பண்ணுருட்டி நகராட்சி மேனாள் தலைவர் திரு. இரா.பஞ்சவர்ணம்  ஆவணப்படக் கலைஞர்களைச் சிறப்பித்தல்
பண்ணுருட்டி நகராட்சி மேனாள் தலைவர் திரு. இரா.பஞ்சவர்ணம்
ஆவணப்படக் கலைஞர்களைச் சிறப்பித்தல்

புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர்

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி

  தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் எழில்வசந்தன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். தமிழறிஞர்கள், இசையறிஞர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.
  இந்த ஆவணப் படம் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுத் திரைப்பட வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வயல்வெளித் திரைக்களம் தயாரித்துள்ள இந்த ஆவணபடத்தைப் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.இளங்கோவன் திரைக்கதை எழுதித் இயக்கியுள்ளார்.
  இந்தப் படத்தில் முனைவர் ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், முனைவர் அரிமளம் பத்மநாபன், சுந்தர. இலட்சுமி நாராயணன் முதலானவர்கள் சுந்தரேசனாரின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஆவணப்படத்தில் கிருத்திகா இரவிச்சந்திரன், வில்லியனூர் முனுசாமி, அறின் இடைக்கழிநாடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்து, தொகுப்புப்பணியை இராசுகுமார் இராசமாணிக்கம் செய்துள்ளார். தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் எழுதிய கையறுநிலைப் பாடலை கலைமாமணி கா. இராசமாணிக்கம் பாடியுள்ளார். வரும் திசம்பர் மாதம் மலேசியாவில் இந்த ஆவணப்படம் வெளியீடு காண உள்ளது.