செவ்வாய், 15 ஏப்ரல், 2014

திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு

திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு

 thirumalai-statue01
மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார்.
“தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார்  கள ஆய்வுமேற்கொண்டார்.
அப்பொழுது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில், திருமலை(நாயக்க) மன்னரின் (கி.பி.1623- 1659) அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டன எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை தெரிவித்தார்.
“திருமலை நாயக்கர் சிறந்த போர்வீரனாகவும், குதிரை ஏற்றத்திலும், வேட்டையாடுவதிலும் சிறந்தவராகவும் இருந்துள்ளார். மதுரை நகரை ஒட்டிய அடர்ந்த காடு, மலைப் பகுதிகளான நாகமலை, மேலக்கால், விக்கிரமங்கலம், கொடிக்குளம் பகுதிகளில் திருமலை (நாயக்கர்) மன்னர்,  அடிக்கடி வேட்டையாடிய செய்திகள் ஏற்கெனவே சில செப்புப் பட்டயங்களில் காணப்பட்டுள்ளன. மேலும், இந்தக் காட்டில் உள்ள புலிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த தொல்லை இருந்ததாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.  இதனை உறுதிப்படுத்தும் வகையில்  திருமலை மன்னர் வேட்டையாடுவது போன்ற சிற்பங்கள் கிடைத்துள்ளன.
நேர்த்தியான, கனமான கற்பல கைகளில் நாயக்கர் காலக் கலை நுட்பத்துடன் சிற்பங்கள் இரண்டும் வடிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததால் முகத்தில் சற்று தேய்மானம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சிற்பத்தில் உயர் வகையைச் சேர்ந்த, பெருமிதமான தோற்றத் தையுடைய ஆண் குதிரையின் மீது அமர்ந்துள்ள மன்னன் திருமலை, விறைப்புடன் கூடிய அக்குதிரையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போலவும், கீழே நிற்கும் பணியாள் மன்னனுக்கு உதவுவது போலவும் காட்டப்பட்டுள்ளன. அருகில், பெண் ஒருவர் அச்சத்துடன் நிற்பதுபோலவும், நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பம் மன்னன் குதிரை ஏற்றத்தில் சிறந்தவர் என்பதைக் காட்டுவதோடு, குதிரையில் வேட்டைக்குச் செல்கின்ற காட்சியையும் நினைவூட்டுவதாக உள்ளது.
அடுத்த சிற்பத்தில் மன்னன் திருமலை நடந்து செல்வதுபோலவும், வில்லின் நாணினை இழுத்து அம்பினை எய்துவது போலவும் காட்டப்பட்டுள்ளன. மன்னனின் வலப்பக்கத் தோளின் பின்புறம் தூணி  எனப்படும் அம்புகள் வைக்கும் கூடு காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஒரு பெண் அச்சமுடன் மன்னனின் பின்னால் செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இரண்டு சிற்பங்களிலும் மன்னனின் தோற்றம், ஆடை அணிகலன்கள்  ஆகியனஎளிய மனிதனின் தோற்றமல்லாது, அரசனுக்குரிய தோற்றத்தைக் காட்டுகின்றன. நாயக்கர் காலச் சிற்பக்கலை பாணிக்கு இவ்விரு சிற்பங்களும் சிறந்த சான்றுகளாகும்.
திருமலை நாயக்கரைக் குதிரை வீரராகவும் வேட்டையாடுபவராக வும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை” எனத் தெரிவித்துள்ளார் துணைவேந்தர் திருமலை.
ma.thirumalai v.c.01


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக