ஞாயிறு, 14 ஜூலை, 2013

குறுந்தகவல் அனுப்பினால் கையூட்டு கேட்குநர் மீது நடவடிக்கை தமிழகத்தில் அறிமுகம்

எல்லாமே கண்துடைப்பு நாடகம்தான். ஊழலைக் கண்டுகொள்ளாமல் ஊக்கப்படுத்துவதே ஊழலில் பங்கு வகிக்கும் ஊழல் ஒழிப்புத் துறையின் முதன்மைப் பணியாகும். பலரறிந்த உண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு கூற விரும்புகின்றேன். ஒரு சமயம் அடையாற்றிலுள்ள ஊழல் ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில், ஒருவர் கையூட்டு கேட்கப்படுவது தொடர்பாக முறையிட்ட பொழுது, மாவட்ட அலுவலகத்தில் போய்ச் சொல்லுங்கள் என்றனர். அங்கே அவர் சென்று தெரிவித்த பொழுது, அங்குள்ள அதிகாரி, தான் இப்பொழுதுதான் வந்துள்ளதாகவும் விசாரிக்காகமல் முடிவு எடுக்க முடியாது என்றும் கூறி அவரை அனுப்பி விட்டார்.  பணம் கேட்டதில் ஒரு பகுதி முன்பணமாக உரூபாய் 10,000 எடுத்துக்  கொண்டு பணத்தை வரிசையாக அடுக்கிப் பல பக்கங்கள் ஒளியச்சுப் படி எடுத்து வைத்துக் கொண்டு , கையூட்டு கேட்டவரிடம் பணத்தை முன்பணம் எனக் கூறி அளித்து விட்டு வந்து விட்டார் நண்பர். ஒளியச்சுப் படிகளை எடுத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு அலுவலகம் சென்று காண்பித்து மீண்டும் முறையிட்டார். அதற்கு அங்குள்ள அதிகாரி, நீங்கள் வேறு எதற்காவது கொடுத்து இருப்பீர்கள்  கையூட்டு என்று எப்படிச் சொல்ல முடியும்?  வேண்டுமென்று பழி சுமத்துவதற்காக நீங்கள் போடும் நாடகமாகக்கூட இருக்கலாம். எனவே, நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.  மீண்டும் பரிந்துரையுடன் ஊழல் ஒழிப்பு அதிகாரியை அனுப்பிய பொழுது, சிறு ஒலிப்பதியனைக் கொடுத்து அனுப்பி அவர் பணம் கேட்கும் பொழுது அதனைப் பதிந்து வாருங்கள்; நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார் அந்த அதிகாரி. ஆனால், இந்தத்தகவல் பணம் கேட்டவரிடம் சொல்லப்பட்டு விட்டது. எனவே, அவர், இவர் போனதும் செயகைமூலமே கேட்டு பணம் வாங்கிக்கொண்டு, அடுத்துள்ள குளியலறைக்குச் சென்று எண்ணிப் பார்த்துவிட்டுத் தன் உள்பையில் வைத்துக்  கொண்டார்.  அன்று பேசா நோன்பு இருப்பதாகச் கைகை மூலம்  பொய்யாகத் தெரிவித்து, இவரை அனுப்பி விட்டார். இவர் மனம் தளராமல் ஊழல்துறை அதிகாரியிடம் விவரத்தைத் தெரிவிதததற்குப் பணம்கேட்டதற்கான சான்று .இல்லை. எனவே, நடவடிக்கை எடுக்க முடியாது என்று தட்டிக் கழித்து விட்டார். ஊழல்  ஒழிப்பு என்பது ஊழல் பற்றிய விவரம் தெரிவிததாலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், பணம் கொடுக்கும் பொழுது மட்டும்தான்  கையும் களவுமாகப் பிடிப்போம்!  அதற்குப் பின் வந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்பது சரியில்லை. ஊழல் ஒழிப்புத் துறையினர் பொழுது போக்கிற்காகவும், ஆதாயத்திற்காகவும் சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கின்றார்களே தவிர,  உண்மையாகப் பணியாற்றுவதில்லை.  இயக்குநரகத்தில்  நேரில் சென்று முறையீடு அளிக்க முயன்றால் விரட்டி அடித்து விடுகிறார்கள். தங்களை நேர்மையானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக எடுக்கும் சில நடவடிக்கைகளால் ஊழல் ஒழியாது. அரசும் ஆட்சியாளர்களும் நேர்மையாக இருப்பின், இத்துறையும் ஒழுங்காகச் செயல்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/




குறுந்தகவல் அனுப்பினால் இலஞ்ச நபர் மீது நடவடிக்கை தமிழகத்தில் அறிமுகம்
 
சென்னை: இலஞ்சம், ஊழல் குறித்து, மொபைல் போன், கணினி மூலம், பொதுமக்கள், எஸ்.எம்.எஸ்., புகைப்படம், வீடியோக்களை அனுப்பும், "விஜ்-ஐ' (விஜிலென்ஸ் ஐ) திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன், கணினி மூலம், எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில், "விஜ் - ஐ' என்ற புதிய திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், கொண்டு வந்துள்ளது. வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஊழலுக்கு எதிரான, ஐந்தாவது தூண், மெட், எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில், "விஜ்-ஐ' திட்டத்தை, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது.

சென்னை, தி.நகர், சர்.பி.டி.தியாகராயா அரங்கில், திட்டத்தை அறிமுகம் செய்து, மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் பேசியதாவது: ஊழல் பற்றி, எல்லா இடங்களிலும் பேச்சு நடக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டாக ஊழலை ஒழிப்பது குறித்தும் பேச்சு நடப்பது மிக நல்லது. ஊழலை ஒழிக்க, "விஜ்-ஐ' பயன்படும். இதற்கு, 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், மொபைல் போனுக்கு, விஜ்-ஐ மென்பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால், யூசர் நேம், ஐ.டி., கிடைக்கும். மொபைல் போன், கணினி மூலம், லஞ்சம், ஊழல் குறித்த, எஸ்.எம்.எஸ்., புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம். இது, ஆவணமாக்கப்பட்டு, உடனடி விசாரணை துவங்கும். நம்பிக்கையோடு அனுப்புங்கள். ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது: நாட்டில், நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. பணம் சம்பாதிக்கும் அதிகாரிகளை தான், "நல்லவர்' என்று கருதும் போக்கு காணப்படுகிறது. மத்திய பிரதேசத்தில், அரசுப் பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., கணவனும், மனைவியும், 320 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தெரிந்து, ஐந்து மாதங்களாகியும், வழக்கு கூட பதியவில்லை. அரசுகள், ஊழலை ஒழிக்கும் என, நினைத்தால் முட்டாள்தனம். நாம் நினைத்தால் முடியும்; அதற்கு இளைஞர்கள் முன் வர வேண்டும். இதற்கு, ஆர்.டி.ஐ., சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

ஊழல் எதிர்ப்பு இயக்க துணைத் தலைவர் அரசு பேசுகையில், ""முன்னேற்றத் திட்டங்களை ஒதுக்கி வைத்து, ஊழல் ஒழிப்பை முக்கியப்படுத்த வேண்டும்."விஜ்-ஐ' என்ற ஆயுதம், இளைஞர்களிடம் தரப்பட்டுள்ளது. எல்லா நிலைகளிலும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும். "யூத் விங்' தேர்தல் நேரத்தில், "யூத் இங்க்' ஆக மாறி, நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கினால், ஊழல் ஒழியும். மாநில விஜிலென்ஸ் பிரிவிலும் இந்த நடைமுறை வேண்டும்,'' என்றார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் பேசுகையில், ""ஊழல், லஞ்சம் மட்டும் தான் வெளிப்படையாக, திறமையாக நடக்கிறது. பல இடங்களில், இந்தப் பணிக்கு இவ்வளவு லஞ்சம் என, பட்டியல் போட்டு வசூலிக்கின்றனர். "விஜ்-ஐ 'யில் புகார் கொடுத்தாலும், ஊழல் குறையாது. பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான, பெரிய அளவிலான ஊழல்களை ஒழிக்க வேண்டும்,'' என்றார். முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல், "ஐந்தாவது தூண்' தலைவர் விஜய் ஆனந்த், "யூத் விங்' ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராமநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக