சனி, 16 மார்ச், 2013

மத்திய அரசில் நீடிப்பது குறித்த கலைஞரின் எச்சரிக்கை நாடகமா?



இவ்வறிப்பு குறித்து மகிழ ஒன்றும் இல்லை. காரணம் கலைஞர் மத்திய அரசில் பங்கேற்பதிலிருந்து நடத்தும் நாடகங்கள்தாம். இதற்குக் காரணங்கள் இரண்டாக இருக்கலாம். ஒன்று, முன்புபோல்  மத்திய அரசு தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிப்பதாக இருந்து அதை அறிந்து எச்சரிப்பதுபோல் வீர உரை பேசுவது. இந்தியா ஆதரிப்பது என்ற போர்வையில் தீர்மானத்தை முன்புபோல் நீர்க்கச் செய்யும் என்பது அறிந்ததுதான். அது குறித்து எதுவும் கவலைப்படப்  போவதில்லை. இரண்டு,  வழக்குகளில் இருந்து தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக விடப்படும் மிரட்டலாக இருக்கலாம். இரண்டும் இல்லை என்றால்  சில மணி நேர உண்ணா நோன்பு நாடகத்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயச் சூழலையும் மத்திய அரசின் இன அழிப்புப் பங்கேற்பையும் வெளிப்படையாகக்  கூறித் தமிழ் மக்களிடம் தாம் வாய்மூடி இருந்து கட்சியின் வாயையும் கட்டிப்போட்டதற்கு மன்னிப்பு கேட்பதுதான்.  என்ன செய்வது? இரண்டாம் முசிபூராக இருந்தவர் இரண்டாம் மன்மோகனாக மாறிவிட்டாரே! வருத்தத்துடன்  இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


திருத்தம் செய்யாவிடில் மத்திய அரசில் இனிமேலும் நீடிப்பது அர்த்தமற்றது: கருணாநிதி எச்சரிக்கை!


அமெரிக்க அரசின் தீர்மானத்தில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையும், திருத்தமும் மேற்கொள்ளப்படாவிடில் இந்த அரசில் இனிமேலும் நீடிப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வ தேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வின் சார்பில்
வலியுறுத்துகிறோம்.
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவை யிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக