புதன், 3 ஏப்ரல், 2013

இளைஞர்களைக் கடத்திச் செல்லும் சிங்கள இராணுவம்



இளைஞர்களை க் கடத்தி ச் செல்லும் சிங்கள இராணுவம் : தனுசுகோடிக்கு த் தப்பி வந்த  ஈழத்தமிழர்கள்  தகவல்

ராமேசுவரம்:""இலங்கையில் யாழ்ப்பாணம், வன்னியில் உள்ள தமிழ் இளைஞர்களை, சிங்கள ராணுவம், கடத்தி சென்று சித்ரவதை செய்கிறது,'' என, தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த தமிழ் இளைஞர்கள் தெரிவித்தனர். இலங்கையில் ராணுவம் - விடுதலைப் புலிகளுக்கு இடையே போர் நடந்த போது, தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர். 2009ல் போர் முடிந்த பின், அகதிகள் வரவில்லை. ஆனால், புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என, இளைஞர்கள், இளம்பெண்களை இலங்கை ராணுவம் கடத்தி, சித்ரவதை செய்வது தொடர்கிறது.இந்நிலையில், ராணுவத்திற்கு தெரியாமல், யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரசாந்த், 19, வசந்தகுமார், 24, விஜயராஜ், 24, மன்னாரில் இருந்து, கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு, நேற்று அதிகாலை, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட, மூன்று பேரிடம், மத்திய, மாநில, வருவாய்துறையினர் விசாரணை நடத்தினர்.

இலங்கை நிலவரம் குறித்து பிரசாந்த் கூறியதாவது:யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களில், தமிழர்கள் வேலையின்றி, அன்றாட உணவிற்கு கூட அவதிப்படுகின்றனர். வன்னியில், இந்திய அரசு கட்டி கொடுத்த வீடுகளில், சிங்களர்கள் குடியேறி உள்ளனர். இவர்களுக்கு இலங்கை ராணுவம் உதவி செய்கிறது. போருக்கு பிறகு, புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என, இளைஞர், இளம்பெண்களை சிங்கள ராணுவத்தினர் கடத்தி, சிறையில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர். பெற்றோர், ராணுவத்திடம் முறையிட்டால், அவர்களை அடித்து விரட்டுகின்றனர். அதனால், உயிருக்கு பயந்து, எங்கள் பெற்றோர் உதவியுடன், அகதியாக இங்கு வந்தோம். லண்டன், ஜெர்மனியில் உள்ள, எங்கள் உறவினர்களிடம் செல்ல, இந்திய அரசு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தனுஷ்கோடி அரிச்சல்முனையில், நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, இறங்கிய மூன்று இளைஞர்களுடன், இளம்பெண் ஒருவரும் வந்ததாக, மீனவர்கள் கூறுகின்றனர். அவர் யார், எங்கு சென்றார் என்பது புரியாத புதிராக உள்ளதால், மூன்று இளைஞர்களிடம், உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மூவரும், பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக