வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சிறப்பு முகாம்வாசிக்குத் திருமணம் : தாலி கட்டிய உடன் பிரிந்த துயரம்



  ஈழத்தமிழர் நலனில் கருத்து செலுத்தும் முதல்வர், இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், தமிழ்ஈழப் பொதுவாக்கெடுப்பில் உறுதியாக இருக்கும் முதல்வர், தமிழ்நாட்டிற்கு  அடைக்கலமாக வந்த  ஈழத் தமிழர்களைக் கொலைக்குற்றவாளிகளைவிடக் கடுமையாக நடத்துவது ஏன்? சிறையில் உள்ள தண்டனைவாசிகளுக்குக்கூட  அவர்களின் திருமணத்தின் பொழுது பரிவு காட்டப்படுகிறது. ஈழத்தில்  தமிழராகப் பிறந்து  இனப்படு கொலையில் தப்பிப்பிழைத்து நம்மை நாடி வந்த ஒரே காரணத்திற்காக அவர்களை இழிவாகவும் மனித நேயமின்றியும் நடத்த வேண்டுமா? எனவே,  கிருட்டிணலிங்கம் - வசந்தமலர் மணவாழ்க்கை சிறப்பாக அமைய முதல்வர் நேரடியாக  நடிவடிக்கை எடுத்து உறுதுணை புரிய வேண்டும். அத்துடன் முகாமில் உள்ள புலம்பெயர்ந்து அடைக்கலம்நாடி வந்தவர்களை அகதிகள் என்றோ கைதிகள் என்றோ அழைக்காமல், முழு உரிமையுடன் இங்கே வாழ்வதற்கான எல்லா வாய்ப்பு நலன்களையும் அளித்தல் வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிறப்பு முகாம்வாசிக்குத் திருமணம் : 

தாலி கட்டிய உடன் பிரிந்த துயரம்


திருவண்ணாமலை: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர், இலங்கைக் காதலியைத் தாலி கட்டித் திருமணம் செய்தவுடன் பிரிந்து சென்ற நிகழ்ச்சி நெகிழ வைத்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தனிச்சிறப்பு முகாமில், இலங்கைத் தமிழர் கிருட்டிணலிங்கம்(,35,) அடைக்கப்பட்டு உள்ளார். இவர், இலங்கையில் உள்ள அவரது மாமன் மகள் வசந்தமலர்,(32,) என்பவரைக் காதலித்து வந்தார். அவரை, திருமணம் செய்ய இசைவு கோரி, தமிழக அரசுக்கு மனு செய்தார். அரசு அனுமதியைத் தொடர்ந்து, வசந்தமலர் மற்றும் உறவினர்கள், இலங்கையில் இருந்து சுற்றுலா புகவுச்சீ்ட்டில், சென்னை வந்தனர்.
செய்யாறு முகாமில் இருந்து, நேற்று முன் நாள், கிருட்டிணலிங்கத்தை, அருகே உள்ள முருகன் கோவிலுக்குக்  காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு, வசந்தமலர் மணக்கோலத்தில் காத்திருந்தார். அங்கு, உறவினர்கள் முன்னிலையில், காவல் துறைப் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது . தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகத்தில், திருமணத்தைப்  பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்தில், கிருட்டிணலிங்கம் மீண்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பின், மணமகள் மற்றும் உறவினர்கள் புறப்பட்டு ச் சென்றனர். காதலில் வென்ற மகிழ்ச்சியில், தாலி கட்டிய உடன், கண்ணீர் மல்க, மண இணையர்  பிரிந்து சென்றது உருக்கமாக இருந்தது.
- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக