வியாழன், 27 டிசம்பர், 2012

தானம் செய்ய மனமிருக்கு அடக்கம் செய்ய ப் பணமில்லை: கண்ணீரில் கரைந்த மகள்

தானம் செய்ய மனமிருக்கு அடக்கம் செய்ய ப் பணமில்லை: கண்ணீரில் கரைந்த மகள்

கோவை :தாயின் உடலை அடக்கம் செய்யக்கூட பணமில்லாத நிலையிலும், கண்தானம் செய்ய முன்வந்த மகளின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா, 47. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கணவன் பிரிந்து விட்டார். இதனால் சுயமாக வாழ்வை நடத்திட பனியன் தொழிலை தேர்ந்தெடுத்தார். இத்தொழிலின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு நாட்களை நகர்த்தி வந்தார்.வறுமையால் பள்ளி படிப்போடு, மகள் ரமணியை பனியன் தொழிலுக்கே அழைத்து சென்றார். நிலைமையை உணர்ந்த மகளும், தாய்க்கு உறுதுணையாக இருந்து வந்தார். ரமணியின் மனதில் கல்வி மீதான ஆர்வம் குறையாமல் இருந்தது. இதனால், தொலைதூர கல்வியில் பி.காம்.,(சி.ஏ) படித்து வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு ஆறுதலாக இருந்து வந்தனர்.

அமைதியாக சென்று கொண்டியிருந்த இவர்களது வாழ்வில், நோய் வடிவில் புயல் வீசியது. கடந்த 6ம் தேதி, சகுந்தலாவுக்கு வயிற்றில் கடும் வலி ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில் சகுந்தலாவின் வயிற்றில் நீர்கோர்த்து கிருமிகள் தொற்றியுள்ளது தெரியவந்தது. இதனால், மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இறுதியில் சிகிச்சை பலனின்றி, சகுந்தலாவின் உயிரை காலம் பறித்து கொண்டது. தாய் இழந்த துக்கத்தில், மகள் ரமணியும் செய்தவறியாது நின்றார். தாயின் உடலை அடக்கம் செய்யக் கூட கையில் பணம் இல்லாத நிலையில் ரமணி இருந்தார். இவருடைய சூழ்நிலையை உணர்ந்து, கோவையிலுள்ள தனியார் அமைப்பு ஒன்று உதவ முன்வந்தது.

இந்நிலையில் "அம்மாவின் ஆசை' ஒன்று, ரமணியின் மனதில் உதித்தது. தாய் சகுந்தலாவின் கண்களை எடுத்து, பிறருக்கு பார்வை அளிக்க வேண்டும் எனும் விண்ணப்பபம்தான் அது. வாழ்க்கையில் யாரும் அடுத்து துணைக்கு இல்லாத நிலையிலும், தாய் இறந்த சோகம் கண்முன் இருந்தும், பிறரின் வாழ்வில் வெளிச்சம் கொடுக்க வேண்டும் எனும் ரமணியின் மனிதநேயத்தை, மருத்துவமனையில் இருந்த அனைவரும் பாராட்டினர். இறுதியில் பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக, கண்தானம் செய்யமுடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சிவப்பிரகாசம் கூறியதாவது:சிறிய பெண்ணின் எண்ணம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இறந்த பெண்ணை விட்டு கணவர் சென்றதால், நாளை அவர் பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது. சட்டச் சிக்கல்கள் உள்ளதால் கண்தானம் பெற இயலாத நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக