புதன், 20 மார்ச், 2013

மத்திய அரசு அலுவலகத்தில் சங்கு ஊதிய பா.சனதாவினர்

நுங்கம்பாக்கத்தில் முற்றுகை ப் போராட்டம்: மத்திய அரசு அலுவலகத்தில் புகுந்து சங்கு ஊதிய பா.சனதாவினர்
நுங்கம்பாக்கத்தில் முற்றுகை போராட்டம்: மத்திய அரசு அலுவலகத்தில் புகுந்து சங்கு ஊதிய பா.ஜனதாவினர்
சென்னை, மார்ச். 20-

இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்தும், அதற்கு துணை போவதாக கூறி மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கடந்த  10 நாட்களாக  போராட்டம் நடந்து வருகிறது. அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி  ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள ஈ.வெ.கி. சம்பத் மாளிகை கட்டிடத்தில் 7-வது மாடியில் இயங்கி வரும் இந்திய வெளியுறவுத்துறை  அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக இளைஞர் அணி மாநில தலைவர் பொன் பாலகணபதி,  செயலாளர் வினோஜ்பி. செல்வம், பொதுச் செயலாளர் கமல் குமார், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெய்சங்கர் மற்றும் நூற்றுக்கணக்கான பா.ஜனதா கட்சி தொண்டர்கள் இன்று காலை 10 மணியளவில் கல்லூரி சாலையில் ஈ.வெ.கி. சம்பத் மாளிகை அருகில் திரண்டனர். அப்போது பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சங்கு ஊதி மத்திய அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

திடீரென ராஜபக்சேவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள்.  பின்னர் சோனியா காந்தியின் உருவ படங்களையும் தீவைத்து எரித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஞானசேகரன், சூளைமேடு இன்ஸ்பெக்டர் கிரி மற்றும் போலீசார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்களை அழைத்து செல்வதற்காக 2 போலீஸ் வேன்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சி தொண்டர்கள் தாங்கள் முற்றுகையிட்ட மத்திய அரசு அலுவலகத்துக்குள் அத்து மீறி மின்னல் வேகத்தில் ஓடத்தொடங்கினார்கள். அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. உள்ளே புகுந்த பா.ஜனதா தொண்டர்கள் சிலர் வெளியுறவுத்துறை அலுவலகம் இருக்கும்  இடத்தை நோக்கி ஓடினார்கள்.  அவர்களை விரட்டி சென்ற போலீசார் குண்டு கட்டாக  தூக்கி வந்தனர். அப்போது அலுவலகத்தின் உள்ளே வைத்து பா.ஜனதா கட்சி தொண்டர்கள் ஆவேசமாக சங்குகளை ஊதினர்.

பின்னர் ஒரு வழியாக அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை பிரச்சினைக்காக சென்னையில் பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம்  நடத்தி வருகிறார்கள். ஆனால் எந்த அலுவலகத்திலும் அவர்கள் நுழைய முடியாத அளவுக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மத்திய அரசு அலுவலகம் உள்ளேயே புகுந்து போராட்டம் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராயபுரம் எம்.எஸ். கோவில் தெரு சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர்  பிரபாகரன் தலைமையில் செயலாளர் கபிலன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.  அவர்கள் திடீரென ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்ற வாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி எதிரில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு, செங்கல்பட்டு நகர செயலாளர் அன்புசெல்வன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து பெரிய பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராள்ளைபாபு தலைமையில் பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு நடைபயணம் சென்றனர். வெங்கல் கிராமத்தில் சிலம்பரசன் தலைமையிலும், தாமரைப்பாக்கத்தில் லட்சுமி பதி தலைமையிலும், ஆர்.ஆர். கண்டிகையில் விடுதலை சிறுத்தைகள் கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும் உண்ணாவிரதம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக