வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

வீரப்பனை ப் பார்க்காதவர்களுக்கு த் தூக்குத் தண்டனையா?: மத்திய அரசு கொலைகார அரசாக மாறி விட்டது- வைகோ

வீரப்பனை ப் பார்க்காதவர்களுக்கு த் தூக்குத் தண்டனையா?: மத்திய அரசு கொலைகார அரசாக மாறி விட்டது- வைகோ
சென்னிமலை, பிப். 15-

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி தமிழககர்நாடக எல்லையில் உள்ள பாலாறு என்ற இடத்தில் சந்தன கடத்தல் வீரப்பனை தேடி தமிழக போலீசார் பஸ்ஸில் சென்ற போது வீரப்பன் ஆட்கள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இதில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 18 பேரை கைது செய்து வழக்கு விசாரணையில் மைசூரு தடா சிறப்பு நீதி மன்றம் வீரப்பன் கூட்டாளிகளான ஞானபிரகாஷ் ஜோஸப், சைமன் அந்தோணியப்பா, பிலவேந்திரா மரிகவுடா, மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்து ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

இதை தொடர்ந்து 4 பேரையும் தூக்கில் போட கர்நாடக சிறை துறை விரைவில் முடிவு எடுக்க உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை வந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவை அவர்களின் உறவினர்கள் ஞானபிரகாஷ் ஜோஸப்பின் மனைவி செல்வமேரி, அண்ணன் இன்னாசிமுத்து, பிலேந்திரா மரிகவுடா மனைவி கமலாமேரி மகள் ஜோஸ்வின் பாஸ்கா மேரி, சைமன் அந்தோனியப்பா அண்ணன் ஜெயராஜ் மற்றும் மணி ஆகியோர் நேரில் வந்து வைகோவை சந்தித்தனர். இவர்களின் சோக கதையை கேட்ட வைகோ ஆறுதல் கூறினார். அதன் பிறகு வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பு இல்லாத இவர்கள் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளது வேதனை தருகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என கூறியும் கர்நாடகா மாநில சிறையில் சித்திரவதை செய்துள்ளனர். அவர்களை நிர்வாணம் ஆக்கி மின்சாரம் பாய்சியும் கொடுமைபடுத்தி உள்ளனர்.

இந்த வழக்கில் மொத்தம் 122 தமிழர்கள் மீது வழக்கு போடப்பட்டு சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இதில் 117 பேரை தடா சிறப்பு நீதி மன்றம் விடுதலை செய்யப்பட்டும் மற்றவர்களும் வேறு வழக்குகளில் சேர்க்கப்பட்டது போக மீதம் உள்ள நான்குபேருக்கும் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லை என கூறி தடா நீதி மன்றம் மரணதண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை விதித்தது. இவர்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்யதான் உச்ச நீதி மன்றம் சென்றனர் ஆனால் அங்கு மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இவர்களின் கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள் பல கொடுமையான சம்வபத்திற்கு கூட கருணை மனு ஏற்கபட்டுள்ளது.

நான் எப்போதும் மரண தண்டனையை ஆதரிப்பவன் அல்ல, மத்திய அரசு கொலைகார அரசாக மாறி விட்டது. கசாப் துவக்கில்யிடப்பட்ட செய்தி அவர்களின் வீட்டுக்கு கூட தெரிவிக்கவில்லை என்பது மிகவும் வேதனையான செய்தி. மனிதாபமானமற்ற செயலாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருணை மனுவை நிராகரித்து விட்டார். உலகில் 132 நாடுகளில் மரணதண்டனை சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈவு இரக்கமற்ற முறையில் மத்திய அரசு செயல்படுகிறது இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத இவர்களை விடுவிக்க வேண்டும் தூக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அப்பாவியான 4 தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றபட வேண்டும். கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு நான் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவர்களின் வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

பேட்டியின்போது ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, சென்னிமலை ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் தங்கமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக