ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா


இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா

சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு.

இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும்.
thamizh-hindi02
சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு  வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு.
1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய மனமும் மாறும் என்று எண்ணினேன்anna02. எவருடைய உளத்திலே மாற்றம் ஏற்படுமென்று நினைத்தோமோ, அவருடைய மறைவு நமக்கு உண்மையிலேயே பேரிழப்பாகும். அவரைப்பார்த்து அரசியலில் நிரம்பப் பாடம் பெறல் வேண்டும்; சிறப்பான பண்பைக் கொண்டவர் மறைந்து விட்டார். இதைக் கேட்ட பொழுது இந்தி எதிர்ப்பு அறப்போராட்டத்தில் எனக்குச் சோர்வு தோன்றியது; இனி நம் போராட்டத்தை புரிந்து கொள்வார் இலரே என்று நினைத்தேன்.
கடமையுணர்வு:
யார் புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், நம் கடமையை நாம் செய்வோம்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தி.மு.கழகம் மிக உறுதியாக இருக்கிறது.
இலால்பகதூர் பற்றி அண்ணா:
இன்றைய இந்தியத் தலைமையமைச்சர் உயர்திரு. இலால்பகதூர்(சாத்திரி) பற்றி நான் அதிகம் அறியேன். அறிமுகம் அதிகம் இன்று. இலால்பகதூர் அவர்கள் ஊகம் நிறைந்தவர்; முகமலர்ந்து பேசாப் பண்பினர்.
இந்தியமேலவையில் அவர் இந்தியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ‘‘சென்னையில் இந்திக்கு ஆதரவு மிகுதி. அண்மையில் சென்னை சென்றிருந்தபொழுது இந்தி மொழி பரப்பும் கூட்டத்தில் ‘இந்தியில் பேசவா? ஆங்கிலத்தில் பேசவா?’ என்று கேட்டேன். இந்தியிலே தான் பேசும்படி கூறினார்கள். அங்கிருந்த மூவாயிரம் பேர்களும் இந்தியை ஆதரிக்கிறார்கள்’’ என்று கூறி என்னை உற்றுப் பார்த்தார்.
நான் விடையிறுத்தபொழுது, ‘‘இந்திமொழி பரப்பும் அவையிலேயே இந்தி மொழியில் பேசாவிடில் வேறெங்கு போய் இந்தியில் பேசுவது?’’ என்று கேட்டேன். “இந்திமொழி பரப்பும் அவையிலேயே, அமைச்சருக்கு இந்தியில் பேசலாமா? ஆங்கிலத்தில் பேசலாமா? என்னும் ஐயம் எழுந்ததே! அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை” என்றேன். இதற்குச் சாத்திரி விடையிறுத்தாரில்லை.
இந்தி எதிர்ப்பின் பலன் தனி இதழ்
தலைமையமைச்சர் ஆன பின்னர் வானொலியில் தமது சொற்பொழிவை இலால்பகதூர் அவர்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வுணர்வு எப்படி முகிழ்ந்தது? தமிழக மக்கள் இந்தியை எந்த அளவிற்கு எதிர்க்கிறார்கள் என்பதை தலைமையமைச்சர் நன்கு புரிந்திருக்கிறார்
சிறைக்குச் செல்வதால் ஊக்கம் குறையவில்லை; உற்சாகம் குன்றிவிடவில்லை. வெள்ளையாரின் ஆட்சியை ஒழிக்கக் காங்கிரசுக்காரர்கள் எவ்வாறு சிறை சென்றார்களோ, அத்தகைய பான்மையில், இன்று இந்தி மொழிவெறியை ஒழிக்க நாங்கள் சிறை செல்கிறோம். அரசை எதிர்த்துச் சிறைபோகும் அச்சம் தி.மு.கழகத்திற்கு இல்லை.
சட்டம் பாதுகாக்கும் கேடயம்;
பழிவாங்கும் வாள் அன்று.

ஆளும் கட்சியினர் சட்டத்தைக் கேடயமாகவே பயன்படுத்தல் வேண்டும்; வாளாகப் பயன்படுத்தல் நன்றன்று. இன்றைய ஆட்சியினர் எதிர்க்கட்சிகளை அழிக்கும் ஆயுதமாகவே சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தஞ்சையில் அரசியல் சட்டத்தை எரிக்கப் போவதாகக் கருணாநிதி அறிவித்திருக்கிறார். சென்னையில் சட்டத்திற்கு எரியூட்டப் போவதாக நடராசன் தெரிவித்திருக்கிறார். மதுரையில் நடந்த போராட்டத்தில் அமைதி காக்கும் பொருட்டுப் பொறுப்புமிக்க தலைவர்கள் என்ற முறையில் அவண் சென்றார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடருவானேன்?
சட்டம் எனக்குத் தெரியாவிட்டாலும், நீதி பற்றிச் சிறிதளவு அறிவேன். பின்னர் சிறைக்குச் செல்பவர்களை முன்னரே சென்று விடுங்கள் என்று இயம்புவது போன்றுதான் இருக்கிறது இந்நிகழ்ச்சி. இஃது எதைக் காட்டுகிறது? பலரை வெளியேவிட்டு வைத்து ஆட்சி நடத்துவது ஆபத்து என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
4 பேர் சிறை சென்றால் 40 பேர் வெளியே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் போராட்டத் திட்டத்தை வகுத்தேன். எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கழக வேலைகளைத் தடைபடவைக்கும் ஏமாறி அல்ல நான்.
இந்தியை எதிர்ப்போர் யார்?
சென்னை மாநகராட்சியை தி.மு.கழகத்திடம் ஒப்படைப்பதற்காக அரும்பாடுபட்ட வீரத் தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நான் சிறையை விட்டு வெளிவந்த பொழுது மாற்றுக்கட்சி  நகர்மன்றத் தலைவரைக் காணின். சற்று நாணியே வந்திருப்பேன். வெளியே நான் இருந்து வெற்றி காண முடியாத பெரு வெற்றி இது. மக்கள் தி.மு.கழகத்தின் பக்கம் அணி வகுத்து நிற்கிறார்கள் 11நகர் மன்றங்களில் தி.மு.கழகம் ஆட்சி நடத்துகிறது.
இதற்கு முன் இந்தியை எதிர்த்தவர்கள் கழகத்தில் உள்ள எளிய தோழர்கள்தான். ஆனால் இன்று இந்தியை யார் யார் எதிர்க்கிறார்கள் தெரியுமா? மாநகராட்சித் தலைவர் எதிர்க்கிறார்; துணைத் தலைவர் எதிர்க்கிறார்; நகர்மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள்.
இதன் பொருள் விளங்குகிறதா? உங்களைக் கேட்கவில்லை. மற்றவர்களைக் கேட்கிறேன். இந்தி எதிர்ப்பை எளிய ஒன்றெண்ணி ஏமாற வேண்டாம். இந்தியை எதிர்க்கும் பொருட்டு எளிய மக்களையெல்லாம், தலைவர்களாக்குகிறார்கள்.
இறுதிவரை இந்தியை எதிர்த்தே தீருவேன்.
பொது மக்களுக்குப் பணிவன்போடு ஒரு செய்தியைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கழகத்தை ஆதரித்தால் கழகப்புகழ் அதிகமாகும் என்று கருதாதீர்கள். தி.மு.கழகம் நடத்தும் இப்போராட்டம், இந்தி பேசாத மக்களுக்காகச் செய்யும் திருத்தொண்டு, அறப்போராட்டம்.
தி.மு.கழகத்தின் அறப்போராட்டம் என்ன ஆகும் என்ற கேள்விக்கு விடையிறுக்கிறேன்.
இந்தப் போராட்டம் பட்டுப் போய்த் துவண்டுவிடுமேயானால், யாருக்கு இழப்பு? இஃது அரசியல் தொடர்புடையதன்று; எதிர்கால உயர்வையும் தாழ்வையும் உறுதிப்படுத்துகின்ற உயிரினும் மேலான ஒன்றாகும்.
இப்போராட்டத்திலேயே எங்கள் வாழ்வு முடியுமேயானாலும், நிறைவோடு அம்முடிவை ஏற்போம்; புன்னகை தவழும் முகத்தோடு, தாய்நாட்டுக்குப் பணி செய்தோம் என்று மடிவோம்;  மறங்குன்றோம்!
எங்களுடைய பேரப்பிள்ளைகள் பிற்காலத்தில் பெருமைப்படுவார்கள். எங்கள் தாத்தா இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தார் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களைப் பார்த்து உங்கள் பாட்டனார் கோழை என்று சொல்லிக் கேலி செய்வார்கள் அப்படிப்பட்ட பிற்காலப்பழியைத் தேடிக் கொள்ளாதீர்கள்.
இந்தி எதிர்ப்பை அற்பமான ஒன்றென்று எண்ணிவிடாதீர்கள். இஃதோர் அறப்போராட்டம்; தாயக மக்களின் தலைவிதியை நோக்கி, நடத்துகின்ற பெரும்போராட்டம்; திமு.கழகம் தலைசாயும் வரை இந்தப் புனிதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறது.
இந்தி மொழித்தகராறு எதனால் தீரும் என்ற உண்மையை இராசாசி நன்கு தெரிந்திருக்கிறார்.காங்கிரசுக் கட்டிடம் அவர் கட்டிய வீடு; எந்த இடத்தில் வேகாத கல் வைக்கப்பட்டிருக்கிறது? எங்கே இடித்தால் விழும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற ஒரே வழி.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற தி.மு.கழகத்திடம் சென்னை மாநில ஆட்சி வரல்வேண்டும்; அப்பொழுதுதான் வடவர் கண்திறக்கும் என்று எடுத்துரைத்திருக்கின்றார்.
இராசாசியின் அரசியல் ஊகத்தை அரசியல் வட்டாரத்தில் உள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.
இந்தியை ஏன் எதிர்க்கிறோம்?
இந்தி மொழியை ஒரு மொழி என்பதற்காக அதை எதிர்க்கவில்லை; இந்தி பேசாத மக்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆகிவிடுவார்கள். ஒதுக்கப்படுவார்கள் என்று நாம் சொல்லிவருவது ஊகமுள்ள உயர் திரு இலால்பகதூர் அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

 -      குறள்நெறி: ஆனி 18,1995 / 01.07.1964 பக்கம் 1.2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக