சனி, 23 மார்ச், 2013

சிட்டுக் குருவியை வளர்க்க வேண்டும்

சிட்டுக் குருவியை வளர்க்க வேண்டும்


சிட்டுக் குருவியின் பயன்கள், அதன் பாதுகாப்பு பற்றி விளக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர், முகமது அலி: சிட்டுக் குருவிகளை, சென்னை போன்ற நகரங்களில் காண்பது மிகவும் அரிதாக உள்ளது. மைனாக்கள், காக்கைகள் போன்ற பறவைகள், மொபைல் போன் டவர்களின் அருகில் இன்னும் வாழும் போது, சிட்டுக் குருவிகள் மட்டும், எப்படி மொபைல் கதிர்வீச்சினால் அழிந்து விட்டது என, குற்றம் சாட்ட முடியும்.உலகில் மொத்தம், 9,700 வகை பறவையினங்கள் உள்ளன. அவற்றில் இந்தியாவில் மட்டுமே, 40 சதவீத சிட்டுக் குருவிகளின் இனம், அழிந்து விட்டதாக, ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. மொபைல் போன் டவர்களின் கதிர்வீச்சை விட, மனிதர்களின் வாழ்க்கை முறை மாறி விட்ட காரணத்தால் தான், சிட்டுக் குருவிகள் அழிந்து விட்டன.ஏனெனில், கடந்த காலங்களை போல், கூரை வீடுகள் இல்லாமல், அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாறியதால், கூடுகட்டி வாழ முடியாத நிலை ஏற்பட்டது. முன்பு தானியங்களை புடைத்து, பறவைகளுக்கு உணவாக போடுவர். ஆனால், இன்று கணினி முறையில் கல் நீக்கப்பட்ட, "பேக்கிங்' உணவு பொருட்களை வாங்குவதால், குருவிகள் உண்பதற்கு தானியங்கள் கிடைக்கவில்லை.இருப்பிடமும், உணவும் தட்டுப்பாடு ஏற்பட்டு, இவ்வகை இனங்கள் அழிவு நிலைக்கு வந்து விட்டதால், சிட்டுக் குருவிகள் தினம் என, விழிப்புணர்வு விழா எடுத்து, இதன் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிட்டுக் குருவிகள் கூடு கட்டி வாழும் அளவிற்கு, அட்டை பெட்டியில் ஓட்டை போட்டு இலவசமாக தருவதால், பொதுமக்களும் வீடுகளில் சிட்டுக் குருவிகளை வளர்த்து, மறு சுழற்சி முறைக்கு உதவுகின்றனர்.பறவை இனங்கள், 75 சதவீதம் பூச்சிகளை, உணவாக உண்கின்றன. பறவை இனங்கள், முற்றிலும் அழிந்தால், தரையிலிருந்து, 15 அடி உயரத்திற்கு, வெறும் பூச்சிகள் தான் இருக்கும். சிட்டுக் குருவிகள் போன்ற பறவை இனங்களோடு, நாம் ஒத்துப் போகவில்லை என்றால், அவை செய்யும் நன்மைகள் இவ்வுலகத்திற்கு கிடைக்காமல் புழு, பூச்சிகள் அதிகரித்து மனிதனுக்கு தீமையை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக