வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நற்பயனுக்காகத் தொண்டாற்றினேன்!

புண்ணியம் கிடைக்கச் சேவை செய்தேன்!

23 ஆண்டுகளாக, 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்ததுடன், 35 பயணிகளை காப்பாற்றியதற்கு, அண்ணா பதக்கம் பெற்ற, ஓட்டுநர் இராசகோபால்: நான், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள, கொடுங்குளத்தை சேர்ந்தவன். குடும்ப வறுமையால், 10ம் வகுப்பு வரை படித்தேன். லாரி கிளீனராக கடுமையாக உழைத்து, சொந்தமாக மினி லாரி வாங்கினேன். ஒரு முறை சவாரிக்கு செல்லும் வழியில், சாலை விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், போலீஸ் மற்றும் பொதுமக்கள், கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். நான், அடிபட்டவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உயிர் பிழைக்க வைத்தேன். "நீ நல்லா இருக்கணும்...' என, அவர் வாழ்த்தியதை, நான் புண்ணியமாக கருதினேன். அந்த வாழ்த்து, என் வாழ்க்கையை மாற்றியமைத்தது. ஏனெனில், ஒரு வேளை நான் விபத்தில் சிக்கி, மற்றவர்கள் இப்படி வேடிக்கை பார்த்தால், என் மனநிலை எப்படி இருக்கும் என, சிந்தித்தேன். அன்று முதல், யார் உயிருக்கு போராடினாலும், இறந்து கிடந்தாலும் அவர்களுக்கு உதவினேன். இதுவரை, 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்ததுடன், 15 உடல்களை உறவினரிடம் சேர்த்துள்ளேன். 20க்கும் மேற்பட்டவர்களை, மருத்துவமனையில் சேர்த்து, உயிர் பிழைக்க வைத்தேன்.
மார்த்தாண்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு லோடு ஏற்ற, மினி லாரி ஓட்டி செல்லும் போது, என் லாரியை அரசு பேருந்து வேகமாக கடந்தது. அப்பேருந்தின் பின் பக்க இரட்டை சக்கரங்களில் ஒன்று இல்லாமல் இருப்பதை கண்டு, லாரியை வேகமாக ஓட்டி அரசு பேருந்தை நிறுத்தினேன்.
பின், ஓட்டுனர் இறங்கி வந்து பார்த்த போது தான், சக்கரங்களின் நட்டுகள் சரியாக மாட்டப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 35 பயணிகளின் உயிரையும் காப்பாற்றினேன். அதற்காக, 2011ம் ஆண்டு வீர தீர செயலுக்கான, "அண்ணா பதக்கம்' வழங்கி, தமிழக அரசு பாராட்டியது. தொடர்புக்கு: 98431 07819

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக