ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பெண்களை த் தொடரும் பேய்கள்

பெண்களை த் தொடரும் பேய்கள்

அந்த முகமும், பெயரும் வெளியிடப்படாத, டில்லி மருத்துவ மாணவி தன்னை பலி கொடுத்து, கொளுத்தி போட்ட தீ, இந்திய மக்கள் மனதில் பற்றி எரிகிறது."குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள், சோறு தண்ணீர் இல்லாமல் தனியறையில் அடைத்துவைத்து கொல்லுங்கள்; அரபு நாடுகளைப் போல பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்துக்கொல்லுங்கள், நடுரோட்டில் நரபலி கொடுங்கள்' என்று எண்திசைகளிலிருந்தும் குரல் வருகிறது.
இதயத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவே :

டில்லியில் எழுந்தது சாதாரண குரல் அல்ல; கலாசார சீரழிவிற்கு எதிரான குரல். அரசின் கையாலாகாத்தனத்தை கண்டிக்கும் குரல், சட்டம் - ஒழுங்கு செயல்படாமையை சுட்டிக்காட்டும் குரல், செயல்படாத அரசு இயந்திரத்திற்கு குட்டுவைக்கும் குரல், போலீசின் பொறுப்பில்லாத்தனத்தை தட்டிவைக்கும் குரல், ஒட்டிக்கொள்ள ஒரு பதவிக்காக, அதுவும் சம்பாதிப்பதற்காக அலையும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளை எச்சரிக்கும் குரல். இன்னும் சுருக்கமாக சொல்வதானால், மக்களின் இதயத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவே அந்தக்குரல். தூக்கில் போட்டால் கூட உடனே இறந்துவிடக்கூடும், கொஞ்சம் கொஞ்சமாக, தான் செய்த தவறை நினைத்து வருந்தவேண்டும்; அதே நேரம் தண்டனையும் அடைய வேண்டும். அதற்கேற்ப, ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல, "வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்' என்றும் எடுத்துக்கொடுக்கின்றனர்.

திரும்ப, திரும்ப பேச வைத்து:

குற்றவாளிகளில் ஐந்து பேர் மேஜர், ஒருவர் மட்டுமே மைனர். "மைனர் சட்டத்தை திருத்துங்கள், பதினைந்து வயதானாலே, "மேஜர்' என்று அறிவியுங்கள். அந்த சட்டத்தையும் உடனே கொண்டுவந்து சம்பந்தப்பட்ட குற்றவாளியையும் விட்டுவிடாமல் தண்டியுங்கள்' என்று குமுறுகின்றனர். எந்த காரணத்தை சொல்லியும், குற்றவாளிகளை தப்பவிட்டுவிடக்கூடாது என்பதில் மக்கள், அதிலும் இளைஞர்கள் உறுதியாக இருக்கின்றனர்.எந்தவித தூண்டுதலும் இல்லாமல், யாருடைய தலைமையும் இல்லாமல், மக்கள் ஒருமித்த கருத்துடன், ஒன்று திரண்டு நின்று போராடி, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்துவிட்டனர்; திரும்ப, திரும்ப பேச வைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.
ஒரு கைபார்த்துவிடலாம். :

இந்த விஷயம் உலகை உலுக்கியது பெரிதல்ல... உலுக்க வேண்டியவர்களை உலுக்கி எடுக்காமல் போய் விடுமோ என்ற கவலை எழுந்தபோது, மவுனம் காக்காமல், "விரைந்து நடவடிக்கை' என்று சொல்லியிருக்கிறார் பிரதமர்; ஆனாலும், இது போதாது என்கின்றனர் பொதுமக்கள். காரணம், அந்தளவிற்கு நடந்த சம்பவம் அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது கோபம் நாட்டின் மீதும், நாட்டின் சட்டத்தின் மீதும் இப்போது திரும்பியிருக்கிறது. சிங்கப்பூரில் குற்றவாளிகளுக்கு கசையடிதான் தண்டனை. அதனால், குற்றவாளிகள் அதற்கு பயந்தே செத்துப்போவர். இந்தியாவிலோ மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகூட, சிரித்துக்கொண்டே கோர்ட்டைவிட்டு வெளியே வருகிறான். காரணம், கருணைமனு வரை ஒரு கைபார்த்துவிடலாம். அதற்குள், எங்காவது ஓட்டை ஏற்படுத்தி தப்பிவிடலாம் என்கின்ற தைரியம்.
ஊழலில் கரைந்து போகாத காவல்துறை:

மக்களை மதிக்காத சட்டமும், சட்டத்தை மதிக்காத மக்களும் இருப்பது நல்லதல்லவே. இன்றைய தேதிக்கு, நடைமுறையில் உள்ள பாலியல் சட்டங்கள் எதுவும், பெண்களுக்கானதாக இல்லை. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் போலீசாருக்கு தண்டம் கட்டமுடியாமல், சட்டரீதியாக பாலியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், 436 பேர் என்றால், தண்டிக்கப்பட்டவர்கள் ஒரே ஒருவர்தான். மற்றவர்கள், தற்போது சுதந்திரமாய் வெளியே திரிகின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. சட்டம் இயற்றும் பார்லிமென்டில் இடம் பெற்றுள்ள, மாண்புமிகு எம்.பி.,க்களில் பலரே, குற்றவழக்கு பின்னணி உடையவர்கள்தான் என்றும், அதிலும் சிலர், பாலியல் குற்ற தொடர்பு உடையவர்களே என்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. ஊழலில் கரைந்து போகாத காவல்துறையினரையும், சந்தர்ப்பவாதத்தில் சறுக்கிவிழாத அரசியல்வாதியையும், கண்ணிற்கு எட்டிய தொலைவு வரை காணோம் என்பதால், பெண்ணைப்பெற்றவர்கள் தம் பெண் வீடு திரும்பும்வரை, வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டுதான் இருக்க நேரிடுகிறது. இப்படி நாட்டின் சட்டத்தின் மீது குற்றம் சுமத்தும் முன், இந்த விஷயத்தில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத, ஆனால், எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களையும், இங்கே நாம் ஆராயவேண்டியுள்ளது.அதுதான் மது போதை...
டில்லி சம்பவத்தில் மட்டுமல்ல, அதற்கு நிகராக, தூத்துக்குடியிலும், வேலூரிலும், பின்னர் பெங்களூருவிலும், மீண்டும் டில்லியிலும் இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துகொண்டுதான் இருந்தது. இதில், ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் மது அருந்திவிட்டே இந்த பாலியல் கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர்.மது தந்த போதை, மாதுவை தேடி தேடி நாசம் செய்யத்தூண்டி உள்ளது. இவர்கள் கண்ணில் பட்ட பெண், சிறுமி என்பது கூட தெரியாத அளவிற்கு காமம் கண்ணை மறைத்துள்ளது; காமத்திற்கு மதுவே துணை நின்றுள்ளது. மது என்பது எத்தனை சமாதானம் சொன்னாலும், செய்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அரக்கன் என்பதில், இரண்டாவது கருத்தே இருக்க முடியாது.இன்னும் கொஞ்ச நாளில், தெரிந்தே குடிப்பவர்கள், தெரியாமல் குடிப்பவர்கள் என்ற இரண்டே இனம்தான் இருக்கப்போகிறது. அந்தளவிற்கு ரேஷன் கடைகள், பள்ளிக்கூடங்களை விட முக்கியத்துவம் தந்து மதுக்கடை திறக்கப்படுகிறது. மது விற்பனை சாதனையாக கணக்கிடப்படுகிறது.
மதுக்கடைகள் மூடப்படும் ?

"பாலியல் குற்றம்புரிந்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, அரசு பெண் வழக்கறிஞர்களே வாதிடுவர், இன்ஸ்பெக்டர் நேரடியாக விசாரிப்பார், அதை எஸ்.பி., மேற்பார்வையிடுவார், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசே அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்ளும்' என்று, தமிழக முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நிறைய சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் சொல்லியது சரி, இதற்கும் மேலாக ஒரே ஒரு வார்த்தை, மதுக்கடைகள் மூடப்படும் என்று, சொல்லுங்கள். சொல்லியபடி செயல்படுத்திப்பாருங்கள். பாலியல் குற்றம் மட்டுமில்ல, எந்த குற்றமும் தமிழகத்தில் நடக்காது. இப்போதோ, சர்வசாதாரணமாக பிறன்மனை நோக்கலும், ஓடிப்போதலும், கற்பழிப்பும், அதிலும் குழந்தைகள் மீதான வன்முறையும் வரைமுறை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணமாக சந்தேகமே இல்லாமல், சினிமாவையும், தொலைக் காட்சியையும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வீட்டின் வரவேற்பறையில் அரைகுறை உடையுடன் போடும் குத்தாட்டங்களை குடும்பத்துடன் ரசிக்குமளவு, மனதை கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக்கி வைத்திருக்கிறோம். ஆபாசத்தை நவீன முறையில் கொடுத்து, பார்ப்பவர்களின் மனதை கெடுத்துவருகின்றனர் என்பதில், எந்தவித சந்தேகமுமில்லை. இதை தருவதற்கும், தடுப்பதற்கும், ஏற்பதற்கும், விலக்குவதற்கும் சட்டமேதுமில்லை. அப்படி ஒரு சட்டம் வேண்டும் என்றாலே, ஜனநாயக காவலர்கள் வேல்கம்பு எடுத்து தேடிவருவர்.
குறைந்தபட்சமாக இது போன்ற நிகழ்ச்சிகளை கொடுப்பதிலும், பார்ப்பதிலும் என்ன பலன் என்று, அவரவர் மனசாட்சியை பேசவிட்டு கேட்டுச் சொல்லுங்கள். மூன்றாவதாக வளர்ப்பு: ஆணோ, பெண்ணோ பார்க்கவேண்டியதும், பராமரிக்கவேண்டியதும் பெற்றோர் கையில் உள்ளது. முன்பு போல பெண் தின்னும் வல்லூறுகள், கலைந்த தலை, முகத்தில் பரு, வடு விழுந்த கன்னம், கடூர குரல், கொடூர முகம் என்று, தனி அடையாளம் கொண்டு வருவதில்லை; நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, நவநாகரிகவேடம் அணிந்து அலைகின்றன. இதில் மாணவியிடம் சில்மிஷம் செய்து அடிபடும் ஆசிரியர்களையும், பெண் போலீசுடன் உல்லாசம் என்று பிடிபடும் போலீஸ் அதிகாரிகளையும் பற்றி அறியும் போது, உதாரணமாக இருக்கவேண்டியவர்களே, இப்படியா என்ற வேதனையே மிஞ்சுகிறது.
இந்த விஷயத்தில், எந்தவித கட்டுப்பாடும் இல்லாத நம்நாட்டைவிட, கட்டுப்பாடு நிறைந்த அரபு நாடுகளின் சட்டங்கள் மேல்தானோ என, நினைக்கத் தோன்றுகிறது. அங்குள்ள பெண்கள் மகிழ்ச்சியாக, குடும்பம், குழந்தை என்று இருக்கின்றனர்; இவை எல்லாவற்றையும் விட, நிம்மதியாக இருக்கின்றனர். இங்கே கருவறை முதல் கல்லறை வரை பெண் சந்திக்கும் பிரச்னையை பார்த்தால், அதுவும் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் வயதில், வாழ்க்கையே திசைமாறிப் போகுமளவு பிரச்னை என்றால், மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் அல்ல, மாபாவம்தான் செய்திருக்கவேண்டும்.
உயிரினும் மேலானது மானம்;

அந்த மானத்தையும் இழந்து, உயிரையும் கொடுத்த டில்லி மாணவியின் கடைசி நேர கதறல், எனக்கு நேர்ந்த கொடுமை, இனி எந்த பெண்ணிற்கும் நடக்கக்கூடாது என்பதுதான். ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கு பிறகும் இந்த கொடுமைகள் தொடர்கின்றன என்றால், பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு பயமில்லையா அல்லது இது குறித்து படிப்பினை இல்லையா...?
email: murugaraj2006@gmail.com முருகராஜ் பத்திரிகையாளர்/சிந்தனையாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக