சனி, 16 மார்ச், 2013

மாணவர்கள் போராட்டம் இடர்வினை ஆகும் முன் உரிய விடை தாருங்கள்





 



 மாணவர்கள் போராட்டம் இடர்வினை ஆகும் முன் உரிய விடை தாருங்கள்

இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர்.
தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூரி மாணவர்களின், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா கல்லூரிகளுமே, களத்திற்கு வரும் சூழ்நிலை காணப்படுகிறது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், தாக்கலாகியுள்ள தீர்மானத்தை, ஆதரிக்கும் முடிவை, மத்திய அரசு எடுக்க வேண்டும். இலங்கை மீது, நடுநிலையான விசாரணைக்கு வழி வகை செய்ய வேண்டும். இதன் மூலமே, மாணவர்களை அமைதிப்படுத்த முடியும். மத்திய அரசுக்கு, இதில், பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்த பிரச்னையில், தெளிவான உறுதியான பதிலை மத்திய அரசு தர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், தமிழகம் எங்கும் கடும் விளைவுகள் ஏற்படுவது நிச்சயம். எதிர்காலத்தில் நடக்கப்போகும், விரும்பத்தகாத நிகழ்வுகளை, தடுத்து நிறுத்த வேண்டும் எனில், மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல், உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சிவா பேசினார்.
அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம், திருப்திகரமானது அல்ல. அதிலுள்ள அம்சங்கள் எல்லாமே, பெரிய அளவில், அழுத்தத்தை தரக்கூடியவை அல்ல. அத்துடன், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட, மேலும் வலு இல்லாதவைகளாக மாற்ற, பல சக்திகள் முயன்று வருகின்றன. பாரபட்சமற்ற வகையில், சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு குறைவாக எதையும் ஏற்க முடியாது. மேலும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியா ஆதரித்தால் மட்டும் போதாது. அந்த தீர்மானத்தை, வலுவான தீர்மானமாக மாற்ற வேண்டிய பொறுப்பும், மத்திய அரசுக்கு உள்ளது. கடந்த, 1960ம் ஆண்டுகளில், இந்தி மொழியை திணித்தபோது, தமிழகம் பற்றி எரிந்தது. மாணவர்களே, அப்போதும் களத்தில் நின்றனர். அந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், தமிழகத்தில் காங்கிரசை இல்லாமல் செய்து விட்டது. இப்போதும், மாணவர்களே களத்திற்கு வந்துள்ளனர் என்பதை இங்குள்ளவர்கள் உணர்ந்தால் சரி. இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் பேசுகையில், ""தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் போராட்டத்திற்கு, மத்திய அரசு போதிய உறுதி மொழியை அளிக்க வேண்டும். எத்தகைய முடிவை, மத்திய அரசு எடுத்தாலும், அதற்கு முன், மாநில அரசையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்,'' என்றார். இறுதியாக பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜிவ் சுக்லா, ""எம்.பி.,க்களின் உணர்வுகளை, அரசு கவனத்தில் கொள்ளும். இந்த கருத்துக்கள் எல்லாம், வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். இதுகுறித்து, அறிக்கை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார். லோக்சபாவிலும், இதே பிரச்னைக்காக குரல் கொடுத்த தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு, ""அமெரிக்காவின் தீர்மானத்தை, மேலும் கூர்மையானதாக, இந்தியா மாற்ற வேண்டும். இல்லையெனில், விபரீத விளைவுகள் ஏற்படும்,'' என்றார். அ.தி.மு.க.,வின் தம்பி துரை, ""அமெரிக்காவை விட, இந்தியாவே இந்த விவகாரத்தில், முன்னின்று செயல்பட வேண்டும். இந்தியா சார்பில், அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
விரைவில் இறுதி முடிவு: ""இலங்கை எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுபற்றி தீவிரமாக ஆய்வு செய்கிறது. இது முடிவு எடுக்கப்பட்ட உடன் சபையில் தெரிவிக்கப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ராஜ்யசபாவில் தெரிவித்தார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கைக்குப் பின், ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்த, சல்மான் குர்ஷித் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தீர்மானம் தொடர்பாக, என்ன நிலையை கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து, மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியது தேவையோ, அதை மத்திய அரசு எடுக்கும். போர்க் குற்றங்கள் தொடர்பாக, பாரபட்சமற்ற, சுதந்திரமான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு குர்ஷித் கூறினார்.
- நமது தில்லிச் செிர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக