திங்கள், 10 ஜூன், 2013

இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி மத்திய அரசின் இரண்டகம் : வைகோ

இலங்கை இராணுவத்துக்கு ப் பயிற்சி மத்திய அரசின் பச்சை த் துரோகம் : வைகோ

தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.
இத்தகைய சூழலில் இலங்கை இராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27 ஆம் தேதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களும் - தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவிக்கும் பிறநாட்டு இராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க முடியுமா? பயிற்சி தர முடியுமா?
தமிழ்நாட்டை - தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது. இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி யாதெனில், மே 27 ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இலங்கை இராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை” என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.
அப்படியானால், இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு தெரியாமலே நடக்கிறதா? இந்திய இராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா? தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?
ஈழத்தில் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ் இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.
இலங்கையில் 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் இராணுவ முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது.
இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் இலட்சக் கணக்கில் போர்க்கொடி ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற விபரீதமாகவே விளையும்.
உடனடியாக சிங்கள இராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சிங்கள ராணுவ வீரர்களை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்
சிங்கள ராணுவ வீரர்களை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்
சென்னை, சூன். 10-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலையால், ரத்தம் கசியும் தமிழர்களின் நெஞ்சில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு மேலும் ஒரு சூட்டுக்கோலை திணித்துள்ளது.

தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு தன் ராணுவத்தை ஏவி நடத்திய கோரமான கொலைக் குற்றத்திற்கு இந்திய அரசும் உடந்தையாகச் செயல்பட்ட கூட்டுக் குற்றவாளி ஆகும்.

2004-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன் இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் செய்ய முயன்றது. இதனால் கொடிய விபரீதம் தமிழர்களுக்கு நேரும் என கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாமல், ரகசியமாகவே அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது.

இலங்கையின் முப்படைகளுக்கும் தேவையான சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களைத் தந்தது. பலாலி விமான தளத்தை இந்திய விமானப்படை தன் செலவில் பழுது பார்த்து புதுப்பித்தது. சிங்களரின் வான்வெளித் தாக்குதலுக்கு ரடார்களைக் கொடுத்தது.

இந்தியாவின் முப்படைத் தளபதிகளை இலங்கைக்கு ரகசியமாக அனுப்பி வைத்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே இயக்கியது. இலங்கை கடற்படையோடு இந்திய கடற்படை 2007 இல் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டது.

இந்திய கடற்படையினுடைய உதவியால்தான் விடுதலைப் புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை கடலில் மூழ்கடித்தோம் என சிங்கள கடற்படை துணைத் தளபதியே பகிரங்கமாகச் சொன்னான். களத்தில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள், குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் முடிந்த 10.06.2013 இறுதிக்கட்ட யுத்தத்தின்போது துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கையே அம்பலப்படுத்தியது.

சிங்கள ராணுவத்தினர் மருத்துவமனைகள் மீதும், சின்னஞ்சிறு பிள்ளைகள் நடுங்கி ஒடுங்கிய பதுங்கு குழிகள் மீதும் குண்டு வீசிக்கொன்ற செயல் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நடைபெற்ற கொடிய மனிதப் பேரழிவுகளில் ஒன்றாகும்.

சிங்கள ராணுவம் என்பது காட்டுமிராண்டித்தனமாக தமிழர்களை மனித வேட்டை ஆடிய கொடியோர் கூட்டமாகும். “இந்திய அரசும் இந்திய ராணுவமும்தான் நாங்கள் நடத்திய போரை இயக்கியது” என்று சிங்கள அமைச்சர்களும், அதிபர் கொடியவன் ராஜபக்சேயும் மமதையோடு கூறினர்.

இந்திய ராணுத் தளபதியை கொழும்புக்கு அழைத்துச் சென்று விருதும் வழங்கினர். சிங்களர் கொடுஞ்செயலை எதிர்த்து, மைய அரசைக் கண்டித்து முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து மடிந்தனர்.

இத்தனைக்குப் பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டுவந்து விருந்து வைத்து காங்கிரஸ் அரசு வரவேற்றது. சிங்கள விமானப் படையினருக்கும், ராணுவத்தினருக்கும் தமிழ்நாட்டில் மத்திய அரசு பயிற்சி கொடுத்தது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பை மத்திய அரசு துச்சமாகக் கருதியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ் நாட்டின் முதலமைச்சர் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, பிரதமருக்கு மூன்று கடிதங்களும் எழுதினார்.

வெலிங்டனில் இருந்து சிங்கள ராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு விட்டதாக மத்திய அரசு ஒரு பொய்யான தகவலை முதலில் கொடுத்தது. உண்மை வெளிவந்து எதிர்ப்பு வலுத்த பின்னரே, வெலிங்டனில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டாலும், இந்தியாவின் வேறுறொரு பகுதியில் பயிற்சி பெற்றனர்.

ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. இத்தகைய சூழலில் இலங்கை ராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தசநாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27-ந் தேதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக மக்களும் தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள ராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்கும் பிறநாட்டு ராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க முடியுமா? பயிற்சி தர முடியுமா? தமிழ்நாட்டை தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது.

இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி யாதெனில், மே 27-ந்தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இலங்கை ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை” என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.

அப்படியானால், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு தெரியாமலே நடக்கிறதா? இந்திய ராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? இந்திய ராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக் கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா?

தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா? ஈழத்தில் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ் இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.

இலங்கையில் 2009-க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் ராணுவ முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக் கொண்டு இருக்கிறது.

இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் லட்சக்கணக்கில் போர்க்கொடி ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற விபரீதமாகவே விளையும்.

உடனடியாக சிங்கள ராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக