திங்கள், 11 மார்ச், 2013

குழந்தைத் தொழிலாளர்கள்!











குழந்தை த் தொழிலாளர்கள்!

குழந்தை த் தொழிலாளர் முறையை, ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடும் வேலூர் திட்ட இயக்குநர், இராசபாண்டியன்:


குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோர் காரணமாக, பல குழந்தைகள் வேலை செய்கின்றனர். டீ கடை முதல், பெரிய நிறுவனங்கள் வரை, குழந்தைகளை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி, லாபம் ஈட்டுகின்றனர்.

அனைவருக்கும் கல்வி இலவசம், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினால் தண்டனை என, தமிழக அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை, உச்சத்தில் தான் உள்ளது. குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக தகவல் வந்தால், உடனே அங்கு சென்று, குழந்தைகளை மீட்டு, குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் சேர்த்து படிக்க வைக்கிறோம்.

தாசில்தார் தலைமையில், அந்த கடைக்கு, "சீல்' வைக்கிறோம். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு, முதலில் மருத்துவ பரிசோதனை செய்கிறோம். ஏனெனில், குழந்தை தொழிலாளருக்கு கல்வி மட்டும் பாதிக்காமல், தோல் வியாதி, நுரையீரல் புற்று நோய், கண் பார்வை இழப்பு என, குழந்தைகளின் எதிர்காலமே கேள்வி குறியாகிறது.

வேலூர், கொசப்பேட்டையில், குடிகார கணவர்களால் பாலியல் தொழிலாளர்களாக மாறிய பெண்கள், எங்களின் இத்திட்டத்தை அறிந்து, தங்கள் குழந்தைகளையும், குழந்தை தொழிலாளர்கள் நல வாழ்வு மையம் மூலம் படிக்க வைக்க, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து அழுதனர். அதனால், அவர்களின் குழந்தைகளையும் சேர்த்துள்ளோம்.

"சீல்' வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகள் சரியாக பள்ளிக்கு செல்கின்றனரா என, ஒரு மாதம் கவனித்து, நீதிமன்றத்தில் அபராதத்தை கட்டி, "இனி குழந்தை தொழிலாளரை வேலைக்கு வைக்க மாட்டேன்' என, உறுதிமொழி தந்த பிறகே, மீண்டும் கடைகளை திறக்க, அனுமதி அளிக்கிறோம்.

எங்கள் செயல்பாட்டை அறிந்த, ஒரு செங்கல் சூளை உரிமையாளர், தன்னிடம் வேலை செய்த குழந்தை தொழிலாளர்கள் படிக்க, காவேரிப்பாக்கத்தில் பள்ளிக் கூடத்தை கட்டி தந்தார். அங்கு ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தி வருகிறோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக