வெள்ளி, 10 மே, 2013

இசை - கவின் கலைப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்படும் - முதல்வர்

சுற்றுலா மேம்பாட்டுக்கு ச் சில திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், தமிழகத்தின் பாரம்பரியமிக்க பண்பாடு மற்றும் கலைகளை நல்ல முறையில்  பாதுகாக்கவும், அவற்றை இளைய சமுதாயத்தினர் இடையே எடுத்துச் செல்லவும் சில திட்டங்களை இன்று முதல்வர் பேரவையில் அறிவித்தார்.
விதி எண் 110ன் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பவியல் நிறுவனத்தில் மூன்றாண்டு பட்டயப் பயிற்சியும், ஓராண்டு சான்றிதழ் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஓட்டல் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டம் மற்றும் திறன் சார் பயிற்சித் திட்டங்களின் கீழ் திறன் சாராத நபர்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.    இந்த நிறுவனம் அனைத்து விதமான சுற்றுலா விருந்தோம்பல் கல்விக்கான சிறப்பு மையமாக 5 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்  .
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பெருமுக்கல் என்ற கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீமுக்யாசலேஸ்வரர் கோயில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் கோயில் ஆகும். செங்கல் கோயிலாக இருந்த இக்கோயில், சோழ மன்னனான விக்கிரம சோழ அரசர் காலத்தில் கற்கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும் வடமொழியில் ஸ்ரீமுக்யாசலேஸ்வரர் என்றும் வழங்கப் பெறுகிறது. தற்போது, இக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலை பழமை மாறாமல்  பாதுகாத்து மறு சீரமைப்புப் பணியை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் .
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் திருக்கோயில்களும் அவற்றில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இதுவரை தொல்லியல் துறையால் 24,060 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் தமிழ் பிராமி, வட்டெழுத்து, பண்டைய தமிழ், கிரந்தம், தெலுங்கு, கன்னடம், நாகரி போன்ற எழுத்து வடிவங்களில் உள்ளன.  தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறையால் 1967 ஆம் ஆண்டு முதல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு மைப்படிகள் சிதைந்து, கிழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.  இவற்றை ஒழுங்குபடுத்தி சீர் செய்து படிப்பதற்கு ஏற்றவாறு செய்வது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, இக்கல்வெட்டுகளை எண்ணிலக்கம், அதாவது னுபைவையடணையவiடிn முறையில் ஆவணப் படுத்துவதற்காகவும், மாவட்டம், வட்டம், ஊர், கோயில்கள் வாரியாக மைப்படிகளில் உள்ள குறிப்பிடப்பட்ட எண்களைக் கொண்டு தனித் தனியாக பிரித்து கணினியின் மூலம் பதிவு செய்வதற்காகவும், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் . இந்தப் பணிகள் நடப்பாண்டு முதல் மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும். இதன் மூலம் தற்போதைய மற்றும் வருங்கால ஆய்வாளர்களும், மாணவர்களும் மிகுந்த பயனடைவார்கள்.
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள 6 கட்டடங்களுள், 3 கட்டடங்கள் தொன்மையான பாரம்பரியமிக்க கட்டடங்கள் ஆகும். அதாவது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை. அத்தகைய கட்டடங்களில் ஒன்று ‘தேசியக் கலைக்கூடம்’ .  அந்த காலகட்டத்தில் இங்கு தொடர்ந்து அறிவார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன. சென்னையின் அடையாளக் கட்டடமாக விளங்கும் இந்தக் கட்டடத்தில் பாரம்பரியமிக்க தஞ்சாவூர், ராஜஸ்தான், டெக்கான், மினியேச்சர் எனப்படும் ஓவியங்கள் மற்றும் சந்தன மரச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கட்டடம் பழுதடைந்ததாலும், இக்கட்டடத்தின் ஒரு பகுதி ஏறத்தாழ ஒரு பக்கம் அழுத்தப்பட்ட நிலையில் இருந்ததாலும், பொது மக்களின் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்று 2002-ஆம் ஆண்டு  முடிவு செய்யப்பட்டு இந்த காட்சிக் கூடம் மூடப்பட்டது. எனினும், இந்தக்  கட்டடம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு இந்த கட்டடத்தை ஆய்வு செய்து, இப்புராதனக் கட்டடம் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது.  சென்னையின் அடையாளங்களில் ஒன்றான இக்கட்டடத்தை பழுது பார்த்து புதுப்பிக்க 11  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்  .
கலை பண்பாட்டுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவதன் மூலம் பாடத்தை ஒட்டிய கணினி மென்பொருட்களை நன்கு பயன்படுத்தி கலை படைப்புகளைப் புதுமையாகவும், பார்ப்போர் வியக்கும் வண்ணமும் செய்ய இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு,   இந்த மூன்று கல்லூரிகளிலும் இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் 633 மாணவ மாணவிகளில் ஏற்கெனவே 12 ஆம் வகுப்பின் போது விலையில்லா மடிக்கணினி பெற்ற 59 மாணவர்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள 574 மாணவர்களுக்கு விலையில்லா  மடிக் கணினிகள் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்  .
இதே போன்று, திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் அதாவது இளங்கலைப் பட்டப் படிப்பில் பயிலும் 32 மாணவ மாணவியரில்   ஏற்கெனவே  பள்ளிக் கல்வித் துறையின்  மூலம் 12ஆம் வகுப்பில் விலையில்லா மடிக் கணினிகள் பெற்ற 4 மாணவர்களைத் தவிர,  எஞ்சியுள்ள 28 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகள் 5 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்  .
கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், நான்கு அரசு இசைக் கல்லூரிகள், இரண்டு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் ஒரு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி ஆகிய ஏழு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தற்போது திருவையாறு, மதுரை, கோயம்புத்தூர் அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.  ஆனால், சென்னை அரசு இசைக் கல்லூரி, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படவில்லை.  இந்த மூன்று கல்லூரிகளில் பயிலும் 801 மாணவ மாணவிகளுக்கும் எதிர் வரும் கல்வியாண்டில் இருந்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். அதற்காக  10 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்  .
இசையானது ஆன்மாவுடன்  தொடர்புடையது என்பதை சாதி, சமய, மத சார்பற்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆகும். மனதையும், ஆன்மாவையும் இசைய வைப்பதே இசை.
மேற்கத்திய நடைமுறைகள் மற்றும் நாகரிகம்,  நமது இசையின் உண்மைத் தன்மையை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டும், மேற்கத்திய மற்றும் பாரம்பரியம் அற்ற ஓவியங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரவேற்பு நமது பாரம்பரியமிக்க ஒவியங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும்,  தமிழகத்தின் தொன்மையான இசை மற்றும் கலையினை பாதுகாத்து, அவற்றினை எதிர்கால இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு  ஆகிய இடங்களில் உள்ள அரசு  இசைக் கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மற்றும் இத்துறைகளைச் சார்ந்த அனைத்து உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்லூரிகள் மற்றும் இசை, நடனம், கவின் கலைகளை கற்பிக்கும் கல்லூரிகள் செயல்படும். இதர பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் இசை சார்ந்த, கவின்கலைப் புலம் சார்ந்த, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளும் இப்பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படும். இசை மற்றும் கலைக்கு பொதுவான பாட திட்டம், அவற்றை செயல்படுத்தும் நடவடிக்கைகள், ஆய்வுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள், தேர்வுப் பணி ஆகியவற்றை இந்த பல்கலைக்கழகம் மேற்கொள்ளும். இப்பல்கலைக்கழகத்தில்  குரலிசை, வீணை, வயலின், நாதஸ்வரம், தவில், மிருதங்கம், கடம், கஞ்சிரா, முகர்சிங், புல்லாங்குழல், பரதநாட்டியம், நட்டுவாங்கம், கிராமியக்கலை ஆகிய 13 துறைகள்  ஏற்படுத்தப்படும்.
- என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக