செவ்வாய், 8 அக்டோபர், 2013

சீ.வி.விக்னேசுவரன் : நம்பிக்கையில்லாத் தீர்மானம் - பதவி இழக்கச் செய்யலாம்! – பரமேசுவரன்

சீ.வி.விக்னேசுவரன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு பதவி இழக்கச் செய்யலாம்! – பரமேசுவரன்

தமிழர்களுக்கு தீர்வு என்பது கிட்டாது என்பது தெரிந்தாலும், ஒன்றும் இல்லாவிட்டாலும் அதைக்கொண்டாவது ஏதாவது செய்ய முடியாதா என்ற நப்பாசையில் தமிழர்கள் அனைவரும் ஒரணியில் நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைத்தோம்.
parameswaran
பரமேஸ்வரன்
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை விடுத்து தமிழர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார்கள்.
ஐயா சம்பந்தன் அவர்களே, ஐயா விக்னேஸ்வரன் அவர்களே… தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள், தமிழீழ விடுதலைப்புலிகள் போர்க்குற்றம் புரிந்தவர்கள்… என்றுதான் சிங்கள அரசு அதிகாரபூர்வமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கைது செய்தோம் என அறிவித்தது. [ ஆனால் 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் கைது செய்ததாக  கடந்த கால தகவல்கள் உள்ளது ]
அத்தோடு மட்டுமல்ல போர்க்குற்றம், அவரைக் கொல்ல திட்டம் தீட்டியது, இவரை கொலை செய்தது என பல போராளிகளுக்கு போர்க்குற்றத்திற்காகவும், கொலைகளுக்காகவும் என தண்டனை வழங்கியாகிவிட்டது, தமக்கு சார்பானவர்களுக்கு மன்னிப்பு அளித்து, பதவியும் அளித்து உங்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தேர்தலிலும் நிற்க வைத்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளில் வேறு யார் தண்டிக்கப்படாமல் இருப்பதாக உங்கள் கண்களுக்கு தெரிகின்றது எனக் கூறுவீர்களா?
ltte-force
தமிழீழ விடுதலைப்புலிகள் படையணி
ஆக உங்களை பொறுத்தவரை சிங்கள அரசு தமிழீழ விடுதலைப்புலிகளை போர்க்குற்றத்திற்காகவும், கொலைகளுக்காகவும் தண்டித்தது போதாது என்றும், அனைத்துலகமும் தமிழீழ விடுதலைப்புலிகளை போர்க்குற்ற விசாரனை செய்து தண்டிக்க வேண்டும் என்கின்றீர்கள் ஐயா எவ்வளவு அறிவாளி நீங்கள்?
ஏற்கனவே தண்டிக்கப்பட்டு சிறைகளில் நடைபிணமாக வாழும் எஞ்சிய போராளிகளையும் சர்வதேசம் தண்டிக்க வேண்டும் என்ற உங்கள் சிந்தனைக்கு மனிதநேயத்தின் உச்ச விருதை அறிவிக்கச்  செய்ய வேண்டும்.
உங்கள் தேர்தல் அறிக்கையில் ஏன் ஐயா இன்றுவரை தமிழ் சிறுமிகள், சிறுவர்களை கடத்தி பாலியல் தொழிலுக்காக சிங்கள இராணுவத்திற்கும், வெளிநாட்டிற்கும் விற்கும் டக்லஸ் தேவானந்தா போன்ற ஏனைய கயவர்களுக்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் போனது? [ விக்கிலீக்ஸ் ஆதாரம்]
இன்று வரை உங்களை அரசியலில் தக்க வைக்க காரணமாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள்தான என்பதை எவ்வளவு வசதியாக மறந்துவிட்டீர்கள்! அதை மறுக்கத்தான் உங்களால் முடியுமா?
ananthi
ஆனந்தி
தேர்தல் நெருங்கியது, பரப்புரைகள் அனல்கள் பறந்தது, பிரச்சாரத்தின் அனல் வெப்பம் தாங்க முடியாமல் சிங்கள அரசு பல நாசகார வேலைகளில் ஈடுபட்டது, விடுதலையின் வேட்கையை உச்சத்தில் வைத்து சிங்களத்தை தனது பேச்சுக்களால் சுட்டெரித்த ஆனந்தி அக்காவின் உயிர் தப்பியது நம்பமுடியாத நிகழ்வாக உள்ளது.
அந்த அளவுக்கு தேர்தலில் சிங்கள அரசுடன் ஒட்டுக்குழுக்கள் பல வழிகளில் உயிர் ஆபத்துக்களையும், சேதங்களையும் தோற்றுவித்து வேட்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்காளர்களான பொது மக்களுக்கும் தனது பயங்கர முகத்தை காட்டியும், மிரட்டியும் பார்த்தது. வீரம் நிறைந்த அந்த மக்கள், தங்கள் நிலைகளில் உறுதியாக நின்றார்கள்.
இப்படி அரங்கேறிய ஏதாவது ஒரு அநீதிக்காவது உங்களால் நீதி பெற முடிந்ததா? அவ்வளவு ஏன் ஐயா, உங்கள் அருகில் இருந்து பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக முழங்கி, சிங்கள பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட உங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு உங்களால் நீதி பெற்று கொடுக்கப்பட்டதா? குற்றவாளிகளுக்கு ஆதரவாக சென்று நீதிமன்றத்தில் வாதாடும் சுமந்திரன் போன்றவர்களுக்கு இதற்கு எதிராக தன்னிச்சையாக வழக்கு தொடுத்து வாதாட முடியாதா? கேள்வி கேட்டால் அது அவர்கள் வழக்கறிஞர் தொழில் என்பீர்கள் ஆனால் அவர்கள்தான் மக்களுக்கு உழைப்பவர்கள் என்பீர்கள்! என்ன விந்தை?
பல ஆபத்துக்கள், மிரட்டல்கள், கொலைகள் கடத்தல்கள் என அனைத்தையும் சுமந்து கடந்து மக்கள் பெரும்பான்மை வாக்குகள் இட்டு, சிங்கள அரசுக்கு பாடம் புகட்டி போய்விடுங்கள் எங்களை நிலத்தை விட்டு என அனுப்பி வைத்தால்.
vikneswaran
மகிந்தவிடம் பதவி ஏற்கும் சீ.வி.விக்னேஸ்வரன்
வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, வீர வசனம் பேசிவிட்டு போ என மக்கள் அனுப்பி வைத்தவனை வா…வா…வா… என அழைத்து வந்து காலில் விழுந்து விருந்து வைத்தது எதற்காக என ஓட்டுப் போட்ட மக்களுக்கும் கூட்டமைப்புக்கு ஓட்டு போடுங்கள் என உறவினர்களுக்கும், சொந்தபந்தங்களுக்கு கூறிய எங்களுக்கும் உங்கள் பதிலை சொல்ல முடியமா?
பல மாகாண சபை உறுப்பினர்கள் மனதிற்குள் புழுங்குகின்றார்கள், உங்கள் இந்தச் செயல் பற்றி வாய்திறக்க பலம் அற்ற சுயநலவாதிகளாகவும் சிலர் இருக்கின்றார்கள். ஆனால் வாக்களித்த மக்களையும், மகிந்தவிடம் பதவி ஏற்பு வேண்டாம் என தடுத்த பெருமக்களையும் புத்திஜீவிகளையும் புறக்கணித்து, மகிந்தவின் காலில் தஞ்சம் அடையவா நாம் வாக்களித்தோம் அதற்கு நாங்கள் மகிந்தவிற்கே வாக்களித்திருக்களாமே என்று மக்கள் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? இல்லையென்றால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், வரலாறு உங்களுக்கு பாடம் புகட்டும், இவைகளுக்காக பாதகங்களை நீங்களே சுமப்பீர்கள் இது உறுதி.
மாகாண சபை உறுப்பினர்களே உண்மையான விடுதலை வேட்கை உங்களுக்குள் இருக்குமாக இருந்தால்? மாவீரர்களின் வழி நீங்கள் வந்தவர்களாக இருந்தால், உண்மையை கூறியே மக்களிடம் வாக்கு பெற்றதாக இருந்தால், நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே…
நம்பிக்கை இல்லாத் தீர்மானம், சீ.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவருக்கு நீங்கள் அளித்த முதல்வர் பதவியை விட்டு அகற்றுங்கள். அதற்கு பொருத்தமானவரை தேர்வு செய்யுங்கள். இதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் சத்தியமான செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக