ஞாயிறு, 16 ஜூன், 2013

உலகத் தந்தையர் நாள்

வயிறோடு விளையாடும் கருவுடன், மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை. தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான். ஆனால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது. மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும். மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்... தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? "விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.இன்று தந்தையர் தினம். வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம். முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம். இங்கே... அப்பாவின் அன்பை, ஆசைகளை, அறிவுரைகளை ஆனந்தமாக வெளிப்படுத்துகின்றனர், இவர்கள்.

தந்தைக்கே முதல் "சல்யூட்'-ஆ.கணேசன், போலீஸ் உதவி கமிஷனர், மதுரை :நெல்லை மாவட்டம் களக்காடு எனது சொந்த ஊர். தந்தை ஆறுமுகம், தாயார் அன்னபூரணி தம்பதிக்கு ஆறு மகன்கள். மூத்த அண்ணன் சுப்பையா குலதெய்வ பூசாரி. அண்ணன் சுப்பிரமணியன், ஓய்வு போலீஸ் ஏ.டி.ஜி.பி., தம்பிகள் சுந்தரம் போக்குவரத்துத்துறை அதிகாரி, பொய்சொல்லாமெய்யப்பன் பஞ்சாப் நேஷனல் வங்கி முதுநிலை மேலாளர், முத்துக்கிருஷ்ணன் தூத்துக்குடி மெக்ரான் நிறுவன இன்ஜினியர்.தந்தை மில் ஊழியர், கோயில் தர்மகார்த்தா, ஐந்து பட்டணம் ஊர் அம்மன் கோயில் சாமியாடி, தேவாரம் மற்றும் திருப்புகழ் ஓதுவார், திருச்செந்தூர் சமுதாய மடத்தின் தலைவர் என பன்முகம் கொண்டவர். அவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி தெரியும். களக்காட்டில் பண்ணைத் தோட்டம், வீடு, வேலையாட்கள் என சகல வசதிகளுடன் தந்தை இருந்தார். 1967ல் பஞ்சம் வந்தபோது செல்வங்களை இழந்தார்.
"
இவ்வளவு கஷ்டத்திலும் மகன்களை படிக்க வைக்க வேண்டுமா? பேசாமல்... பூ கட்டும் தொழிலை பழகிக்கொடு,' என தந்தையிடம் உறவினர்கள் கூறினர். எனினும், எங்களை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும், என்பதே அவரது தீர்மானமாக இருந்தது. இதற்காக, கந்துவட்டிக்கு கடன் வாங்கி எங்களை படிக்க வைத்தார். சொத்துக்களை விற்று வட்டி கட்டினார். நான் 1981ல் போலீஸ் எஸ்.ஐ.,யானேன்.என் தந்தை படிக்காதவர். பள்ளி, கல்லூரிகளின் தாளாளர் அல்ல. எனினும், அவருக்கு ஊர்க்காரர்கள் "கல்வித்தந்தை' என பெயர் வைத்தனர். 96 வயதில் இறந்தார். பெற்றோர் நினைவாக பூர்வீக வீட்டை கோயிலாக்கி, ஆண்டு தோறும் குருபூஜை நடத்தி வருகிறோம். தினமும் தந்தை படத்திற்கு பூஜை செய்து "சல்யூட்' அடிப்பேன். இரவு தூங்கும் முன் பெற்றோரை வணங்கி விட்டு தூங்குவேன். ஏணிப்படியாக இருந்து எங்களை உயர்த்தி விட்டு அவர் கோபுரமானார்.தொடர்புக்கு 98435 44199

குறிக்கோளுக்கு உரமிட்டவர் என் தந்தை-என்.அறிவுசெல்வம், டி.ஐ.ஜி., திண்டுக்கல் :நான் பிறந்தது விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் கிராமம். எனது தந்தை நடேசன்,91, ஆரம்பபள்ளி ஆசிரியர். திண்டிவனத்தில் ஆங்கில பள்ளியில் 6ம் வகுப்பு சேர்த்தார்.நான் ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் போது, ஊக்கப்படுத்தும் வகையில், 25 பக்கம் வரை கடிதங்கள் எழுதுவார்.நான் ஐ.ஏ.எஸ்., எழுதி தோல்விகளை கண்டேன். அப்போது, எக்காரணத்தை கொண்டும், குறிக்கோளை விடாதே, என தையரிம் ஊட்டினார். நான் உயர் கல்வி படிக்க, நிலத்தை விற்றார். "கடந்த 1990ல் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் பணியில் சேர்ந்தேன். "இந்த வேலை சந்தர்ப்பத்திற்கு கிடைத்ததுதான். இதில் திருப்தி அடையக்கூடாது' என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, குரூப்-1 தேர்வு எழுதி வெற்றிபெற்று டி.எஸ்.பி.,யானேன். எந்த ஊரில் பணியாற்றினாலும், எனது தந்தையை என்னுடன் அழைத்து வந்து விடுவேன். தொடர்புக்கு 98408 55903

தந்தை, மகன் உறவில் கசப்புக்கு இடமில்லை-எம்.என். ராமதாஸ், ஸ்பின்னிங் மில் அதிபர்,விருதுநகர் :தந்தை எம்.நடராஜன், 1946ல் சேட்டு பஞ்சு கடையில், நான்கு ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து, 1953ல் ராம்கோ குழுமத்திற்கு பஞ்சு வாங்கும் புரோக்கரானார். 1986ல் சொந்தமாக பஞ்சுக்கடை வைத்தார். 1992 ல் சொந்தமாக ஸ்பின்னிங் மில் துவக்கினார். 2007 ல் பிரைவேட் லிமிட்டெட் ஆக்கினார். தனது வாழ்நாள் முழுக்க தொழிலில் கற்றுக்கொண்ட நுணுக்கங்களை, சில நாட்களில் கற்றுக்கொடுத்து, எங்களது சகோதரர்கள் 5 பேரையும் தொழில் அதிபர் ஆக்கினார். தொழிலில் நேர்மை, துணிச்சல் மட்டும் கடைபிடிக்க வேண்டும் என, அவர் சொன்ன தாரக மந்திரம்தான், இன்று வரை எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. 160 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. நானும் எனது சகோதரர்களும், அப்பாவுக்கு எந்த குறைவும் வைக்காமல்
பாதுகாத்தோம். தந்தை மகன் உறவில், என்றுமே கசப்பு ஏற்பட்டதேயில்லை. அவர் காட்டிய வழிதான், இன்றும் எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. அவர் எங்களுடன் இல்லை என்றாலும், எங்களின் உள்ளங்களில் நிறைந்து இருக்கிறார். தொடர்புக்கு 98423 43157.

அப்பாவுக்காக ஐ.ஏ.எஸ்., ஆசையைத் துறந்தேன்-எம்.மகேஸ்வரி, உதவி கமிஷனர், வணிகவரித்துறை, மதுரை:அப்பா மணிமுத்து, பத்தாவது வரை படித்தவர். மதுரை வேடர்புளியங்குளத்தில் சொந்தநிலத்தில் விவசாயம் செய்கிறார். நான் மூத்தவள், அடுத்து இரண்டு தம்பிகள். வெறும் வார்த்தையல்ல... நிஜமாகவே, எங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் எங்கள் அப்பா. செருப்பு அறுந்து போனால், பத்துமுறை தைத்து அணிவார். ஆனால் மதுரையில் எங்கு புத்தக கண்காட்சி நடந்தாலும், எங்களை அழைத்துச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வார். புத்தகங்கள் தான் எங்களை திசைமாற்றும் என்று சொன்னதோடு, வாசிப்பில் ஆர்வத்தையும் ஏற்படுத்தினார். அவரும் விரும்பி படிப்பார்.நான் இரண்டாவது படிக்கும் வரை, படிப்பில் பிரமாதமில்லை. ஒருமுறை திருக்குறள் போட்டியில் நான் தோற்றுவிட்டேன். ஆனால் அப்பாவிடம் போய், "நான் தான் முதலிடம் பெற்றேன்' என்று சொன்னேன். பரிசளிப்பு தினத்தன்று அப்பாவும் வந்துவிட்டார். முதல்பரிசு வேறொருவருக்கு கொடுத்தபோது, "உனக்கு ஏன் கொடுக்கலை' என்று கேட்டார். "அன்னைக்கு நான்தான் முதல் பரிசுனு சொன்னாங்கப்பா' என்று பொய் சொன்னேன்.ஆனாலும் திருக்குறள் வாங்கி கொடுத்து படிக்கச் சொன்னார். அன்றிலிருந்து படிப்பை நோக்கி என் பாதை சென்றது. திருக்குறள் மாவட்ட, மாநிலப் போட்டிகளில் முதலிடம் பெற்றேன். அப்பாவின் ஆசைப்படியே பி.எஸ்சி., விவசாயம் படித்தேன். எம்.எஸ்சி.,யில் நான்கு பாடங்களில் தங்கப்பதக்கம் பெற்றேன். அத்தனையும் அப்பா காட்டிய புத்தகப் பாதை தான் காரணம்.நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. ஐ.ஏ.எஸ்., ஆனபின் வேறு மாநிலம் சென்றால், அப்பாவை பிரிய நேரிடும் என்பதாலேயே ஐ.ஏ.எஸ்., தேர்வை தவிர்த்தேன். குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றேன். இப்போதும் வாரம் ஒருமுறை அப்பாவை பார்த்தால் தான், அடுத்த வாரம் தொடர்ந்து வேலை செய்வதற்கு புதிய தெம்பு கிடைத்தது போலிருக்கும். அடுத்த பிறவியில், அப்பா என் பிள்ளையாக பிறக்கவேண்டும். அவருக்கு நான் சேவை செய்ய வேண்டும். தொடர்புக்கு 98942 04908
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை-இன்று உலக தந்தையர் தினம் - :

அன்புக்கு எப்படி அன்னையோ, அதுபோல குழந்தையின் அறிவுக்கு தந்தையே முன்னோடியாக திகழ்கிறார். பெரும்பாலான வீடுகளில் குடும்ப நிர்வாகம் தந்தையின் கைகளிலேயே இருக்கிறது. குடும்பத்தில் தந்தையின் உழைப்பே அதிகமாக இருக்கும். வாழ்நாளில் கடைசிவரை, குழந்தைகளுக்காக உழைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) கொண்டாடப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும், இந்தியாவிலும் இத்தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் தந்தைக்கு, நேரிலோ, போனிலோ, பரிசுப் பொருள் அல்லது பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, இத்தினத்தை கொண்டாடலாம். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டும்.
எப்படி வந்தது:

அமெரிக்காவில் 1909ல், சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தனது தாயாரின் மறைவுக்கு பிறகு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை, கடுமையான சிரமங்களுக்கிடையே தந்தை வில்லியம் பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக இந்நாளை அறிவித்தார்.










பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம்! இன்று உலக த் தந்தையர்  நாள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக