திங்கள், 27 ஜனவரி, 2014

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு…!

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு…!


 - செயசிரீ சங்கர்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி”

 thaipuusam01
தைப்பூசம் என்பது  தை மாதத்தில்   பூச நட்சத்திரமும்  முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச  ஒளி வழிபாட்டு விழா  முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.
ramalinga adikal02

முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார்தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய  நாள் வடலூரில் வள்ளலாருக்குரிய  நாளாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்புப் பூசனைகளும் அன்னதானமும் இன்றும்  சிறப்பாக நடைபெறுகின்றன. ஒளிக் காட்சிகாண மக்கள் அலை அலையாக வடலூருக்கு வருகை தருவார்கள்.

வள்ளலார் என்பவர் யார்..? தைப் பூச  ஒளிக்காட்சிதான் என்ன? இதோ…! (விக்கிபீடியா தகவல்களுடன்)

கடலூருக்கு அருகே உள்ள மருதூர் எனும்  சிற்றூரில் இராமையா, சின்னம்மை  இணையருக்கு 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஐந்தாவது ஆண் குழந்தையாக இராமலிங்கம் பிறந்தார்.

தந்தை காலமான பின்பு தாய் தனது குழந்தைகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயிலத் தொடங்கினார். அடிக்கடி இராமலிங்கம் கந்தகோட்டத்துக் கந்தசாமி கோயிலுக்குச் செல்வார். இளம் அகவையிலேயே இறைவன் மீது  மிகுதியான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோவிலே கதி என்றிருந்த  இராமலிங்கத்தை அவரது அண்ணன் கண்டித்துத் தனது மனைவியிடம் இராமலிங்கத்துக்கு சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கி இராமலிங்கம் வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

அவர்களது வீட்டில்  இராமலிங்கத்துக்கு மாடியறை ஒதுக்கப்பட்டது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில்  முனைப்பாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பேரின்பமுற்றுப் பாடல்கள் பாடினார்.

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணனுக்கு ஒருமுறை உடல்நலம் குன்றியபோது அவர் தம்பி ramalinga adikal01 இராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி இராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய  நாள் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்னபடியே சில பாடல்களை  இராமலிங்கம் மனமுருகப் பாடினார்.  இதன்பின், அவரிடம் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அனைவரும் வற்புறுத்தவே, இராமலிங்கமும் அதற்கு இசைந்து இரவில் நெடுநேரம் சொற்பொழிவு செய்யவும், அங்கிருந்தோர் அனைவரும் வியந்து போற்றினர். அப்போது  இராமலிங்கத்துக்கு ஒன்பது  அகவை தான் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பன்னிரண்டாம் வயதில்  நாள்தோறும் ஏழுகிணறு பகுதியிலிருந்து நடந்தே திருவொற்றியூர் சென்று வழிபட்டு வரத்  தொடங்கினார் இராமலிங்கம், பலரது வற்புறுத்தலுக்கு இணங்கத் தன் இருபத்தேழாவது  அகவையில், அவரது  தமக்கையின் மகள் தனக்கோடியைத் திருமணம் புரிந்து கொண்டார். எனினும்இராமலிங்கம் அவர்கள் அமைதியை நாடினார். கடவுள் என்றால் என்ன? என்று அறிய விரும்பி, 1858-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல திருத்தலங்களைப் பார்வையிட்டுச் சிதம்பரத்தை வந்தடைந்தார்.

அங்கே கருங்குழி  ஊரின் மணியக்காரரான திருவேங்கடம் என்பவர்  இராமலிங்கத்தைச் சந்தித்து தனது இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு அவரது இல்லத்தில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார்  இராமலிங்கம்.

அவர் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்தவர், பின்னர் அதைத் தூய்மையாக்கி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார். கலயத்தில் நீர் அப்படியே இருந்தது.

அன்றிரவுஇராமலிங்கம் வெகுநேரம் வரையில் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும்பொதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று நினைத்து விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு  ஒளிவிட்டுத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.

கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு  இராமலிங்கம் சமரச வேத சன்மார்க்கச் சங்கம்என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் அதைச் “சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கம்என்று மாற்றியமைத்தார். அதில் மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள் பலவற்றை அறிவித்தார்.  உயிர்க்கருணை (ஜீவ காருண்ய) ஒழுக்கத்தைகடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று  அறிவுறுத்தி வந்த அவர், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும்  ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867-ஆம் ஆண்டு, மே மாதம் 23-ஆம் நாளன்று அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து அன்னம் உருவாக்க எரிந்த வண்ணம் இருப்பது  விந்தை தரும் செய்தி.

தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிளிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்கள்  பயன்படாமல் இருந்து வந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். அந்த இடத்துக்குச் சித்தி வளாகத் திருமாளிகைஎன்றும் பெயர் சூட்டினார். அங்கு அவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம்செய்து வந்தார். அதாவது, இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில்இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் உடலை வெப்ப உடலாக ஆக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய ராமலிங்க அடிகளார் வள்ளலார் என்று அறியப்பட்டு சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபைஎன்று பெயர் சூட்டினார்.

25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே பேருபதேசம்என்று சொல்லப்படுகிறது.

தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கிச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார். மக்களிடம், தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொன்னவர், தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்என்று  உறுதி அளித்தார்.

1874-ஆம் வருடம் தை மாதம் 19-ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது   முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

அன்று முதல் வள்ளலார்  இராமலிங்கம் அடிகளார், உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக  விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும்  பூச நாட்களில்  சிறப்பு வழிபாடு நடைபெறும்.தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க  இசைவளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற  ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம்தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.  ஒளிக்காட்சி  என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான்  ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும்  ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படும். திரைகள் விலகியதும் ” அனல் பிழம்பாக  ஒளிக்காட்சி” கண்ணாடியில்  கண்டதும்  நம் உள்ளே கண்டிப்பாக அதிர்வு ஏற்படும்.

அவர் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை  அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. அது தான் அந்த அறைக்குள் இருக்கும்  ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொளிக்கிறது. அந்தத் தீபத்தின் எதிரொலியே ஒளிஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள்  சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

இதற்காக  இலட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் காத்திருப்பார்கள். இறைக்காட்சியோடு, தங்களையே தாங்கள்  காணும் உணர்வு இந்தப் பொழுதில் கிடைத்து விடுவதாக  மரபு. அன்று  வண்டி வண்டியாக உணவுகள்  ஆக்கி அன்னதானம் செய்விப்பார்கள். பசி என்பதே வடலூரில் இல்லாது செய்தார் வள்ளலார். பிற உயிர்களின் பசிப் பிணி போக்கி ஒப்பில்லாத  நிறைவான இன்பத்தை அளிப்பவர்கள் நல்வினையாளர்கள். இந்த நல்வினைக்கு வேறு எதையுமே இணையென்று சொல்ல முடியாது. இந்த நல்வினையைச் செய்கின்ற  நல்வினையாளர்களை எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது..? இவர்கள் அனைவரும் தெய்வப் பண்பு பொருந்தியவர்கள் என்றே சொல்ல வேண்டும்.  வள்ளலார் சித்த மருத்துவரும் ஆவார். அவரது மருந்துக் குறிப்புகள் இன்றும் மக்களுக்குப் பயன்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாகச் சூழ்நிலையின் காரணமாகச் சிதம்பரத்தில் வசிக்கும் பேறு பெற்றேன். அப்போது வடலூரில் வள்ளலாரின் ” ஒளிக்காட்சிகாணும் பேறு பெற்றேன். ஒவ்வொருமுறை அங்கு செல்லும் போதும் மக்களின் கூட்டத்தையும், அங்கு அன்னதானம் நடத்தும் பாங்கையும் கண்டேன். மூட்டை மூட்டையாக அரிசியையும், பருப்பையும் கொண்டு வந்து குவிப்பார்கள்  அன்பர்கள். இதைக் காணும் போது நம்மையும் அது போலச் செய்யத் தூண்டும். பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை   நோன்பாகவே எடுத்துக் கொள்ளத் தூண்டும்.

தமது வாழ்நாளில் ஒரு முறையாவது வடலூர் சென்று திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் சத்திய ஞானசபையைப் பார்த்துவிட்டு வாருங்கள். அங்கு வள்ளலார் இயற்றிய திருவருட்பாவும் மகாதேவமாலையும் பளிங்கில் செதுக்கியிருக்கும் அழகைப் பார்த்தால் கண்கள் பனிக்கும் .வெண்ணிற ஆடையில் தன்னை மறைத்துக் கொண்டு தானே ஒளியாக நின்ற பெருமான் நமக்கு அருளியிருப்பது பல நல்ல  செய்திகள். கடை விரித்தேன் கொள்வாரில்லை‘….என்பதைப் பொய்யாக்க்கும் பெரும் பொறுப்பு தற்போது நம்மிடம் உள்ளது.
தைப்பூச நாளில் காலை 6.30,10.00 மதியம் 1.00 இரவு 7.00, 10.00 மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில்  ஒளிக்காட்சி நடைபெறும். 
 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக