திங்கள், 20 மே, 2013

புது முறையில் குடமிளகாய்!

புது  முறையில் குடமிளகாய்!

நகரத்திலேயே, நவீன முறையில் குடமிளகாய் பயிரிட்டு வெற்றி பெற்ற, பொறியியல் மாணவன் நந்தகுமார்: நான், சேலத்தின் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரி. விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால், தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பி.டெக்., படித்த போது, கள ஆய்விற்காக பலவிதமான விவசாய பண்ணைகளை பார்வையிட்டேன். அந்த அனுபவத்தால், புதிய தொழில்நுட்ப முறையில், குடமிளகாய் சாகுபடி செய்ய திட்டமிட்டேன். என் வீட்டில் உள்ள, அரை ஏக்கர் நிலத்தில், "பசுமைக்குடில்' அமைத்து, சொட்டு நீர் பாசனத்தில், பயிர் செய்தேன். கார அமில தன்மையின் அளவு, "பி.எச்.6' ஆக இருக்கும் செம்மண்ணில் தான், குடமிளகாய் நன்றாக வளர்வதால், அரை ஏக்கர் களிமண் நிலத்தை சீர் செய்து, 45 டன் தொழு உரமிட்டு, அதை நன்றாக உழுது பின், செம்மண் நிரப்பி, நிலத்தை தயாரித்தேன். முதன் முறையாக விவசாயம் செய்ய, அரை ஏக்கருக்கு, 17 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு, மத்திய அரசின், என்.எச்.பி., திட்டம் மூலம், 4 லட்சம் ரூபாயும், மாநில அரசின், என்.எச்.எம்., திட்டம் மூலம், 6 லட்சம் ரூபாயும் மானியம் கிடைக்கும். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே, நாம் தேர்வு செய்ய முடியும். மீதி தொகையை, வங்கி மூலம் கடனாக பெறலாம். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காய்க்கும் குடமிளகாய் செடிகளை, ஒரு சதுர அடிக்கு, 4 செடிகள் வீதம், அரை ஏக்கருக்கு, 8,500 செடிகளை நட்டேன். ஒரு செடியின் விலை, 5 ரூபாய். நாற்று நட்ட, 85ம் நாட்களுக்குள், குடமிளகாயை அறுவடை செய்யலாம். அரை ஏக்கரில் பயிரிட்ட செடிகளிலிருந்து, தினமும், 80 முதல், 100 கிலோ என, ஒரு மாதத்திற்கு, 2.5 டன் வரையிலும், மொத்தத்தில் ஒரு செடியிலிருந்து, 6 கிலோ வரையிலும் அறுவடை செய்கிறேன். பசுமைக்குடில் அமைக்க, அதிக செலவானாலும், 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இதனால், எவ்வித சூழலிலும், எல்லா பருவ காலத்திலும், இதை பயிரிட்டு வளர்க்கலாம். சமீப காலமாக, குடமிளகாயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சராசரியாக, 1 கிலோ, 40 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன்.தொடர்புக்கு: 99947 71512.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக