திங்கள், 7 செப்டம்பர், 2015

அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்குத் தமிழக அரசு உதவ வேண்டும்: கருணாநிதி



அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்குத் தமிழக அரசு  உதவ வேண்டும்: கருணாநிதி அறிக்கை

சென்னை, செப். 7–

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள சிலைகளையே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி உள்நோக்கத்தோடு அகற்றுவதற்கான முயற்சிகள், தமிழகத்தில் மறைமுகமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் நகரிலே திருவள்ளுவர் சிலை ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. தமிழ் நாளிதழில் இன்று இதுபற்றி விரிவாகச் செய்தி வெளிவந்துள்ளது.

அந்தச் செய்தியில், யமுனை நதியின் தென்கரை சாலை இன்னும் பெயரிடப்படாமல் இருப்பதால், “திருவள்ளுவர் மார்க்கம்என அதற்குப் பெயர் சூட்டி,  திருவள்ளுவர் சிலையும் அங்கு வைக்க வேண்டும் எனும் கோரிக்கை இருந்து வருகிறது என்றும், அங்குள்ள  ஏறத்தாழ ஆறு  புதுக்கல் நீளமுள்ள சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு, அவற்றில் திருக்குறளை இந்தி மொழி பெயர்ப்புடன் எழுதி வைக்க வேண்டும் என்றும்; உத்தரப்பிரதேச மக்கள் நீண்ட காலமாகக்கோரி வருகின்றனர் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இதுபற்றி, சந்திரமோகன் பார்கவா என்பவர் கூறும் போது, “தமிழைக் கற்றுக்கொண்ட பாசா சங்கத்தின் மறைந்த நிறுவனரும், பொதுச் செயலாளருமான  முனைவர் கிருஷ்ணசந்து (கவுடுவுக்கு) திருக்குறள்  மீதும் திருவள்ளுவர் மீதும்  மிகுதியான ஈடுபாடு உருவானது.

இதனால் அவர் அலகாபாத்தில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை 1990இல் எழுப்பினார். திடீரென அவர் புற்றுநோயால் இறந்தபின், ஒவ்வொரு  செயற் குழுக்கூட்டத்திலும் வள்ளுவர் சிலை அமைப்பதற்கான முயற்சி தொடர வலியுறுத்தப்பட்டு வருகிறதுஎன்று தெரிவித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச அரசிடம் இது குறித்துக் கோரிக்கை வைத்த போது, “நகரில் அனைத்து மொழி மக்களும் வந்து செல்லும் இந்துத்தான் அகாடமிவளாகத்தில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்என்று கூறிய போதிலும், இந்த அமைப்பினர் தாங்கள் கேட்ட திரிவேணி சங்கமத்தில்தான் சிலை வைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை
இது போன்ற மற்றொரு  சிக்கல் வார இதழிலே வந்துள்ளது. தமிழ்ச் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டை வைதேகி  எர்பெர்ட்டு என்னும் அமெரிக்கர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

அவரை, நமது இனமானப் பேராசிரியரின் உறவினரும், தற்போது அமெரிக்காவில் சிறந்த இதய மருத்துவராகப் பணியாற்றி வருபவருமான  மருத்துவர் சானகிராமன் சந்தித்துத் தன் வாழ்நாளில் தமிழுக்காகச் சிறப்பு செய்ய நினைப்பதாகவும், என்ன செய்யலாம் என்றும் கேட்டபோது, “உலகப்புகழ் பெற்ற  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது, அப்படி ஓர் இருக்கை அமையுமானால் தமிழுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமைஎன்று  அவர் கூறியதால், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு,  ஆர்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடும், துறைத் தலைவரோடும் அமெரிக்கா வாழ் மருத்துவர்கள் சானகிராமனும், திருஞான சம்பந்தமும் அணுகிப் பலமுறை பேசிய பின்னர்,  ஆர்வர்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதற்கான முதலீடு ஆறு  பேராயிரம்(மில்லியன்)  தாலர்கள் ( ஏறத்தாழ 40 கோடி உரூபாய்); இதை இரண்டு ஆண்டு காலத்துக்குள் திரட்ட வேண்டும். மருத்துவர்கள் சானகி ராமனும், திருஞானசம்பந்தமும் இணைந்து  பேராயிரம்(மில்லியன்)  தாலர் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்கள். மீதித் தொகையைத் திரட்ட உலகத் தமிழ்ப் பற்றாளர்கள் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார்கள் என்று அதில் எழுதியுள்ளது.

 ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் 30  பேராயிரம்(மில்லியன்) மக்கள் பேசும் உக்ரேனியமொழிக்கே இரண்டு இருக்கைகளும், 1.5  பேராயிரம் மக்கள் தொகை மட்டுமே பேசக்கூடிய செல்டிக்மொழிக்குக் கூட அங்கே இருக்கைகள் இருக்கும்போது,  ஈப்ரு, சமக்கிருதம் போன்ற மற்ற மொழிகளுக்கும் அங்கே இருக்கைகள் இருக்கும்போது,  ஏறத்தாழ 80 பேராயிரம் மக்கள் பேசும் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு அங்கே இருக்கை உருவாக வேண்டாமா?

எனவே உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமையவும்,  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவும், ஆர்வலர்கள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகளைத் தமிழக அரசு ஊக்குவித்து உரிய முறையில் ஆதரவு அளித்திட வேண்டும். ஐந்தாண்டுக் கால ஆட்சி முடியவிருக்கின்ற நேரத்தில் முதலீட்டாளர் மாநாடு ஒன்றை நடத்துவதற்காக 100 கோடிஉரூபாய் பெருநிதியைச் செலவிட முன்வரும் இந்த அரசு, தமிழின் மேன்மையைப் பரப்பிடும் இத்தகைய சிறப்பான செயல்களிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"


செய்தி வந்த மாலை மலர் இதழிலும் கலைஞர்  முகநூல் பக்கத்திலும் பதிந்த கருத்தூட்டம்

இதில் குறிப்பிட்டுள்ள அறிஞர் வைதேகி தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழறிஞர்.  "தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி " என அகரமுதல மின்னிதழில்  வந்த கட்டுரையில் < http://www.akaramuthala.in/sangailakkiyam/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/
>விரிவாகக் காணலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக