supersinger,nov.27

விசய் தொலைக்காட்சியே!

மாவீரர்நாளில்  நடத்த உள்ள

தீபாவளிக்  கொண்டாட்டத்தை நிறுத்துக!தலைப்பு-வீரத்தமிழர் முன்னணி மடலேடு :thalaippu-veerathamizharmunnani-madaleadu

                                                                               தலமை அலுவலகம்
திருமுருகன் குடில்
திருச்சிராப்பள்ளி  10
பெறுநர் :
மேலாண்மை இயக்குநர்
விசய் தொலைக்காட்சி
15. செகநாதன் சாலை
நுங்கம்பாக்கம், சென்னை-34
தொடர்புக்கு : 044 2822 4722
பொருள் : சிங்கப்பூரில் மாவீரர் நாளன்று நடக்க இருக்கும் உச்சப்பாடகர்  அல்லது மேன்மைப்பாடகர் (சூப்பர் சிங்கர்) நிகழ்ச்சியை  நீக்கக்கோருதல்-தொடர்பாக
+++++
 விசய் தொலைகாட்சி நிருவாகத்தினருக்கு வணக்கும்.
  தாங்கள் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்சிகளில் ஒன்றான மேன்மைப்பாடகர் (சூப்பர் சிங்கர்) நிகழ்ச்சியை வருகின்ற கார்த்திகை 11 / நவம்பர் 27அன்று சிங்கப்பூரில் நடத்துவதாக அறியவருகிறோம். நவம்பர் 27 என்பது மாவீரர்கள் நினைவைக் கோரும் நாள் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.
விசய் தொலைக்காட்சியைப் பொருத்தவரை ஓர் இனத்தின் அவலத்தைக் காட்சிப் பொருளாக்கி, அரங்கிலேயே சிலரை அழசெய்து, அந்த  வணிகத்தில் இலக்கு அளவீட்டு புள்ளி(TRP)யை அதிகமாக்கிக்  கொள்வதில் திறமையானவர்கள். ஒருமுறை “நீயா நானா” நிகழ்ச்சியில் உச்சரிக்கப்பட்ட “பிரபாகரன்” என்ற பெயரை வெளிப்படையாகப் பொதுவெளியிலே கத்தரித்தீர்கள். உலகத்தமிழர்களே உச்சரித்து உவகைகொள்ளும் பெயர் “பிரபாகரன்” என்ற பெயர் என்பதை நீங்கள் அறியாதவர்கள் இல்லை.
நீங்கள் நடத்துகின்ற மேன்மைப்பாடகர் (சூப்பர் சிங்கர்) நிகழ்ச்சியில் எப்படியாவது ஒரு ஈழக் குழந்தையைப் பாடச்செய்து, அவர்களையும் ஈழப்பாடலையே பாடச்செய்து அரங்கையே அழச்செய்து, அவர்கள் உன்னதமாகப் பாடினாலும் சரி, பொதுவெளித் தேர்வுமுறையில் அவர்கள் அதிக மதிப்பெண் வாங்கினாலும்சரி, அவர்களுக்கு முதல் இடம் கிடைக்காமல் பார்த்துக்கொள்வீர்கள். “விடைகொடு எங்கள் நாடே” என்ற பாடலைப் பாடிய “சாயித்” மற்றும் கடந்த முறை முதல் இடத்தை தவறவிட்ட (இணைய வாக்குகள் அதிகம் பெற்றும்) ஈழ குழந்தைக்கும் இப்படித்தான் நேர்ந்தது.
இவற்றைத்தாண்டி இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசு எப்போது அழைத்தாலும் விசய் தொலைக்காட்சி இலங்கை சென்று இசைநிகழ்ச்சி நடத்துவது வாடிக்கையாக இருப்பதை உலகமே அறியும். இவற்றின் தொடர்ச்சியாக வருகின்ற மாவீரர்நாள் அன்று சிங்கப்பூரில் நீங்கள் நடத்த இருக்கும் மேன்மைப்பாடகர் (சூப்பர் சிங்கர்) சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் கட்டணமாக 40-80 சிங்கப்பூர் வெள்ளி(தாலர்கள்). எதற்காக மாவீரர் நாளன்று இந்த நிகழ்ச்சி?
  மாவீரர்கள் யார் என்பதை விசய் தொலைக்காட்சி அறியுமா? அவர்களுக்காகக் கடைப்பிடிக்கப்படும் அந்த நாளின்  மாண்பினை நீங்கள் அறிவீர்களா ?
  மாவீரர்கள்… “இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில், அழுதவர்களுக்காக இறந்தவர்கள்”; கையில் உள்ள ஆயுதம் பயன்தராத நேரத்தில் தம் உயிரையே ஆயுதமாக ஏந்தி இலக்கினைத் தகர்த்தவர்கள். இப்படிப்பட்ட விடுதலை நெருப்பினை நெஞ்சார நினைத்து அவர்களின் சாவின்மீது மீது சத்தியம் செய்து ஒவ்வொரு தமிழனும் இனவிடுதலைத் தீயினை தனது மனத்தில் பற்றவைத்து அடுத்த காலத்திற்குமத் தன்னை மனத்தளவில்  ஆயத்தப்படுத்திக் கொள்ளும் நாளே மாவீரர் நாள்.
  அப்படிப்பட்ட திருநாளில் தமிழர்களின் விடுதலை உணர்வை மடைமாற்றி கேளிக்கை நிகழ்ச்சியில் கட்டிப்போட்டு, அவன் மனத்தில் உருவாகும் இனவுணர்வை நீர்த்துப் போகச் செய்யும் செயலாகவே நீங்கள் சிங்கப்பூரில் நடத்த இருக்கும் மேன்மைப்பாடகர் (சூப்பர் சிங்கர்) நிகழ்ச்சியை இந்த உலகத்தார் பார்க்கின்றனர். எனவே உலகெங்கிலும் பரவிவாழ்கின்ற தமிழ்த்தேசிய இனத்தின் இனஉணர்விற்கு மதிப்பளித்து, தாங்கள் கார்த்திகை 11 / நவம்பர் 27 சிங்கப்பூரில் நடத்த இருக்கும் நிகழ்ச்சியை  விலக்கிக்கொள்ள வேண்டுகிறோம்.
சென்றவருடம் இதே போன்றதொரு சூழலில் அமெரிக்காவில் நடக்க இருந்த தனது நிகழ்ச்சியை தமிழ்த்தேசிய இனத்தின் உணர்விற்கு மதிப்பளித்து இசைஞானி இளையராசா அவர்கள்  விலக்கிக்கொண்டார் என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவூட்ட விழைகிறோம்.
ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் இன உணர்விற்கு மதிப்பளித்து கார்த்திகை 11 / நவம்பர் 27 அன்றுசிங்கப்பூரில் நடக்க இருக்கும் மேன்மைப்பாடகர் (சூப்பர் சிங்கர்) நிகழ்ச்சியை  விலக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம். எமது உணர்விற்கு மதிப்பளிக்காது நிகழ்ச்சியை நீங்கள்திட்டமிட்ட படி நடத்தினால் சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
செந்தில்நாதன் சேகுவேரா
வீரத்தமிழர் முன்னணி  
மாநிலச்செயளார்
மின்னஞ்சல் முகவரி : ntkvtm@gmail.com
பேசி எண் : 9442248351
திருச்சி-10
தமிழர் நாடு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


  விசய்தொலைக்காட்சி நடத்துவதாக அறிவித்திருந்தது உச்சப்பாடகர் நிகழ்ச்சி அல்ல. தீபாவளிக் கொண்டாட்டம்.
இதற்குப் பலரும் உலகெங்கிலிருந்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் விசய் தொலைக்காட்சியின் மேலாளரைச் சந்தித்து இக்கொண்டாட்டத்தை நிறுத்துமாறு வேண்டியுள்ளனர். பொறுப்பாளர்கள், இந்நிகழ்ச்சியை மாவீரர் நாளில் நடத்துவதை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். திசம்பர் 11 அன்றைக்கு மாற்றி வைத்துள்ளனர் என அறிகிறோம். விசய் தொலைக்காட்சிக்கு வேண்டுதல் விடுத்த அனைத்து அமைப்பினருக்கும் கட்சியினருக்கும் தனியர்களுக்கும் நன்றி. சிங்கப்பூர் மக்கள், விசய் தொலைக்காட்சியின் தீபாவளிக் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கப் போவதைக் கேள்வியுற்று வேண்டுகோளை ஏற்றதற்கு விசய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் நன்றி.
இதுபோல் பிற தமிழ்க்கொலைகளையும் விசய் தொலைக்காட்சியும் பிற ஊடகங்களும் நிறுத்தட்டும்!
அன்புடன்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++