வெள்ளி, 24 அக்டோபர், 2014

இலட்சிய நடிகர் இராசேந்திரன் இயற்கை எய்தினார்.




இலட்சிய நடிகர் இராசேந்திரன்
 இயற்கை எய்தினார்.


 எசு.எசு.ஆர். என்ற அழைக்கப்பெற்ற சேடப்பட்டி சூர்யநாராயண(த்தேவர்) இராசேந்திரனான இலட்சிய நடிகர் தம் முடைய 86 ஆம் அகவையில் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
 கலையுலகில் இருந்து அரசியலில் கால் பதித்து வெற்றி கண்டவர். 1962 இல் தி.மு.க.சார்பில் தேனிச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் முதல்முதலில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இலட்சிய நடிகர்தான். ஆனால், இன்றைக்கு அதுதான், ஒவ்வொரு நடிகரையும் தமிழக முதல்வராகக் கனவு காணும்அளவிற்கு உயர்த்தி விட்டது.  1970 முதல் 1976 வரை தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க.வில் சேர்ந்த பின், 1981 இல் ஆண்டிப்பட்டிச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 எசு.எசு.ஆர் தி.பி 1959 / கி.பி. 1928 சனவரியில் பிறந்தார். குறைந்த அகவையிலேயே 5-ஆவது வகுப்பை முடித்த இவருக்கு 6-ஆவது வகுப்பில் சேர்வதற்கு மேலும்  ஓராண்டு காத்திருக்க வேண்டி வந்தது.  வீ்ட்டில் வீணாக இருக்க வேண்டா எனக் கருதிய தந்தையின் நண்பர், இவரை,  புளியமாநகரில்  சிறுவர் நிறுவனத்தில் (பாய்சு கம்பெனியில்) சேர்த்தார். அங்கு `வீரஅபிமன்யு' நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

  மாயவரம் கிருட்டிணமூர்த்தி தியாகராச பாகவதர் என்னும் எம்.கே. தியாகராச பாகவதர் நடித்த சிந்தாமணி படம் 1937 இல் வெளிவந்து பெரும் வரவேற்பயைும் வெற்றியையும் பெற்றது.  எசு.எசு.ஆர். மனத்தில் இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்கதை இவர் படித்த பள்ளியில் நாடகமாகப் போடப்பட்டது. அப்பொழுது இவரே கதாநாயகனாக நடித்து முதல் பரிசு பெற்றார். நாடகத்தை நடத்திய ஆசிரியர் அழகும் நடிப்புத்திறமையும் உள்ளமையால், திரை உலகிற்குச் சென்றால் புகழ் பெறலாம் என்றார். அவரே, தன் செலவில் மதுரைக்கு அனுப்பி நாடக நிறுவனத்தில் சேரவும் வைத்தார்.

  மதுரைக்கு சென்ற எசு.எசு.ஆர். டி.கே.எசு. நாடக அவையில் சேர்ந்தார். அங்கு  முதலில் "சிவலீலா'' நாடகத்தில் காவலாளி வேடமே கிடைத்தது. அதன் பிறகு "மகாபாரதம்'' நாடகத்தில் சகாதேவ னாக நடிக்கத் தொடங்கினார். (இதில், திரௌபதியாகப் பெண் வேடத்தில்  நடித்தவர் ஏ.பி.நாகராசன்.)

 தன் மகனைத் தன்னைப்போல அரசாங்க அதிகாரியாக ஆக்கிவிடவேண்டும் என்பதே இவரின் தந்தை கொண்டிருந்த இலட்சியம்.  எனவே, நாடக நடிகனாக இவர் மாறியது பிடிக்காமல் இருந்தார். ஆனால், அவரே இவரது நடிப்பைப் பார்த்துப் பாராட்டினார்.  எனவே, எசு.எசு.ஆர். மேலும் ஊக்கத்துடன் நடிப்பில் கருத்து செலுத்தினார்.

 நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது  தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டார். 19-11-1943 இல் ஈரோட்டில் `சந்திரோதயம்' நாடகத்தை நடத்த அறிஞர் அண்ணா வந்திருந்தார்.  அறிஞர் அண்ணாவிற்கு எசு.எசு.ஆர்.தான் ஒப்பனை செய்தார். இதன் மூலம் அறிஞர் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியாருடனும் தொடர்பு ஏற்பட்டுத் தன்மதிப்பு, பகுத்தறிவு முதலான கொள்கைகளில் ஈடுபாடு காட்டினார்.
 திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கேற்ப அபிபமன்யு என்னும் படத்தில் அபிமன்யுவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால்,  டி.கே.எசு.நாடகக்குழுவின் ஒப்பந்தப்படி மேலும் 7 மாதம்  நடிக்க வேண்டி யிருந்ததால் வாய்ப்பு பறிபோனது. (இப்படத்தில் அபிமன்யுவாக எசு.எம்.குமரேசனும் அருச்சுனனாக எம்ஞ்சியாரும் நடித்தனர்.)

 அதன் பிறகு சேலம் மூர்த்தி பிக்சர்சின் "ஆண்டாள்'' படத்தில் எசு.எசு.ஆர். "இன்ப உலகிலே மன்மதன் பூங்கனை'' என்ற பாடலைப் பாடி பின்னணிப்  பாடகராக அறிமுகமானார்.
 பைத்தியக்காரன் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துத் திரையுலகில்  நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்தார். என்றாலும் நேசனல் பிக்சர்சு பெருமாள் (முதலியார்), ஏவி.எம்.முடன் கூட்டு சேர்ந்து உருவாக்கிய "பராசக்தி''  தான் இவரது முதல்படமாகப் புகழ் தந்தது. கலைஞர் கருணாநிதி திரைக்கதை  உரையாடலை எழுதிய இந்தப் படத்தில் சிவாசிகணேசனுடன், எசு.எசு.இராசேந்திரன் புதுமுகமாக   ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் அறிமுகமானார்.  நடிகர்திலகம் போலவே தெளிவாகவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும் சிறப்பாகப் பேசியதால் அனைவராலும் கவரப்பட்டார். 
 
நாடகம் மூலம் திரையுலகிற்கு வந்தவர்களுக்கு நாடகம்மீது தணியா வேட்கை இருக்கும். இலட்சிய நடிகருக்கும் அந்த வேட்கை இருந்தது. எனவே, “எசு.எசு.ஆர். நாடகமன்றம்  தொடங்கினார்.  அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு'', "சந்திரமோகன்'',  கலைஞர் மு.கருணாநிதி எழுதிய "அம்மையப்பன்'' ஆகிய நாடகங்களையும் நடத்தினார். இவர் நாடகங்களில் அறிமுகமாகித் திரை உலகில் புகழ் பெற்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், எம்.என்.இராசம், முத்துராமன், மனோரமா. சீலா ஆகியோராவர்.

  திரைப்படங்களில் இலட்சிய நாயகனாக நடித்ததுடன்  வாழ்க்கையிலும் இலட்சியத்தைக் கடைப்பிடித்தார். புராணப் படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் நல்ல வாய்ப்புகளை இழந்தாலும் இலட்சிய நடிகர் என்று பெயர் பெற்றுப்புகழடைந்தார்.

புலவர் அ.கு.வேலன் ஆக்கத்திலும் இயக்கத்திலும் இலட்சிய நடிகர்  நடித்து வெளிவந்த தை பிறந்தால்  வழி பிறக்கும் பெருமளவு வெற்றி பெற்றது. இதனால். அ.கு.வேலன் அருணாசலப் படநிலையத்தை  அமைத்தார். இதுபோல் கோபாலகிருட்டிணன் இயக்கத்தில் நடித்த சாராத பெரும் வெற்றியைத்தந்து அவர் சாரதா பட நிலையத்தை அமைத்தார். இலட்சிய நடிகர் நடித்து  1957 இல் வெளிவந்த முதலாளி படம் மூலம் முக்தா  சீனிவாசன் இயக்குநரானார்.
தங்கரத்தினம், அல்லி, மேனாள் முதல்வர் செயலலிதாநடித்த மணிமகுடம் முதலான படங்களுக்குக் கதை உரையாடல் அமைத்து இயக்கியுள்ளார்.  துன்பம்தீராதோ முதலான திரைப்படப்பாடல்களும் எழுதி உள்ளார்.

 
 ஆசை அலைகள், ஆலயமணி, அல்லி, அல்லி பெற்ற பிள்ளை, அம்மையப்பன், ஆனந்தி, அன்பு எங்கே, அவன்பித்தனா?, தெய்வப்பிறவி, தெய்வத்தின்  தெய்வம், இளமை, இரட்டை மனிதன், காக்கும் கரங்கள், கை கொடுத்த தெய்வம், கைதியின் காதலி, கல்யாணிக்குக் கல்யாணம், காட்டுரோசா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, குமுதம், மகனே கேள், மாமியார் மெச்சிய மருமகள், மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே, மணப்பந்தல், மணிமகுடம், மனோகரா, மறக்கமுடியுமா? முதலாளி, முத்து மண்டபம், நானும் ஒரு பெண், நாட்டுக்கு ஒரு நல்லவன், நீங்காத நினைவு, ஓடி விளையாடு பாப்பா, பச்சை விளக்கு, படித்த மனைவி, பணம், பணம் பந்தியிலே, பராசக்தி, பழனி, பெண்ணை வாழ விடுங்கள், பெற்ற மகனை விற்ற அன்னை,பெற்ற மனம், பிள்ளைக் கனியமுது, பூமாலை, பூம்புகார், பிரசிடெண்டு பஞ்சாச்சரம், புதுமைப் பெண், புதுவயல், இராசா தேசிங்கு, இராசாளி, இராசாஇராணி, இரத்தக் கண்ணீர், சங்கிலித் தேவன், சாரதா, சிவகங்கைச் சீமை,  சொர்க்கவாசல், சிரீ ஆண்டாள், தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, தங்கரத்தினம், தங்கத்தின் தங்கம், தேடிவந்த செல்வம், தேடிவந்த தெய்வம், தேடிவந்த திருமகள், தீக்குச்சி, திருடர்கள் சாக்கிரதை,  உல்லாசப் பயணம், உத்தமி பெற்ற இரத்தினம், வானம்பாடி, வழிகாட்டி, வழி பிறந்தது, வீரத்தளபதி வேலுத்தம்பி, முதலான  100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான  தேசிய விருது பெற்றது.
நடிகர், இயக்குநர்,  திரைப்பட உருவாக்குநர், பின்னணிப் பாடகர், திரைப்பாடலாசிரியர், எனப்பலவகைகளிலும் திரைப்படத்தில் ஆட்சி செய்து வந்தார்.

தமிழக அரசின் பாகவதர் விருது, கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது, குடியரசுத் தலைவர் விருதுகள் முதலான பல்வேறு விருதுகளை  இலட்சிய நடிகர் பெற்று இருக்கிறார்.
இவர் முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவராக பதவி வகித்தார்.
தமிழ் ஒலிப்பில் தனி முத்திரை பதித்துக்கணீர் குரலில் மக்களைக்கவரந்த இலட்சிய நடிகர்  சே.சூ.இரா. என்னும் எசு.எசு.ஆர்.மறைவிற்குத் திரை உலகம் கண்ணீர் வடித்து இன்றைய பிற்பகல் படப்பிடிப்பையும் நிறுத்தித் தன் அஞ்சலியைத் தெரிவித்துள்ளது.  தலைவர்களும் இரங்கலுரை தெரிவித்துள்ளனர். திரை நேயர்கள்  நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அகரமுதல இதழும் தன் 
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக