கேள்விகளும், வாழ்வின் நோக்கம் குறித்த சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்த நேரத்தில் ஜென், கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரூமி, கலீல்கிப்ரான், ரிச்சர்ட் பேக், இக்ரீஸ் ஷா, நீட்சே, காஃப்கா போன்ற நூல்கள் உதவின. அவற்றின் மூலம் துணிச்சலும், எதிர்காலம் குறித்த அச்சமின்மையும் ஏற்பட்டன.மதுரையின் ஐந்தாண்டுப் பணியில் வாசிப்பை இயக்கமாக்க ஒரு கருவியாக இருக்க முடிந்தது. ஆங்கில இலக்கியம், மனவியல், மேலாண்மை ஆகியவற்றின் பரிச்சயம் அப்போது நிழற்குடையை நிறுவி தனிமை வெப்பத்தைத் தணித்தன.ஷேக்ஸ்பியர், மார்லோ, டிக்கன்ஸ், ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ் வர்த், அரவிந்தர், தாகூர் என வாசிப்பை விசாலமாக்க, பணி பன்னீர் தெளித்தது.எத்தனையோ அரிய புத்தகங்கள் வாழ்வின் ஒவ்வொரு பிடியையும் தீர்மானிக்கும் திக்குகளாக எனக்கு இருந்திருக்கின்றன. வாசிக்கின்ற ஒவ்வொரு வரியையும் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் கலையைக் கற்றபோது, என் படிப்பு அடர்த்தியானது.திருக்குறள் குறித்த மனித வள ஆய்வுக்காக அதைப் பயில ஆரம்பித்தபோது, இன்றைய மேலாண் வல்லுநர்கள் கண்டுபிடித்தவற்றையெல்லாம், உள்ளுணர்வின் மூலம் உணர்த்திய வள்ளுவர் உள்ளம் துள்ள வைத்தார்.தகவல் தொடர்பு பற்றி ‘நஹஹ் ண்ற் ப்ண்ந்ங் நட்ஹந்ங்ள்ல்ங்ஹழ்ங்' (பட்ர்ம்ஹள் கங்ங்ஸ்ரீட்)தொகுத்த நூல் முக்கியமானது. அதில் உள்ள பல குறிப்புகளைத் திருக்குறளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும்.அண்மையில் ‘ஊழ்ன்ண்ற்ள் ர்ச் ஜ்ஹழ்’என்ற நூல் எனக்குப் போரைப் பற்றிய புதிய பார்வையை வழங்கியது. ‘ரண்ள்க்ர்ம் ர்ச் ற்ட்ங் ஸ்ரீழ்ர்ஜ்க்’ என்கிற நூல் அவ்வப்போது தலைதூக்கும் கர்வத்தை அமுக்கித் தள்ளியது. ‘பட்ங் ஆப்ண்ய்ந்’ என்கிற நூல் எனக்கு மூளையின் மின்னல் வேகச் செயலை விளக்கியது. ஜேரிட் டயமண்ட் எழுதிய ‘The rise and fall of the third chimpanzee’ இனிய நூல்.இப்படி எண்ணற்ற நூல்கள் நம் பார்வையை விரிவாக்கிக் காட்டும் திறனோடு சந்தையில் வந்து விழுந்தவண்ணமிருக்கின்றன. தன் வாழ்வில் 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஐசக் அஸிமோவ், விமானப் பயணத்திலேயே புத்தகத்தை முடித்த எட்வர்ட் டீ பேனோ ஆகியோர் பற்றிப் படிக்கும்போது நம் வாசிப்பின் வறுமையை உணர முடியும்.இந்த ஒவ்வொரு நூலுமே என்னைப் பரிணாம வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் தட்பவெப்ப மாற்றங்கள். இங்கு தகுந்தவையே எஞ்சுகின்றன; மிகுந்தவையே மிஞ்சுகின்றன; விஷயமுள்ளவையே விஞ்சுகின்றன

பொதுநலப் போர்வையில் சுயநலம்!

தலையங்கம்:: பொதுநலப் போர்வையில் சுயநலம்!



மருத்துவச் செலவுகள் பொதுவாக கைக்கு மீறியதாக இருப்பதாலும், குறிப்பாக ஏழைகளுக்கு அறுவைச் சிகிச்சை மருத்துவம் என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு செலவு மிக்கதாக மாறிவிட்டதாலும், எல்லாருக்கும் முக்கிய அறுவைச் சிகிச்சை மருத்துவத்தை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்குவது அரிது என்பதாலும், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு. கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார்.இத்திட்டத்தின் நோக்கம், ஏழைகள் தங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து தேவைப்படும் அறுவைச் சிகிச்சையைச் செய்துகொள்ளலாம். அதற்கான செலவை, காப்பீட்டு நிறுவனம் ஈட்டுத் தொகையாக அந்தத் தனியார் மருத்துவமனைக்கு அளித்துவிடும். இதனால் ஏழையை எந்தத் தனியார் மருத்துவமனையும் விரட்டி அடிக்காது.ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்காக "ஸ்டார் ஹெல்த்' இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கான சந்தா தொகையாக ரூ.517 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 320 தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் எஸ். விநாயகம், நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ""தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள 14 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒரு சிறப்பு வார்டு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக உயர் தரத்தில் உருவாக்கப்படும். இவ்வாறு அரசு மருத்துவமனையை மேம்படுத்தி சிகிச்சை அளிப்பதால், காப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதி அரசுக்கே திரும்பக் கிடைக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார்.அதாவது, தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சிகிச்சையை ஏழை பெறுகிறார் என்பதோடு, ஏதோ ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டிய காப்பீட்டுத் தொகை அரசு மருத்துவமனைக்குக் கிடைத்துவிடுகிறது.இதே விஷயத்தை கொஞ்சம் மாற்றிப் போட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.எந்தவொரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும், தோராயமாக அளிக்க நேரிடும் 60 சதவீத ஈட்டுத் தொகை, தனக்குக் கிடைக்க வேண்டிய 40 சதவீத லாபம் ஆகியவற்றை தோராயக் கணக்குப் போட்டுத்தான் ஆண்டுச் சந்தாவைத் தீர்மானிக்கின்றன. இதிலும் எதிர்பார்த்த அளவுக்கு நோயாளிகள் ஈட்டுத்தொகை கேட்பு இல்லையென்றால், லாபத்தின் அளவும் அதிகமாக இருக்கும்.தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவச் செலவுக்கான ஈட்டுத்தொகையை காப்பீட்டு நிறுவனம் தந்தே ஆகவேண்டும். வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். கொடுக்காமல் இருக்கவே முடியாது. ஆனால், அரசு மருத்துவமனைகள் அப்படியல்ல. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாமதப்படுத்தலாம். அல்லது சிறப்பு வார்டில் பத்து ஏழைகளுக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை நடந்தால் அதில் 5-க்கு மட்டும் காப்பீடு கோரும்படியும், மீதி 5 நோயாளிகளை வழக்கமான பொது வார்டு கணக்கில் சேர்ப்பதும் பெரிய விஷயமல்ல.ஏழைகளுக்கான உயிர்காப்பு உயர் சிகிச்சைத் திட்டத்திற்கான ஈட்டுத்தொகை மிகமிகத் தாமதமாகக் கிடைக்கும் என்ற சூழல் ஏற்படும், அல்லது வதந்தி பரவும் என்றால், தனியார் மருத்துவமனைகள் ஏழைகள் மீது பாசத்தைப் பொழியாது. "அரசு மருத்துவமனையிலேயே சிறப்பு வார்டு இருக்கிறதே, அங்கேயே போங்கள்' என்று விரட்டி விடுவார்கள்.ஆக, ஏழைகள் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே வந்து சேரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆண்டுச் சந்தா ரூ.517 கோடியில், காப்பீட்டு நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.அரசின் காப்பீட்டுத் தொகை, அரசு மருத்துவமனைக்கே இப்படியாகச் சுற்றி வளைத்து வருவதைவிட, அரசு நிறுவனமான எல்.ஐ.சி-க்கே இந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தந்திருந்தால், செலவானாலும் அரசுக்கே, மிச்சமானாலும் அரசுக்கே என்று ஆகாதா?மருத்துவக் காப்பீட்டுக்கு சந்தா என்பதும், ஏழைகள் பலனடைவார்கள் என்பதும் சுயநலத்தில் சற்று பொதுநலமும் கலந்திருப்பது என்பதுதானே தவிர வேறென்ன?அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளைவிடத் தரம் மிகுந்ததாக மாற்றப்படுவதற்கு முயற்சிக்காமல், தர்மத்திற்கு நடத்தப்படும் தர்மாஸ்பத்திரிகளாக்குவதுதான் அரசின் நோக்கம் போலிருக்கிறதே. கருணையின் பெயரால் நிதி தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது. அவ்வளவே!
கருத்துக்கள்

திரைக்குப்பின்னால் உள்ளதை வெளி்ச்சம் போட்டுக் காட்டுகிறது ஆசிரியருரை. காப்பீட்டுத் தொகைக்கு என்று இல்லாமல் அரசு மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளையும் அரசு தனியார் மருத்துவமனைக்கு ஈடாக உயர்த்தக் கூடாதா? காப்பீட்டுப் பங்குத்தொகை இல்லாமலே சிறப்பான மருத்துவ வசதி அளிக்க இயலுமே! புதிய சிந்தனைகளை அளித்துள்ளது ஆசிரியருரை. மக்கள் சிந்தித்து அரசை நல்ல வழியில் முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2009 2:41:00 AM

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 68: திம்பு பேச்சு வார்த்தை!



திம்பு பேச்சுவார்த்தை
ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.""இலங்கை ராணுவத்தினருக்கும் எமது விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளை கவனமாகப் பரிசீலனை செய்துள்ளோம். இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தம் வகிக்கும் நிலையையும், நல்லுறவையும் ஏற்படுத்தும் பணியையும் மதிப்பதோடு, எமக்களித்த வாக்குகளையும் உறுதிகளையும் ஏற்பதோடும், தமிழர் தேசிய பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குரிய திட்டவட்டமான யோசனைகளை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கு வேண்டி அதற்கு உகந்த சூழலையும், அமைதியை நிலைநாட்டுவதற்குரிய நிபந்தனைகளையும் உருவாக்குவதற்கு உதவ, குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக இங்கு கைச்சாத்திடும் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த நாம் கூட்டாக தீர்மானித்துக் கொண்டோம்.குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக சம்மதிக்கும் அதேவேளையில், முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத் திட்ட அமைப்பினுள் அடங்கும் ஒழுங்குகளும் நிபந்தனைகளும் எம்மை சமநிலை அற்றவர்களாக்குகின்றது. சிந்திப்பதற்குரியவை எமது மாற்று யோசனைகள் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டிருந்தன.(அ) (1) போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் அளிக்கிறோம்.(2) புதிய சிங்கள குடியேற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பதிலாக, வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நிறுத்துவதற்கு வலியுறுத்துவது வேடிக்கையானது. இந்தப் பகுதிகளில் ராணுவத்தாலும் சிங்கள ஆயுதந்தாங்கிய குடியேற்ற வாசிகளாலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்கு ஆளானால் என்ன செய்வது? இவ்வகை அரச அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்.(3) முதல் கட்ட அட்டவணை, காலத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலைகள் தொடருமானால் அவை ஒப்பந்த மீறலாக கருத வேண்டும்.(ஆ) அரச பயங்கரவாத - அவசர காலச் சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் மூன்றாவது சட்டம் 2-வது பிரிவில் உள்ளபடி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸôரிடம் ஒப்படைப்பது சரியல்ல.(இ) (1) போர் நிறுத்தம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களுக்குள் அதாவது இப் பேச்சுவார்த்தை (ஜூலை 8, 1985-இல்) தொடங்கும் நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் அரசியல் தீர்வுக்கான "செயல் திட்டத்தை முழுமையாக அளிக்க', இலங்கை அரசு முன்வர வேண்டும்.(2) இப்பேச்சுவார்த்தைக்கு "செயல்திட்ட வரைவை' ஏற்றுக்கொள்வதையே நாங்கள் நிபந்தனையாக வைக்க விரும்புகிறோம். தமிழர்களின் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வுக்கு இடமளிக்காமல், அவர்களை ஏமாற்றி பேச்சுவார்த்தை நாடகம் என நடத்தி, இறுதி முடிவு எட்டப்பட்டாலும் அவற்றைக் குப்பையில் போடுகிற சிங்கள அரசுகளின் செயல்களால் பெற்ற அனுபங்களே இவ்வாறு நிபந்தனை வைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.நான்காவது கட்டத்துக்குண்டான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதில் நல்ல யோசனைகளை எமது பார்வைக்கு வைக்க வேண்டுகிறோம்.(அ) போர் நிறுத்த கால எல்லை நீட்டிப்புக்குச் சம்மதிக்க முடியாது.(ஆ) போராளிக் குழுக்களைத் தீவிரவாதிகள் (Militant) என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியை "தமிழரது அரசியல் தலைமை' என்றும் குறிப்பிடப்படுவதையும் நாங்கள் மறுக்கிறோம்.இந்த யோசனைகள் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு, இவற்றை இலங்கை அரசுக்கு அறிவித்து அவர்களும் ஏற்றால், அவற்றை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.திம்பு பேச்சுவார்த்தை 1985-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கால அட்டவணையைக் கொண்டிருந்தது.இப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக பூட்டான் மன்னர் அனைவரையும் வரவேற்று தேநீர் விருந்து அளித்தார். போராளிக் குழுக்களின் அங்கத்தவர்களும் நீண்ட நெடுநாளைக்குப் பின்னர் ஒருவரையொருவர் அப்போதுதான் சந்தித்ததால், ஓர் இளகிய சூழல் நிலவியது.பின்னர், பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (PLOT) சேர்ந்து ஒரு குழுவாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு ((EROS) அடங்கிய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENLF)-யினர் ஒரு குழுவாகவும் வந்திருந்தனர்.இதில் ஒவ்வொரு அமைப்பும் தலா இருவர் வீதமும் சிங்கள அரசின் சார்பில் ஜெயவர்த்தனவின் தம்பி ஹெக்டர் ஜெயவார்த்தன தலைமையில் ஒரு குழுவும் பங்கேற்றது.அ.அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தம், வரதராஜ பெருமாள், சத்யேந்திரா, ராபர்ட், ரத்தினசபாபதி, ராஜிவ்சங்கர், சித்தார்த்தன், வாசுதேவா, திலகர், யோகி உள்ளிட்ட 13 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சு என்பது ஆக்கப்பூர்வமாக இல்லை. தமிழர்கள் பயனடையக் கூடாத பேச்சுக்களையே சிங்கள அரசுத் தரப்பில் பேசினர்.இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மறைந்த புஷ்பராஜா எழுதியிருப்பதாவது:"எப்பவுமே சிங்கள அரசாங்கத்தின் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதில்லை. பிரச்னையைத் தீர்க்கப்போவது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி, காலத்தைக் கடத்துவது அவர்களது அரசியல் சூத்திரமாகும். இந்த நடவடிக்கையில் இலங்கை பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தொடங்கி இதுவரை அதுதான் நடந்து வருகிறது. இனியும் அதே சூத்திரமே கையாளப்படும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை'. (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக்.417).இந்த இழுத்தடிப்புப் பேச்சு 1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் திடீரென மாற்றப்பட்ட தமிழர்களின் விருப்பங்களுக்கெதிரான பழைய 14 அம்சத் திட்டத்தையொட்டியே அமைந்தது. இது போராளிக் குழுக்களுக்கு வெறுப்பைத் தந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கமும் வெறுப்படைந்தார். காரணம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று அம்மாநாடு "திடீர்' என ரத்தான சம்பவத்தில் அவரும் ஒரு பங்கேற்பாளர்.வட்ட மேஜை மாநாட்டிலேயே உரிய அதிகாரம் கொண்ட தமிழ் மாநில அமைப்பு என்கிற ஏற்பாடு இல்லை. அரைகுறையான அதிகார ஒப்படைப்புத் திட்டத்தையும் ஸ்ரீமாவோ, புத்த பிக்குகள் சங்கத்தினர், ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாதிகள் எதிர்த்த காரணத்தால் பின்வாங்கியதாக ஜெயவர்த்தன நாடகமாடினார். அதே திட்ட அடிப்படையில் இப்பொழுதும் பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தனர்.



சென்னை, ஆக.6: இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய எம்சிபி ஆம்ஸ்டர்டாம் கப்பல் சென்னைத் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். 15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு சனிக்கிழமை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐநா அமைப்புகளின் மூலம் இந்நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதியளித்திருப்பதாக தமிழக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கiளை நயவஞ்சகமாக கொன்றுவிடத் துடிக்கும் சிங்கள, இந்திய அரசுகளும் அதன் அமைப்புகளும் உண்மையான பொருட்களை எடுத்து சிங்கள மக்களுக்கு கொடுத்துவிட்டு, கலப்படம் செய்யப்பட்ட நஞ்சு கலந்த பொருட்களையே தமிழ்மக்களுக்குக் கொடுப்பார்கள். யார் கேட்பது! கள்வரும் அவர்களே! பிடிப்பவர்களும் அவர்களே! பரிசோதிப்பவர்களும் அவர்களே! பொலிசாரும் அவர்களே! நீதிபதிகளும் அவர்களே! தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞர் போன்ற பெரிய கட்சிகளின் தலைவர்கள் அயலில் இருந்து வந்த பெரிய தலையிடி நீங்கியது என்பது போல ராஜபக்சவுடன் சேர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழீழத்தை உச்சரித்ததோடு சரி. தேர்தல் தோல்வி ஏற்படுத்திய நடுக்கத்தில் அவர் தான் உச்சரித்த வார்த்தைகளையே மறந்து விட்டார். ஒரு சிறிய இனத்தையே அழித்து தாம் பிராந்திய வல்லரசாகத் துடிக்கும் சிங்கள-இந்திய சனநாயகம்!!!!!!!!

By Patrick
8/7/2009 12:47:00 AM

மு.கருநநிதியும் கருணவும் ஒன்றுதான் இருவரும் தமிழினே துரோகிகள். சுயனலவாதிகள். தமிழினா வரலாரில் பொறிக்கப்பட்ட எட்டப்பன்.

By Karikalan
8/6/2009 8:17:00 PM

to whom cheat karunanithi, is it a gift for the bribe you got from rajapakse. Or cluster bombs and chemical bomb to kill 300000 tamils in the refugee camp.You will do it because you are a dirty man and do anything for money

By VSK
8/6/2009 6:06:00 PM

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்களியுங்கள்
நெதர்லாந்துத் தமிழ் அமைப்பு
பிரசுரித்த திகதி : 06 Aug 2009

அன்பார்ந்த யாழ், வவுனியாவாழ் தமிழீழமக்களே!

வணக்கம்.

எதிர்வரும் சனியன்று (08.08.2009) தாயகத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

உலகமே வெட்கித்தலைகுனியும் பாரிய இனப்படுகொலைகளை வன்னியில் நடாத்திமுடித்த கையோடும், 3 இலட்சம் மக்களை முட்கம்பிவேலிகளிற்குள் அடைத்து வைத்துக்கொண்டும் இத்தேர்தலை சிங்களஅரசு அவசர அவசரமாக இரத்தக்கறையுடன் நடாத்துகின்றது.

இலங்கையில் கடந்த 30ஆண்டுகளாக நடைபெற்ற ஆயுதப்போராட்டமானது பயங்கரவாதப்பிரச்சனையேதவிர தமிழ்மக்களிற்கான உரிமைப்போராட்டமல்ல என்பதனை வெளியுலகிற்குத்தெரிவிக்க இத்தேர்தலை சிங்களஅரசு பயன்படுத்தப்போகின்றது. எனவே,சிங்களஅரசின் இக்கபடநோக்கத்தை நிறைவேற்ற பெரும் இனஅழிவைச்சந்தித்தநாம் அனுமதிக்கக்கூடாது.

தாயகத்தில் அகிம்சைரீதியிலான போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கப்பட்டபோதுதான் ஆயுதப்போரட்டம் வெடித்தது. இன்று அந்த ஆயுதப்போராட்டம் பெரும் இனஅழிப்பின்பின் மௌனமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழர்களின்பேராட்டம் தணிந்துவிடவில்லை.

அது தற்போது வேறுவடிவம் பெற்றுள்ளது. இந்தநேரத்தில்தான் யாழ், வவுனியாவாழ் தமிழ்மக்கள் இத்தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். இத்தேர்தலில் தன்கபடநோக்கத்தை நிறைவேற்ற சிங்களஅரசானது பலதுணைக்குழுக்களை தன்னோடு இணைத்தும் தனியாகவும் போட்டியிடவைத்துள்ளது. அத்துடன், முகாம்களில் வாழும் சிலமக்களிற்கு சலுகைகளைப்புரிகின்ற தேர்தல்காலநாடகங்களையும் சிங்களஅரசும் இக்குழுக்களும் இன்று அரங்கேற்றி நன்றாகவே நடிக்கின்றார்கள். இவ் நடிப்பைக்கண்டு எமதுமக்கள் ஏமாந்துபோய்விடக்கூடாது.

இச்சலுகைகளிற்காக பல்லாயிரம் மாவீரர்களும் பல இலட்சக்கணக்கான தமிழ்மக்களும் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கவில்லை, என்பதனையும் நிரந்தரத்தீர்விற்காகவே அவர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தார்கள் என்பதனையும் நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாது.

எனவே, தங்களின் பலநாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்கள் சிங்களஅரசினால் ஏற்கனவே பறிக்கப்பட்டாலும் தமிழ்மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே. இத்தேர்தலிலும் 'தமிழ்மக்கள் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவந்தபிரதேசங்களில் சுயநிர்ணயஉரிமையுடன்கூடிய ஆட்சியே இனப்பிரச்சனைக்குத்தீர்வாக அமையும்' என்று பலஉயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கே வாக்களிக்குமாறு யாழ், வவுனியாவாழ் தமிழ்மக்களை அன்போடும் உரிமையோடும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

மனதில் கவலைகளையும் சோர்வையும் சுமந்து வாக்களிக்காமல் இத்தேர்தலைப் புறக்கணித்தால், எதிரியே வெல்வான்.
எனவே, வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்.
உங்களிற்குக் கிடைத்திருக்கும் இத்தேர்தல்வாக்கை
தமிழினப்படுகொலைகளைப்புரிந்த சிங்களஅரசிற்கெதிராகப் பயன்படுத்துங்கள்.

தமிழினஉரிமையை வென்றெடுக்க சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்.
தமிழர்களிற்கு சிங்களஅரசால் இழைக்கப்படுகின்ற கொடுமைகளையும் பாரிய உயிர்ச்சேதங்களையும் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையையும் இத்தேர்தல்மூலம் வெளிப்படுத்துங்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்களியுங்கள்!

தமிழினப்போராட்டம் வெல்லும்வரை நாம் அனைவரும் இணைந்து ஒன்றாய்போராடுவோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்
நன்றி

நெதர்லாந்துத்தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு

இலங்கைத் தமிழர்கள்
இந்தியா, சீனா மீது கடும் கோபம்
பிரசுரித்த திகதி : 06 Aug 2009

போர் முடிவடைந்து இரு மாதங்கள் ஆகியுள்ளபோதும், இப்போரை முன்னெடுத்துச் செல்ல ஆதரவு வழங்கிய இந்தியா, சீனா நாடுகள் மீது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். புலிகளுக்கு எதிரான போரில் சீனா பல தொன் பெறுமதியான ஆயுதங்களையும், ஆயுத தளபாடங்களையும் வழங்கியதால் அவர்கள் மீது கடும்கோபமுற்றிருக்கும் தமிழர்கள், மேற்கத்தைய நாடுகளின் மனித உரிமைகள் மீதான வாக்கெடுப்பு வந்தபோது, இலங்கைக்குச் சார்பாக புதுடில்லி மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக இந்தியா மீது கோபமாக உள்ளனர்.

இலங்கைக்கு சீனா உதவிசெய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை சீனாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஸ்தானிகம் முன்பாக தமிழர்கள் கடந்த திங்கட்கிழமை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சுமார் 50 அமெரிக்கத் தமிழர்கள் " சீனா, இலங்கையின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு உதவிசெய்வதை நிறுத்து" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி நின்றதோடு, "இலங்கையின் யுத்த மீறல்களுக்கு சீனாவே நிதியுதவி வழங்காதே" என்ற சுலோகங்களும் ஒன்றுகூடி சத்தமாகக் கூறப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தை மேரிலாண்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமான, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இலங்கையில் நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு புதுடில்லி ஆதரவு வழங்கியமைக்கு தமது அதிருப்தியை இதன் பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளார். அதோடு இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாகவும், சமாதானப் பேச்சுக்கள் மூலம் தனித்த நாட்டை அடைவதற்கான குறிக்கோளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-67: அணுகுமுறை மாறுகிறது!



ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ரொமேஷ் பண்டாரி
இலங்கைத் தமிழர் பிரச்னையில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்த ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. இந்திரா காந்தியின் பழுத்த அரசியல் அனுபவத்தின் காரணமாக அவர் என்ன விரும்புவாரோ அதே திசையில் சிந்தித்த அதிகார வர்க்கத்தினர், ராஜீவ் காந்தி காலத்தில் தங்களது - விருப்பு வெறுப்புக்கேற்ப அவரை மாற்றுவதற்கு முற்பட்டனர்.இந்திரா மறைவினால் புது தில்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பாதிப்புகளால் ராஜீவ் காந்திக்கு இலங்கை இனப் பிரச்னை என்பது இரண்டாம் பட்சமாகவே அமைந்தது. இச் சூழல் புது தில்லியின் அதிகார வர்க்கத்துக்கு ஏற்றதாயிற்று. இலங்கை இனப் பிரச்னையில் "தமிழர் நலன்' என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு "இந்திய நலன்' என்கிற புதிய வார்த்தைப் பிரயோகம் முன்வைக்கப்பட்டது."இலங்கை சிங்கள அரசின் மீது ஒரு நெகிழ்வுத் தன்மையும், தமிழ்ப் போராளி இயக்கங்கள் மீது கண்டிப்பான அணுகுமுறையும் கடைபிடிக்கப்பட்டது. ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் போக்குவரத்துக்கு பாக் ஜலசந்தியை போராளிக் குழுக்கள் பயன்படுத்துவதை இலங்கை-இந்திய கடற்படை மற்றும் வான் படைகள் கண்காணிக்க ஆரம்பித்தன. இவ்வாறு ஒரு புதிய நிலை உருவாகும் என போராளிக் குழுக்கள் முன்பே கணித்திருந்த காரணத்தால் அவர்கள் எதற்கும் தயாரான நிலையிலேயே இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.ஜெயவர்த்தனவும் வாங்கிக் குவித்திருந்த ஆயுதங்களை நாசகார வழிகளில் தமிழர்கள் மீது பிரயோகித்தும், தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத் திட்டத்தை தீவிரமாக நிறைவேற்றுவதிலும் குறியாக இருந்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் என்பது தீவிரமானதும் மிகப்பெரும் அளவில் தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவில் வந்து குவிந்தனர்.சிங்களவர் குடியேற்றத்தைத் தகர்க்க எண்ணிய போராளிகள், அசோகர் காலத்திய புனித போதிமரம் உள்ள, பழமையும் பெருமையும் கொண்ட முந்தைய தலைநகரமான அநுராதபுரத்தில் நுழைந்து சுமார் 150 பேரைத் தாக்கி அழித்தது, ஜெயவர்த்தனவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிவிலியன்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கையுடைய விடுதலைப் புலிகள் முதல் தடவையாக இச் செயலைச் செய்து உலகை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினர். இத்தகைய அணுகுமுறையைக் கையாள்வதற்கு ஒரு காரணம் இருந்தது.வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவக் குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்தப் போவதான அறிவிப்புகளை அப்போதுதான் ஜெயவர்த்தன செய்திருந்தார். சிங்களவரின் பகுதியில், சிங்களவரின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத ஜெயவர்த்தன எப்படி தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத்தை நிகழ்த்தி, அவர்களைப் பாதுகாப்பார் என்ற கேள்வி அம் மக்களிடையே பரவலாக எழுந்தது. இப்படி ஒரு தயக்கத்தை சிங்களவர் மத்தியில் எழுப்பினால் மட்டுமே, குடியேற்றம் தடுக்கப்பட முடியும் என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் பலனளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஜெயவர்த்தன கையாண்ட நாடகம்தான் போராளிகளுடன் பேச்சுவார்த்தை என்பது. அரசியலுக்குப் புதியவரான ராஜீவ் காந்தியை தான் விரும்பியபடி ஆட்டி வைக்கலாம் என்பதும் அவரது உள்ளக்கிடக்கையாக இருந்தது. இக் கருத்து நிறைவேற அவர் வீசிய இன்னோர் அஸ்திரம் ஜி.பார்த்தசாரதியின் வெளியேற்றத்தில் முடிந்தது.ஜி.பார்த்தசாரதி ஒரு பிராமணத் தமிழர் என்பதால் இலங்கை இனப் பிரச்னையில் அவர் இந்திய நலனை விடுத்து, தமிழர் நலனை நாடுவதால், இரு நாடுகளிடையே உள்ள உறவு சிக்கலாகிறது என்று ஜெயவர்த்தன தரப்பிலிருந்து திரும்பத் திரும்ப பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜி.பார்த்தசாரதியால் நடுநிலையாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். உண்மையில், ஜி.பார்த்தசாரதி இந்திரா காந்தியின் கருத்துக்களையே பிரதிபலித்தார். ஜி.பார்த்தசாரதிக்கு இலங்கைப் பிரச்னையின் அத்தனை பரிமாணங்களும் அத்துபடி. அவர் இந்திய நலன் மற்றும் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பதும் உண்மை.இந்தியாவின் மத்தியஸ்தர் முயற்சியில் நடுவராக இருந்து செயல்பட்ட ஜி.பார்த்தசாரதிக்குப் பதில் ரொமேஷ் பண்டாரி என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் பணியில் அமர்ந்ததும் உடனடியாக கொழும்புப் பயணத்தை மேற்கொண்டார்.கொழும்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர், ஜெயவர்த்தனவைச் சந்தித்தார். அவரோ, "இலங்கை இனப் பிரச்னை தீராததற்கு இந்தியாதான் காரணம். ஈழப் போராளிகளுக்குப் பயிற்சியும் அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் இந்தியா வழங்கியதால் இந்தப் பிரச்னை நீண்டுகொண்டிருக்கிறது. இந்தியா போராளிகளுக்கு உதவுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று தெரிவித்தார். கூடவே, ரொமேஷ் பண்டாரிக்கு மதிப்பு மிகுந்த, உயர்வகை அன்பளிப்பும் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அப்போது போராளிக் குழுக்கள் குற்றம் சாட்டின.இதனைத் தொடர்ந்து, ஜெயவர்த்தனவின் வெளியுறவு ஆலோசகர் எட்மண்ட் விக்கிரமசிங்கா புது தில்லி வந்து பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். ரொமேஷ் பண்டாரி திரும்பவும் கொழும்பு சென்றார். இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஜெயவர்த்தன - பிரதமர் ராஜீவ் காந்தி சந்திப்பு புது தில்லியில் நிகழ்ந்தது.கொழும்பு திரும்பிய ஜெயவர்த்தன இரண்டே வார காலத்தில், தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவித்தார். இந்தப் போர் நிறுத்தம் உணர்த்தும் உண்மை "இலங்கை நிதியுதவி கூட்டிணைப்பின்' (அண்க் ஸ்ரீர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம் ஸ்ரீப்ன்க்ஷ) கூட்டம் அண்மையில் நடைபெற உள்ளது என்பதாகும்.இந்த நிதியுதவி அமைப்புக் கூட்டம் நடைபெற இருக்கும் காலத்தில், திடீரென இலங்கையில் ஓர் அமைதிச்சூழலைத் தோற்றுவிப்பதை ஜெயவர்த்தன வாடிக்கையாகக் கொண்டிருந்தார். போர்ச்சூழலில், அதன் பாதிப்புகளைக் காரணம் காட்டி, நிதியுதவியைக் குறைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்திலேயே அவர் - போர் நிறுத்தம் செய்து, அமைதிச் சூழலை "பொய்யாக' ஏற்படுத்த விரும்பினார்.அதே உத்தியைப் பின்பற்றித் தற்போதும் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தியைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியவுடன் இவ்வறிப்பு வெளியானதால், ராஜீவ் விருப்பப்படி வெளியிடப்பட்டதாக அவரையும் நம்ப வைத்தார் ஜெயவர்த்தன.மேலும், இலங்கை இனப் பிரச்சினை தமிழர்கள் சார்ந்த பிரச்னை என்பதால், இந்த சமரசப் பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறக்கூடாது என்கிற நிபந்தனையையும் ஜெயவர்த்தன முன்வைத்தார். எனவே, இந்தியாவின் நட்பு நாடான பூட்டான் தேர்வு செய்யப்பட்டு, அந் நாட்டின் தலைநகர் "திம்பு' பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக அறிவிக்கப்பட்டது.பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டது. இதன்படி பேச்சுவார்த்தைக்கு வசதியாக நான்கு கட்டமாக சில நடைமுறைகளை இலங்கை அரசும், போராளிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவாயிற்று.இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:(அ) வீதிகள், வாகனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை நிறுத்தி, அத்துமீறப்படாத பகுதிகள் என்கிற அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் (ஆ) தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தி வைப்பது என்றும், (இ) நீதித் துறையினர் முன்பாகவே பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையைச் செய்வது என்றும் (ஈ) ரோந்துக்குரிய நடவடிக்கைகளுக்காக வாகனங்களை தருவித்தல், காவல் நிலையங்களுக்கு கருவிகள் அனுப்பி வைப்பது கூடாது என்றும் முடிவாயின.இதேபோன்று போராளிகள் தரப்பில், (அ) தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆயுதங்கள், பொருட்கள் எடுத்துச் செல்வதையும் (ஆ) வடக்கு-கிழக்கில் மக்களைத் தாக்குவதை நிறுத்துவது (இ) அதேபோன்று அரசு அலுவலகங்கள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது, (ஈ) வெளியிலிருந்து ஆட்களையும், பொருட்களையும் தருவிப்பது கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவையனைத்தும் மூன்று வாரங்கள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டன.இரண்டாம் கட்டமாக, இலங்கை ராணுவனத்தினருக்கும் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைக்கு ஊறுவிளைவிக்காமல் இருக்க தாக்குதலைத் தொடரக் கூடாது என்றும், ஊரடங்குச் சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதேபோன்று போராளிகள் குழுவினர் பாதுகாப்புப் படையினர் செல்லும்போது தாக்குவது கூடாது என்றும், பொது நிறுவனங்களைத் தாக்குவதும் குண்டு வைத்துத் தகர்ப்பதுமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் குண்டுகளைப் புதைப்பது ஆயுதங்களை எடுத்துச் செல்வது கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.மூன்றாம் கட்டமாக, போர் நிறுத்தத்தை இருவரும் கடைப்பிடித்தல். போலீஸôர் துணையுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், தடுப்புக் காவல் கைதிகளாக சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் போன்றவற்றை அரசுத் தரப்பில் செய்வது என்றும்,நான்காம் கட்டமாக பேச்சுவார்த்தைகளின்போது எழுப்பப்படும் விவாதங்கள் முடிவு எட்டப்படும் வரையில் அப்பேச்சு விவரத்தை பகிரங்கப்படுத்தாமல் இருதரப்பிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதுமான கட்டுப்பாடுகளைக் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டன.இவை யாவும் இந்திய அரசுத் தரப்பு அதாவது ரொமேஷ் பண்டாரி எடுத்துக் கொண்ட முயற்சியினால் உருவானவை ஆகும். இந்த அட்டவணை ராஜீவ் - ஜெயவர்த்தன சந்திப்பின்போது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்தத் திட்ட நகல் போராளிக் குழுவின் ஒன்றிணைப்புக்கு (உசகஊ)அனுப்பி வைக்கப்பட்டது.
புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க முறையான சட்டம் இல்லை: தலைமைச் செயலர் ஸ்ரீபதி



சென்னை, ஆக. 4: நாட்டில் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க முறையான சட்டம் ஏதும் இல்லை என தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்தார்."புராதனச் சின்னங்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.கருத்தரங்கைத் துவக்கி வைத்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது:நமது நாட்டில் முறையான பராமரிப்பு இல்லாததால் துவாரகா உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்து வருகின்றன.நாம் அன்பை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறோம். அந்த அன்பை புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் வெளிப்படுத்தினால் அவற்றை நாம் காக்க முடியும்.கல்குவாரிகளுக்கு தடை... நமது புராதனச் சின்னங்கள் பெரும்பாலும் மலைகளில்தான் உள்ளன. எனவே நினைவுச் சின்னங்கள் நிறைந்த மலைகளில் கல்குவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் நமது பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் கட்டுமானப் பொறியாளர் துறை மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.முறையான சட்டம் இல்லை... ஒவ்வொரு புராதனச் சின்னமும் தூரத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் அழகை ரசிக்கும்படி இருக்கும்.ஆனால் அந்தச் சின்னங்களை சுற்றி இப்போது கட்டடங்களை அதிக அளவில் எழுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இவற்றைப் பாதுகாக்க முறையான சட்டம் ஏதும் இல்லை. எனவே மக்களே முன்வந்து இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார் ஸ்ரீபதி.
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் இறையன்பு
, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் ஸ்ரீதர், சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், மத்திய அரசின் தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் சத்தியபாமா பத்ரிநாத், அறநிலையத் துறை ஆணையர் சம்பத் உள்பட பலர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கருத்துக்கள்

பழமைச் சின்னங்களைத் தூரத்தில் நின்று பார்த்தால் தான் அதன் அழகை ரசிக்க முடியும் ஆனால் அவற்றைச்சுற்றி இன்று பார்வைக்குத் தடையாகக் கட்டடங்களையும் கடைகளையும் எழுப்பி உள்ளனர் என்று சொல்லியிருக்கும் தலைமைச் செயலர் அவற்றைப் பாதுகாக்கச் சட்டம் எதுவும் இல்லாததால் மக்களே முன்வந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது இலவு காத்த கிளி கதைதான். மக்களில் பலம் வாய்ந்த ஒரு பகுதியினர் தானே தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்; சாதாரண மக்கள் அதன் அருகே கூட நெருங்க முடியாது. அந்தச் சாதாரண மக்களின் எண்ணமெல்லாம் அரசாங்கமே பழமைச் சின்னங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினர் காணும் வகை செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கெனச் சட்டங்கள் இல்லையென்றால் அவற்றை இயற்றியாவது பாதுகாக்க வேண்டும்.

By ப. இராசமோகன்
8/5/2009 12:58:00 PM
மருமகளை அடிப்பது 'கொடூரம்' அல்ல: உச்சநீதிமன்றம்



புதுதில்லி, ஆக.5- மருமகளை அடிப்பதோ அல்லது தனது மகன் விவாகரத்து செய்துவிடுவார் என்று மிரட்டல் விடுப்பதையோ 'கொடூரமான' செயலாக கருத முடியாது என்றும், இதற்காக கணவரையோ அவரது உறவினர்களையோ தண்டிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் விகாஸ் சர்மா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மருமகள் அணிவதற்கு பயன்படுத்தப்பட்ட உடைகளை வழங்குவதும் குற்றமாகக் கருத முடியாதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், தம்பதியினருக்கு திருமணத்தின்போது வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக்கொள்வது தண்டனைக்குரியது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

BEATING THE BRIDE AND DAUHTER IN LAW IS NOT A CRIME--SUPREME COURT.WAH.WAH WHAT A GREAT IDEA.SO HERE AFTER THOSE HUSBANDS WHO FEELS THEIR WIVES ARE WASTES NO MORE BE REQUIRED AND THE MOTHERIN LAWS WHO WANTS TO HELP THEIR SONS TO ELIMINATE THIS WASTE NO NEED TO HAVE THE TENTION HOW TO PUT FIRE ON HER. IT IS A TEDIOUS PROCESS. SO TAKE AN IRON ROD GIVE A NICE ONETIME BLOW ON HER HEAD WHILE SHE WAS SLEEPING AND FINISH OF HER.NO MORE WORRIES ABOU THE COURT, BECAUSE YOU ONLY BEAT.ALREADY DELHI HIGH COURT PROVED ITS GREATNESS BY GIVING A FLESHY VERDICT ABOU THE HOMOS ANDLESPIANS.AS AN ADDED ATTRACTIN THE MADRAS HIGH COUR HAS RESENTLY ISSUE A CLAMOUROUS VERDICT AS IN THE MASSAGING PARLOUR IT IS NOTHING WRONG IF ONE GETS MASSAGE BY THE OPPOSITE SEX {AN OPEN INVITATION TO PROSTITUTION}.SO ALL THESE THINGS ARE INDICATING THE DOOMS DAY IS VERY CLOSE.

By NALVILAMBI
8/6/2009 2:30:00 AM

foolish judgement. this kind of verdict will come only india

By vijayaraghavan
8/5/2009 10:54:00 PM

This is the WORST JUDGMENT I have ever come across. As many have already pointed out in the previous mails, the judge must have gone out of his senses while writing the verdice. He no way deserves to be a judge. The concerned authorities must take a stingent action against the judge.

By Sahayaraj
8/5/2009 10:36:00 PM

IT IS VERY VERY FOOLISH JUDGMENT. I WANT TO MARRY THE WIFE OF THE JUDGE AND I WOULD LIKE TO BEAT BEAT BEAT HER. AND I WILL TELL MY RELATIONS TO POUR THE KEROSENE & BURN HER UNTILL SHE DIES. ARE YOU HUMAAN BEING OR A WILD ANIMAL. ARE POTTA POTA POTTA KEDU KATTA POTTA POTTA PAYALE. NEE MATTUM EN MUNNADI VANDHA KARI KARI THUPPUVEN I AM REQUESTING YOU ALL BRING THIS BLODDY JUDGE AND WE HAVE TO PUNISH HIM TO POUR THAT LADY'S MOOTHIRAM AVAN MEEDHU IN A MIDDLE OF THE ROAD.

By namasivayam
8/5/2009 9:43:00 PM

The verdict of the judge will treat a lesson to the bride family who are nw giving torture to the bridegroom family by giving false statement to police and the police is also nt enquiring the matter fully and rewasonably and foisting the case against the bridegroom and his family members. Hereafter such false complaints may nt arise in future Thanks to the verdict of the Judge.

By PG Venkatesan
8/5/2009 8:10:00 PM

We have to understand the majority students of Law collage are already criminals before they start study.. And they are not intelligent student but criminals from their childhood.. So they can not understand the meaning of the Law. but they can read and write. So these crime machines make such kind of judgments only. Mo wonder until we make law education in our mother tongue.. and do not limit lawyer to attend clients whom language are not familiar them. because they know neither Law nor client's feeling.

By Rajkumar
8/5/2009 6:05:00 PM

Its not funny or strange to me.. Our Judges always prove themselves as fools.. Our Lawyers and Judges know Law in English but do not know the meaning in their language.. Means they can not understand the aim of law because they are not Lawyers and Judges but worst criminals.. Those criminals who want protect themselves from Law choosing Law for their profession.. so they prefer to protect criminals like them. And very few clean guys choose Law as their life coal. but they will be finished by these criminals either in collage campus or while they challenge these criminals in court proceedings.. So. No wonder.. most criminal populated Lok shaba not allow to pass the bill to disclose the judges wealthy.. because they all are same caste.. Criminals.. to be cleaned from society.. or you can not avoid such stupid things in the name of judgement..

By ramachandren
8/5/2009 5:56:00 PM

அடி முட்டாள் தனமான ஒரு தீர்ப்பு.இது போதுமே மாமியார்களுக்கு மருமகளை உயிரோடு கொளுத்த.தீர்ப்பு தந்த நீதிபதி என்ன பொட்டையா.அவனுக்கு பெண்பிள்ளைகள் கிடையாதா.

By ameerali
8/5/2009 5:17:00 PM

Foolish Judgement. I am happy to marry the Daughter of the Judge who gave the verdict and Would like to beat her.

By Kumar
8/5/2009 4:52:00 PM