வியாழன், 16 ஜூலை, 2015

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம். – மு.கதிரேசன்


pandithamani_kathiresan01

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம்.


 சமக்கிருத மொழியில் தமிழிற் போலத் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகள் இல்லை. “பவதி” என்னும் வினைமுற்று “இருக்கின்றான்” “இருக்கின்றாள்” “இருக்கின்றது” என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கேற்றவாறு பொருளுணர்த்தும். தமிழில் வினை முற்றுகளின் ஈறே திணை பால்களை உணர்த்தி நிற்கும. பால வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்களெல்லாம் ஆண்பாலாகவும், பெண்மகளைப் பற்றி வருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வறையறை இல்லை; மாறுபட்டு வரும், சொல் நோக்கியதாகலின், மனைவியைப் பற்றிய “பாரியை” என்னுஞ் சொல் பெண்பாலாகவும், “தாரம்” ஆண்பாலாகவும், “களத்திரம்” என்னுஞ் சொல் நஞ்சகப் பாலாகவும் வருதல் காண்க. வடமொழியில் ஒருமை இருமை பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமையல்லாதனவெல்லாம் பன்மையே. திணைப்பாகுபாடு, குறிப்பு வினைமுற்று முதலிய தமிழுக்கே உரியன.
– பண்டிதமணி மு.கதிரேசனார்: உரைநடைக்கோவை : பகுதி 2: பக்கம். 15-16


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக