புதன், 16 அக்டோபர், 2013

மாலை முரசு நிருவாக இயக்குநர் பா.இராமச்சந்திர ஆதித்தன் மரணம்

மாலை முரசு நிருவாக இயக்குநர் பா.இராமச்சந்திர ஆதித்தன் மரணம்
மாலை முரசு நிர்வாக இயக்குனர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்
சென்னை, அக்.16–
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பா.ராமச்சந்திர ஆதித்தன். மாலைமுரசு நாளிதழின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார்.
சென்னை அடையாறு காந்திநகர் 3–வது தெருவில் வசித்து வந்த அவர் இன்று காலை 9 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.
பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பா.ராமச்சந்திர ஆதித்தனின் இறுதிச்சடங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதன்பிறகு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது.
பா.ராமச்சந்திர ஆதித்தனுக்கு, பங்கஜம் அம்மாள் என்ற மனைவியும், இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகிய 2 மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர்.

பா.இராமச்சந்திர ஆதித்தன் மரணம்: கருணாநிதி–.வாசன், வைகோ இரங்கல்
பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: கருணாநிதி–ஜி.கே.வாசன், வைகோ இரங்கல்
சென்னை, அக். 16–
மாலைமுரசு நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:–
சி.பா. ஆதித்தனார் அவர்களின் மூத்த மைந்தர், அருமை நண்பர், பா. ராமச்சந்திர ஆதித்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். தமிழ், தமிழர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பவற்றில் என்றைக்கும் குறையாத அக்கறையும் ஆர்வமும் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தன்.
நான் முதல்–அமைச்சராக ஆன போது மிகவும் பெருமைப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்–அமைச்சராக ஆகியிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டியவர்.
அவர் மறைவு, தமிழ்ச் சமுதாயத்திற்கும், பத்திரிகை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவருடைய அருமைச் செல்வன் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாலை முரசு இதழில் பணியாற்றும் தொழிலாளத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:–
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் தலைமகன், மாலைமுரசு ஏட்டின் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார்.
துன்பப்படுகின்றவர்களுக்கு உதவுகின்ற இரக்க சுபாவம் மிக்கவர். அன்னாரது இளவலான சிவந்தி ஆதித்தனார் மறைந்த ஆறு மாத காலத்திற்குள் ராமச்சந்திர ஆதித்தனாரும் மறைந்த துக்கம் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது.
அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் ம.தி.மு.க.வின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய மந்திரி ஜி.கே.வாசன்:–
தந்தை வழியை பின்பற்றி பத்திரிகை துறையில் தனி முத்திரை பதித்தவர். பாமரர்களும் படிக்கும் வகையில் பத்திரிகை நடத்தி வந்தார். மிகவும் எளிமையானவர். அன்பாக பழகக் கூடியவர். அவரது மறைவு பத்திரிகை துறைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அவரைச் சார்ந்த பத்திரிகை ஊழியர்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:–
மாலை முரசு நாளிதழின் நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தன் இயற்கை எய்தி விட்டார் என்ற தகவல் அறிந்து மிகவும் துயரமடைந்தேன். அனைத்து கட்சித் தலைவர்களின் பேரன்புக்கும் பாத்திரமானவர். அவரது இழப்பு தமிழக மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் மோகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக