ஞாயிறு, 28 ஜூலை, 2013

பெங்களூர் தமிழ்ச் சங்கத்துக்கு 10 காணி நிலம்

பெங்களூர் தமிழ்ச் சங்கத்துக்கு 10 ஏக்கர் நிலம்: கருநாடக அமைச்சர் உறுதி

சமூக நலப் பணிகளை விரிவாக்குவதற்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு மாநில அரசு சார்பில், 10 ஏக்கர் நிலம் வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் காமராஜர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கம், வகுப்பறைகள் திறப்பு விழாவிற்கு தலைமை வகித்து அவர் பேசியது: கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் மேம்பாட்டுக்காக, பெங்களூர் தமிழ்ச் சங்கம் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகத்தில் வாழும் கன்னடர்- தமிழர் இடையே நல்லிணக்கம் மேம்படும் வகையில் தமிழர்கள் இனி தங்களை தமிழ்க் கன்னடர் என்று கூறிக்கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். பெங்களூர் தமிழ்ச் சங்கம் தனது சமூக நலப் பணிகளை விரிவாக்குவதற்காக 10 ஏக்கர் நிலம் கேட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து நிலம் ஒதுக்க நேர்மையுடன் முயற்சி மேற்கொள்வேன். தமிழ்ச் சங்கத்தின் நற்பணிகள் தொடர வாழ்த்துகிறேன் என்றார் தினேஷ் குண்டுராவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக