வியாழன், 12 செப்டம்பர், 2013

இலங்கைக்குப் போர்க் கப்பல் : ஒப்பந்தத்தை முறி - செயலலிதா மடல்



இலங்கைக்கு ப் போர் க் கப்பல் வழங்கும் ஒப்பந்தத்தை முறிக்க வேண்டும்: த.அமைச்சருக்கு  முதல்வர் செயலலிதா மடல்
 
சென்னை:"இலங்கைக்கு ப் போர் க் கப்பல்கள் வழங்க, ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இந்தியா உடனான நட்புறவுக்கு, பாதிப்பு ஏற்படும் வகையில், இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, நான் பல முறை, உங்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோது, சமுதாய படுகொலை, போர் குற்றங்கள் நடந்தன. போர் முடிவுக்கு வந்த பிறகும், சிறுபான்மை சமூகமாக உள்ள, தமிழர்கள் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.சொந்த நாட்டிலே, அவர்கள், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். எனவே, "இலங்கையை நட்பு நாடு என, இந்தியா கூறிக் கொள்வதை, நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழக சட்டசபையில், வரலாற்று சிறப்பு மிக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, தமிழகத்தில், பயிற்சி அளிக்க, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும், என, உலக அளவிலான நிர்ப்பந்தத்தை, இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை.இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு, அரசியல் அதிகாரம் அளிக்கும், 13வது சட்ட திருத்தத்தை நீர்த்து போகச் செய்துள்ளது. மேலும், இலங்கை அரசு, தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. கடலில் மீன் பிடிக்க சென்ற, 97 தமிழக மீனவர்கள், இலங்கை சிறையில் வாடுகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில், இந்தியா, இரண்டு போர் கப்பல்களை, இலங்கைக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு, இலங்கைக்கு போர் கப்பல் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவற்றை வழங்கினால், அதை இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தும்.எனவே, போர் கப்பல்கள் வழங்க, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தமாக இருந்தாலும், தற்போதுள்ள சூழ்நிலையில், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவியும் வழங்கக் கூடாது.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக