வியாழன், 22 மே, 2014

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இராசபக்சேவை அழைக்காதீர் - வைகோ

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இராசபக்சேவை  அழைக்காதீர் - வைகோ
நரேந்திரர் தலைமையாளராகப் பதவி ஏற்கும்  நிகழ்விற்குத் தெற்காசிய ஆட்சித் தலை வர்களை அழைத்துள்ளதாகவும் அந்தவகையில் இனப்படுகொலையாளி இராசகப்சேவை அழைத்திருப்பதாகவும் அவன் வர இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்குத் தமிழகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.  அதற்கேற்ப,நரேந்திரர்(மோடி) பதவியேற்பு விழாவில்  இராசபக்சே பங்கேற்க கூடாது என ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை:
 "தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத  இரண்டகம் - துரோகம் - செய்த காங்., கட்சி தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில், நரேந்திர(மோடி) தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, இலங்கை அதிபர்  இராசபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,இராசபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.
1998--99 ஆம் ஆண்டுகளில் வாசுபாய் அரசு பதவி ஏற்றபோதும், 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிஏற்றபோதும் இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை.

எனவே, இராசபக்சேவை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டா என நரேந்திர(மோடி),இராசுநாத்து(சிங்கு) முதலான தேசிய  மக்கள்நாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

  இனப்படுகொலைாயாளி வருகை தந்து, தமிழகத் தலைவர்கள் விழாஅரங்கில் அவரைப் புறக்கணிப்பின் அழைத்த இந்திய அரசிற்குச் சங்கடமாகும். அல்லது முகமன் கருதி, தமிழகத் தலைவர்கள் வணக்கம் தெரிவித்தாலோ பேசினாலோ இனப்படுகொலைக் கூட்டாளிக் கட்சித் தலைவர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்றாகும். இதனால், தொடக்கத்திலலேயே நரேந்திர(மோடி) அரசு தமிழ் மக்களின் புறக்கணிப்பிற்கு உள்ளாகும். எனவே, கொலையாளியை  எதற்கும் அழைக்காமல் புறக்கணிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக