வியாழன், 28 மார்ச், 2013

தாழிமரம் (போன்சாய்) வளர்க்கலாம்!


 தாழிமரம் (போன்சாய்) வளர்க்கலாம்!

"போன்சாய்' மரங்களின், நன்மை மற்றும் வளர்ப்பு முறை பற்றி விளக்கும், ராஜேந்திர குமார்:
நான், சென்னை அருகே உள்ள படப்பையில், 18 ஆண்டுகளாக, 6 ஏக்கர் நிலத்தில், 3,000க்கும் அதிகமான செடி வகைகள் மற்றும் போன்சாய் மரங்களை, வளர்த்து வருகிறேன்.இக்கலையின் பிறப்பு நாடு, சீனா. சீன மொழியில், "போன்' என்றால், தட்டையான தொட்டி என்றும், "சாய்' என் றால், மரம் என்றும் பொருள். தட்டையான தொட்டியில், அதிக உயரமில்லாத குட்டையான மரங்களை வளர்க்கும் அபூர்வ கலையே, போன்சாய். என் விருப்பம் காரணமாகவே, இதை கற்றேன்.போன்சாய், இயற்கைக்கு எதிரான மரம் என்ற, எதிர்மறையான கருத்து உள்ளது; இது, முற்றிலும் தவறு. மனிதன் சுவாசிக்க தேவையான, சுத்தமான ஆக்சிஜனை போன்சாய் தருகிறது. குறிப்பாக, அழிந்து வரும் அரிய மரங்களை தேர்ந்தெடுத்து, போன்சாய் முறையில் பாதுகாக்கலாம்.பூச்செடிகள் போல், அளவில் மிக சிறியதாக இருப்பதால், நமக்கு பிடித்த மரங்களை, செராமிக் தொட்டியில் வைத்து, வீடு மற்றும் அலுவலகத்தின் உள்ளேயும் வளர்க்கலாம்.

எந்த விதமான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது.போன்சாய் மரம் வளர துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆனதும், வேர்களை கத்தரித்து, வேறு தொட்டிக்கு மாற்ற வேண்டும். குறுகிய வேர்களே, அகன்ற பலமான தண்டுப்பகுதியை உருவாக்கும். குறிப்பிட்ட வயது வந்தவுடன் வளர்ந்த கிளைகளை, நமக்கு தேவையான அளவிற்கு கத்தரித்து வளர்க்கலாம்.போன்சாய் மரங்கள், முழுமையான வடிவம் பெற, அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள் ஆகும். எனவே, போன்சாய் வளர்ப்பில், பொறுமை மிக அவசியம். முழு வடிவம் பெற்ற மரங்களை, வயதுக்கேற்ப, 500 ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாய் வரை, விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். போன்சாயை, தோட்டம் அமைத்து பராமரிக்க, வேலையாட்களே தேவையில்லை. பராமரிப்பு செலவும், மிக குறைவு.

கருத்துகள்
போன்சாய் எனப்படும் தாழிமரத்திற்கு மூலம் தமிழ்நாடே. இது குறித்து   வலைத்தளத்தில் காணலாம்.தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது.  19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் சிறுவகை மரங்களை (miniature) இவ்வாறு வளர்ப்பதையும் போன்சாய் என்றே குறிப்பிடுகின்றனர். என்ற போதிலும் நாவலந்தீவு என்று அழைக்கப் பெற்ற இன்றைய இந்தியாவில்  இமயமலைப் பகுதியில் மருத்துவர்கள் மருந்துச் செடியைச் சிறு பானைகளில் வளர்த்து வந்த முறையே சீனாவிற்குப் பரவியது என்றும் சொல்லுவர்.
நம் நிலப்பகுதி முழுவதும் தமிழ்நாடாக இருந்த பொழுது இம்முறை தோன்றியிருக்கலாம்.

      தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி

(அகநானூறு 129.7 ) எனத் தாழியில் வளர்ந்துள்ள கொழுவிய இலையையுடைய பருத்தியைப் பற்றிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்.
natpu தலைவியைக் காணாமல் தாழியில் வளர்த்த குவளைச் செடியின் மலர் வாடியது குறித்துத்

      தாழிக்குவளை வாடுமலர்

என அகநானூறு (165.11) கூறுகிறது.

கொடிவகைகளை உயரமான தாழியில் வளர்த்துள்ளனர் என்பது

      ஓங்கும்நிலைத் தாழி மல்கச் சார்த்தி
    குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
    பந்தர் வயலை பந்துஎறிந்து ஆடி

எனப் புலவர் கயமனார் கூறுவதில் இருந்து (அகநானூறு 275:1-3) அறியலாம்.
உயர்ந்த தாழியில் நிறைய வைத்துப் பனங்குடையால் நீரை மொண்டு ஊற்றி வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலின் கீழே பந்தை எறிந்து ஆடுவது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது.
 நீர்வளம் இல்லாத பாலை நிலைத்தில் இவ்வாறு தாழியில் மண் இட்டு நீர் வார்த்துச் செடியை வளர்த்துள்ளனர்.
 தோட்டவியலில் சிறந்திருந்த தமிழர் பானை அல்லது தாழியில் செடி வளர்க்கும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் எனலாம்.
- அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக