54ilanthamizhakam231114

அரங்கக்கூட்டம்:


மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் பேசப்படாத வரலாறும் 


 கார்த்திகை 6, 2045  – 23 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை | மாலை 4.30 மணி -

இக்சா அரங்கம் (4ஆவது தளம்) கன்னிமாரா நூலகம் எதிரே ,எழும்பூர் ,சென்னை


தோழர்களுக்கு ,

வணக்கம்!

  கடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் பின்னர் புதையுண்டிருக்கும் மக்களை முழுமையாக மீட்க வேகம் காட்டாமல் மீட்புப் பணிகளைக் கைவிட்டனர். ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச்செல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழக மக்கள் வரலாறு முழுவது தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

  இந்திய மரபுவழித் தமிழர்கள் என்றழைக்கப்படும் இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது 1964 ஆம் ஆண்டு சிறீமாவோ – சாசுதிரி ஒப்பந்ததில் கையெழுத்திட்டது இந்திய அரசு.  இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 50 ஆண்டு காலம் கடந்து விட்ட பிறகு இன்றும் மலையகத்தில் இருந்து தமிழகத்திற்குத் திரும்பிய மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முழுமையான மாற்று தொழில் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் தங்கள் வாழ்நிலையை மேம்படுத்த போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிய கவனத்தைப் பெறாமல் போனதற்கான காரணங்கள்கூட விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் சமூக நிலையில் ஒடுக்கப்பட்டவர்(தலித்து)களாகவும் வருக்க நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும் இருப்பதுதான் காரணமா? சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் வாழும் மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்வதும், மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் அவர்களுக்குத் துணை நிற்பதும் நமது கடமையாகும்.

இது குறித்துச் சிறப்புரையாற்றுவோர் :


  • தோழர். சி. மகேந்திரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
  • தோழர். தவமுதல்வன், திரைப்பட இயக்குநர்
  • தோழர். கந்தையா, அமைப்பாளர், மலையக மக்களுக்கான சனநாயக இயக்கம்
  • தோழர். செந்தில், ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம் இயக்கம்
இந்த அரங்கக்கூட்டதிற்கு அனைவரையும் கலந்து கொள்ள வரவேற்கின்றோம்.

மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்

 தோழமையுடன்,
 ச.இளங்கோவன், செய்தித் தொடர்பாளர்
 இளந்தமிழகம்