ஞாயிறு, 17 மார்ச், 2013

இங்கே முகங்கள் மட்டுமே வேடமிடும்... - எல்.முருகராசு









இங்கே முகங்கள் மட்டுமே வேடமிடும்... - எல்.முருகராசு




ஏதோ ஒரு செய்தி அவரவர் உள்ளத்தினுள் ஒடிக்கொண்டே இருக்கும், அந்த விஷயத்தை யாராவது தூண்டிவிட்டால் போதும், பிறகு அவர் சுடர்விட்டு பிரகாசிப்பார்.
அப்படி பிரகாசித்துக்கொண்டு இருப்பவர்தான் ரேகா விஜயசங்கர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிணசித்திரா கலைக்கூடத்தின் நூலராகவும், உதவியாளராகவும் உள்ளே சென்ற ரேகாவிற்கு புகைப்படக்கலையின் மீது ஒரு கண்.
இதைப்புரிந்து கொண்ட கலைக்கூட நிர்வாகத்தினர் கொடுத்த ஒத்துழைப்பு, செய்திட்ட உதவிகள் காரணமாக மள,மளவென வளர்ந்த ரேகா இப்போது கலைக்கூடத்தின் ஆஸ்தான புகைப்படக்கலைஞராவார்.
கலைக்கூடத்தின் சார்பில் வெளிவரும் அனைத்து புத்தகங்கள்,மற்றும் வழிகாட்டிகளில் இவரது புகைப்படங்களே அலங்கரிக்கின்றன.
இது போக மழை, அய்யனார், ஆடிப்பெருக்கு, கூடை, முகங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் இவரது தனி நபர் புகைப்படக் கண்காட்சிகள் நடந்துள்ளது.
மேலும் சென்னையில் "ஆர்ட் சென்னை' நிறுவனம் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இவரது பரிசு பெற்ற அந்த புகைப்படம் இப்போதும் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்டமாய் அலங்கரித்துக் கொண்டு இருப்பதை அந்த பக்கம் போனால் பார்க்கலாம்.
இதோ இப்போது "வேஷம்' என்ற தலைப்பில் தட்சிணசித்ராவில் புகைப்பட கண்காட்சியினை நடத்தி வருகிறார், கடந்த வாரம் துவங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தட்சிணசித்ராவில் நடன நிகழ்ச்சி நடத்த வந்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில கலைஞர்கள் தங்களது நடனத்தின் பொருட்டு முகத்தில் போட்டுக்கொண்ட வேஷங்களை மட்டும் தொகுத்து புகைப்படக் கண்காட்சியாக வைத்துள்ளார். இந்த கண்காட்சியினை நாட்டின் தொன்மை மற்றும் சரித்திரம் தொடர்பான விஷயங்களை அழகாக ஆங்கிலத்தில் புத்தகமாக்கி வரும் எழுத்தாளர் சித்ராமாதவன் துவக்கிவைத்தார், ஒவியர் கீதா ஒருங்கிணைத்துள்ளார்.
அரங்கத்தில் ஐந்து பேர் இருந்தாலும் சரி, ஐயாயிரம் பேர் இருந்தாலும் சரி, சமரசமே செய்துகொள்ளாமல் ஆடும் கலைஞர்களின் அர்ப்பணிப்பை அருகே இருந்து பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் முகங்களில் மட்டும்தான் வேஷம் அகங்களில் கொஞ்சமும் கிடையாது, மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள், மக்களை மகிழ்விக்கும் கலைக்காக தங்களை அவர்கள் அதிகப்படியாக வருத்திக் கொள்கிறார்கள், அதனை என் பார்வையில் வெளிப்படுத்தும் சின்ன முயற்சியே இந்த புகைப்படக் கண்காட்சி என்று கூறி முடித்தார் ரேகா விஜயசசங்கர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக