செவ்வாய், 2 ஏப்ரல், 2013

உருவாக்கக் கல்வி



உருவாக்கக் கல்வி

படிப்பை,க், கசப்பாக நினைக்கும் குழந்தைகளை, ஆர்வமாக படிக்க தூண்டும், ஜெயபிரியா தேவி: நான், சென்னை, ஐ.ஐ.டி., யில், எம்.பி.ஏ., முடித்து, சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லூரியில், மாணவர்களுக்கான, "புராஜெக்ட்' பிரிவில் வேலை செய்தேன். திருமணமாகி, மகள் பிறந்தாள். புத்தகங்களே, என் அறிவுலகிற்கு வாசல். ஆனால், மகள் படிக்க மிகவும் சிரமப்பட்டாள்.படிக்கச் சொன்னால், கசப்பாக நினைப்பாள். இது, என் மனதிற்கு வருத்தத்தை தந்தது. குழந்தைகளுக்கான பாடத் திட்டத்தில் இருக்கும் குறைபாடே, குழந்தைகளுக்கு படிப்பின் மேல் வெறுப்பு ஏற்பட காரணம் என, புரிந்தது.புரிந்ததை எப்படி செயல்படுத்தலாம் என, சிந்திக்கும் போது உருவானதே, "கிரியேட்டிவ் எஜுகேஷன்!' இதற்கு, பல கல்வியாளர்களின் புத்தகங்களை படித்து, பாடப் புத்தகத்தை குழந்தைகள் விரும்பி படிக்க, ஒவ்வொரு பாடத்திற்கும் செய்முறை விளக்க வடிவிலான படங்கள், சார்ட்டுகள் என, தயாரித்து ஒன்று சேர்க்க, மிகுந்த கஷ்டப்பட்டேன்.

இம்முறையை, என் மகளுக்கு சொல்லி தந்து சோதித்ததில், நல்ல பலன் கிடைத்தது. பள்ளிகளுக்கும் பயன்படுத்த நினைத்து, அதற்கான, "டெக்னிக்கல் அவுட்லைன்'களை உருவாக்கினேன். செடிகள் வளர்வதற்கு, தண்ணீர் ஊற்ற வேண்டும் என, பாடமாக படிப்பதை விட, ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்ற வைத்து, செடி வளர்வதை காட்ட வேண்டும்.காந்த கொள்கையான, எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும், ஒரே துருவங்கள் விலகும் நிகழ்வை, குழந்தைகளை மனப்பாடம் செய்ய வைக்காமல், குழந்தைகள் கையில் ஒரு காந்தத்தை கொடுத்து, செய்முறையாக செய்து பார்க்க வேண்டும். இப்படி செய்யும் போது, அர்த்தம் புரியாமல், கசப்பு மனதுடன் மனப்பாடம் செய்யாமல், செயல் விளக்கத்தோடு படிப்பதால், வாழ்நாள் முழுவதும் மறவாமல், அனுபவ பாடமாக இருக்கும்."கிரியேட்டிவ் எஜுகேஷன்' முறையை, சென்னையில் உள்ள, 25 பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு செயல்படுத்தி வருகிறேன். குழந்தைகள், முன்பு போல் எவ்வித சிரமமும், மனப்பாடமும் செய்யாமல், புரிந்து படிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக