சிங்கப்பூரில் அண்ணா - annaawith_lee
உலகத் தமிழருக்கு உறவாக விளங்கியவர், பேரறிஞர் அண்ணா அவர்கள். அவர்களின் நிணைவாக ‘அண்ணா வாசகர் அறிவகம்’  தை 24, 2047 / 7.2.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30மணியளவில், தமிழர்பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழக பணிமனையில் #02-19, சிராங்கூன் தேக்கா குட்டி இந்தியா வணிக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

  அறிஞர் அண்ணாவின், இலக்கியப் பங்களிப்பில் ஆர்வம் கொண்டுள்ள நண்பர்களால் உருவானதுதான்  ‘அண்ணா வாசகர் அறிவகம்’.
 கவிதை, கதை, கட்டுரை வழியாக, கன்னித் தமிழின் சுவையைப் பரப்புதல், பேசுதல், படைத்தல் என்பதே இதன் நோக்கமாகும்.
அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை ஆழ்ந்து படித்தவர் , அவர்தம் கருத்தினை ” அண்ணா வாசகர் அறிவகத்தில் ” பலரும் பயனடையும் வகையில் பகிர்ந்திட வேண்டுகிறோம்.
  நடைபெற்ற நிகழ்வில், அறிஞர் அண்ணா அவர்கள் சூலை மாதம் 1965ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு முதல் வருகை தந்தபோது, நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி உரையாடினோம். பயனுடைய சந்திப்பாக நடைபெற்றது.
  நண்பர் துரைமருதீசுவரன் தலைமை தாங்கினார். சோ.வீ.தமிழ்மறையான் உடனிருந்து வழிநடத்தினார். வருகை தந்த அண்ணாவின் இலக்கியத் தம்பிமார்கள், கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் நடந்துகொண்டது பெருமையாக இருந்தது.
 “அறிஞர் அண்ணா 50ஆம் ஆண்டு சிங்கை வருகை 1965 – 2015”  விழாவை, நினைவுகூரும் வகையில், வருகிற சூலை மாதம் கொண்டாடுவதென ஒருமனதாக முடிவெடுத்தோம்.
  “மேடையில் முழங்கு, அறிஞர் அண்ணா போல்!” என்னும் பேச்சுப் போட்டிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்திட வருப்பம் கொண்டுள்ளோம்.
நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில் , கவிதை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. ஐந்து இளங் கவிஞர்கள் , அருஞ்சுவை கவிதையை பசியாறினோம்
மா பலா வாழை முக்கனி விருந்துடன், அண்ணா நினைவஞ்சலி இரவு 9:30 மணிக்கு இனிதே நிறைவேறியது
அண்ணா வாசகர் அறிவகம்