புதன், 24 ஏப்ரல், 2013

பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்


அந்துமணி பா.கே.ப.,
"பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்றொரு நூல், சென்ற நூற்றாண்டு வரை, நம்மூரில், பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை, விலாவாரியாக விளக்கியுள்ளது. அதில்:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் முதலிய மாநிலங்களில், பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக் காணப்பட்டன என்று, ஆங்கிலேய அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில், ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள், ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில், ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை. இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில், பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை, உடனுக்குடன் அறிவிக்க ஆட்களை நியமித்தார் அலகாபாத் நீதிபதி.
குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள், காவல் அதிகாரிகள் முதலியோரும், அப்பகுதியில் பிறக்கும் பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தனர்.
மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக்கூட அறிய இயலாத பாலகர்களுக்கு, திருமணம் செய்து வைத்தனர். இதனால், பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க, 10 வயது முடியும் முன், அவளுடன், அவள் கணவன், பாலுறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசாங்கம். இதுவே எவ்வளவு கொடுமை.
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக் கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை அமைத்து, தங்கள் நியாயமற்ற, மற்ற இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர் ஆண்கள்.
இந்தியாவின், முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1871ல் எடுக்கப்பட்டது. அப்பொழுது, கல்வி அறிவு பெற்ற பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர். அதாவது, நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில் 14 கோடி பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடிப் பெண்கள் விதவைகள். இதில் வயதான விதவைகளைச் சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட கொடுமை இது! இதில்...
1 வயது விதவை - 579 பேர்.
1-2 வயது விதவை - 492 பேர்.
2-3 வயது விதவை- 1257 பேர்.
3-4 வயது விதவை- 2827 பேர்.
— இப்படிப் போகிறது இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!

பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும் இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில், திருமணமாகி செல்லும் பெண், எந்த வகையிலாவது தன் கணவனது, கணவனின் பிற உறவினர்களது, விருப்பத்திற்கு மாறாக நடந்தால், வேறு பெண்களை கணவன் திருமணம் செய்து கொள்ள முடியும். பல கணவன்மார் தங்கள் மலட்டுத் தனத்தை பெண் மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன் அவளையும் உடன்கட்டை ஏற்றினர். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு கருத்தை, சமூகத்தில் இவர்கள் பரப்பி, அதன் மூலம் இதற்கு பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நூல். நாம், நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி பீற்றிக்கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை.
***

சமீபத்தில் ஒரு வித்தியாசமான புத்தகத்தை படிக்க நேர்ந்தது. புத்தகத்தின் பெயர்: "மூதாதையரைத் தேடி!'
மூதாதையர் என்றால் யார்? மனிதனின் மூதாதை எது? குரங்கு என்று சொன்னார் சார்லஸ் டார்வின் என்ற ஆராய்ச்சியாளர்.
அப்படியானால் ஒரு கேள்வி... குரங்கிலிருந்து தோன்றினான் மனிதன் என்றால், இன்னும் ஏன் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? இந்தக் கேள்வி இன்னும் பல ஆராய்ச்சியாளர்களின் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கிறது.
இதற்கும், இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கும் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் நூலாசிரியர் சு.கி.ஜெயகரன்.
புத்தகத்திலிருந்து: 700 கோடி ஆண்டுகளுக்கு முன் - அப்போது பூமியில் எந்த உயிர் இனங்களும் தோன்றியிருக்கவில்லை - இருந்த பாறைகள் தான் இப்போதும் நீலகிரி மலைத் தொடரிலும், சேர்வராயன், கல்வராயன், ஜவ்வாது மலைத் தொடர்களிலும் இருக்கின்றன.
அடுத்து, நம் மூதாதையரின் (அதாவது, குரங்கு!) படிப்படியான வளர்ச்சியை படங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர்.
ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த குரங்கு, 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த குரங்கு, பிறகு 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஹோமோ ஹேமிலைன் என்ற குரங்கு. இதற்குப் பிறகு தான் குரங்கு உருவம் கொண்ட நியாண்டர்தால் மனிதனின் வளர்ச்சி!
இந்தப் புத்தகத்தைப் பற்றி லென்ஸ் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்: இதே போல் வேறொரு புத்தகம் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது..."கரப்பான் பூச்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும்' - படிக்கிறாயா? என்று கேட்டார்.
"வேலை இருக்கிறது...' என்று சொல்லி, தப்பியோடி வந்து விட்டேன்!
***

"திருடத் தெரிஞ்சாலும், தேத்தத் தெரியணும். சில அபிஷ்ட்டுகளுக்கு அந்த சாமர்த்தியம் போறாது...' என்றார் குப்பண்ணா.
"ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கைச் சரித்திரம் முன்பு வெளியாகியிருந்தது...'
"நேதாஜியுடையதா?' — லென்ஸ் மாமா.
"இல்லை இல்லை. இவர் சாதாரண சிப்பாய் தான். ஆனால், ஜெர்மானியரிடம் அகப்பட்டு அனுபவித்த சித்ரவதைகளும், தப்பி வந்த வீரச் செயல்களும் அவருக்கு நேர்ந்த மாதிரி யாருக்கும் நேர்ந்ததில்லை. எதிரிகள் பிரதேசத்தில் பாராசூட் மூலமாய் குதித்து அகப்பட்டுக் கொண்டாராம். எப்போது? இரண்டாம் உலகப் போரின் போது.
"அவருடைய வாயைப் பலவந்தமாக திறந்து, கொதிக்க கொதிக்க, வெந்நீர் ஊற்றினராம், ஹிட்லரின், நாஜிக்கள்! இப்படிப் பல செய்திகள்; ஊரெங்கும் சொற்பொழிவுகள்; பத்திரிகைகளிலெல்லாம் அவருடைய அனுபவங்கள். அமெரிக்காவில் அவருக்கு நிகரான வீரர் கிடையாதென்று ஆகிவிட்டது!'
"அடடே... அதை வாசிக்க வேண்டுமே!' — லென்ஸ் மாமா.
"முழுவதையும் கேளும் ஓய்... அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகமாக வந்து, அதன் சுருக்கம், "டைஜஸ்ட்' பத்திரிகையில் வெளிவந்தபோது தான், குட்டும் வெளிவந்தது. ஆசாமி முதல் நம்பர் சரடு என்று!'
"அடப்பாவி... எப்படி அது யாருக்குமே தெரியாமலிருந்தது?'
"அது தான் ஆச்சர்யம்! சுற்று வட்டாரம் ஐந்து மைலுக்கு அந்தண்டை அடி எடுத்து வைத்ததில்லை அந்த ஆசாமி. சும்மா ஒரு சமயம், யுத்தத்தில் தான் சேர்ந்தது போலவும், தமக்கு நேர்ந்த அனுபவங்கள் போலவும் கற்பனையாக நண்பர்களிடம் என்னவோ சொல்லப் போக, அது மற்றவர்களுக்குப் பரவ, கேட்கிறவர்களிடமெல்லாம் தன் கற்பனையை விரித்துக் கொண்டே போய் விட்டார். அப்புறம் அவராலேயே தப்ப முடியாத அளவுக்கு பிரபலமாகி விட்டார்!'
"பாவம்... ரீடர்ஸ் டைஜஸ்ட்காரனுக்கு ஒரே அவமானமாகப் போயிருக்குமே!'
"அவன் கெட்டிக்காரன். கட்டுரையை நிறுத்த முடியாத அளவுக்கு காலம் கடந்து விட்டது. "நீங்களே வாசித்துப் பாருங்கள். இவ்வளவும் பொய் என்று யாராலும் சொல்ல முடியுமா? அவ்வளவு உண்மை போல் இருக்கிறது...' என்று ஒரு குறிப்புடன் கட்டுரையை வெளியிட்டு விட்டான்...!' என்றார் குப்பண்ணா.
— இது எப்படி இருக்கு?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக