நளினி02 - nalini02

ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது!
– நளினி வேதனை

     “சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம் என்று அரைநாள் காப்பு விடுப்பில்(parole) தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்தியச் சிறைகளிலேயே, தண்டனை அடைந்துள்ள பெண் கைதிகளில், மிகுதியான காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி.
  முன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) இராசீவு காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, 25 ஆண்டுகளுக்குப் பின் 12 மணி நேரம் மட்டும் சிறையில் இருந்து வெளிவிடப்பட்டார்.
  அதுவும், அவருடைய தந்தை சங்கர நாராயணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்.
  சங்கர நாராயணன் ஓய்வு பெற்ற காவல்துறைச் சார்-ஆய்வாளர் (Sub-inspector). நெல்லை மாவட்டம் வீ.கே.புரத்தில் வாழ்ந்து வந்தார். 91 அகவை நிரம்பிய அவர், இந்த மாதம் (பிப்பிரவரி) 23-ஆம் நாள் மாலை உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னைக் கோட்டூர்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள நளினி அண்ணன் இரவியின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
  இரவி, தி.மு.க புள்ளி என்பதால், தி.மு.க-வினர் மிகுதியானோர் வீட்டைச் சுற்றிக் குழுமியிருந்தனர். தமிழ் உணர்வாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பற்பலர் சங்கர நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் சவாகிருல்லா, தடா இரகீம் முதலானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். வீட்டைச் சுற்றிக் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
  துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, நளினியின் வழக்குரைஞர் புகழேந்தியின் உதவியுடன், நளினியைத் தனியாகச் சந்தித்துப் பேசினோம்.
 இந்தத் தற்காலிக விடுதலை (பரோல்) கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததா?
 தற்காலிக விடுதலை கிடைக்கும் என்று கடைசி நிமிடம் வரை நம்பவில்லை. என் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, கடந்த ஒரு மாதமாகத் தற்காலிக விடுதலை கேட்டுப் போராடினேன். கிடைக்கவில்லை. அவர் இறந்த பிறகுதான் கிடைத்துள்ளது.
  நீதிமன்றங்களில் உங்கள் விடுதலை குறித்த வழக்கு இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
  விடுதலையைத் தவிர, வேறு எதை நான் கேட்பேன்? நான், என் கணவர், எங்களோடு சிறையில் இருக்கும் உடன்பிறந்தோர் ஐவர் என நாங்கள் யாரும் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். அதுதான் உண்மை. எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை. இராசீவு கொலைக்கும் இன்று சிறையில் இருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
நளினி மகள் யாத்திரா
[நளினி மகள் யாத்திரா]
  எனவே, 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு 25 அகவை ஆகப் போகிறது. திருமணப் பருவத்தில் இருக்கிறாள். எந்தத் தவறும் செய்யாத என் மகள், இத்தனை ஆண்டுகளாக ஏன் பெற்றோரைப் பிரிந்து இருக்க வேண்டும்?
  இத்தனை ஆண்டுகளில் சிறைக்குள் நிறையத் துன்பங்களைப் பட்டு விட்டோம். ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.
  தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம். முதலமைச்சர் அவர்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
  சிறைக்குள் இருந்து வெளியில் வந்ததும், உலகம் எவ்வளவு மாறி உள்ளது என்பதை உங்களால் உணர முடிந்ததா?
  என் தந்தையின் நினைவுகளோடு இருந்ததால், நான் அதைப் பெரிதாகக் கருத்தூன்றிப் பார்க்கவில்லை. ஆனால், நிறைய மாறிவிட்டது. எல்லோரும் ஒழுங்காக வாகனம் ஓட்டக் கற்றுக் கொண்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் தலைக்கவசம் அணிந்து ஈருருளி (Bike) ஓட்டுவதைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாக இருந்தது.
  பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபொழுது என்ன பேசினார்?
அதை இப்பொழுது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து பிரியங்கா கிளம்பும்பொழுது, எனக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan
[குறிப்பு : மகளின் விடுதலையை எதிர்நோக்கிய ஏமாற்ற உளைச்சலே அவரது இறப்பை விரைவுபடுத்தியிருக்கும். நலக்குறைவால் நலிந்தபொழுது காப்புவிடுப்பில்  மகளை அனுப்பியிருந்தால்  தந்தை மன அமைதி பெற்று வாணாளை நீட்டித்திருக்கும். செய்யத் தவறியது யார்? சட்டம் யாவருக்கும் சமமாக இல்லாதது ஏன்?  ஆளுக்கேற்ப மாறுவனவே சட்டங்களும் விதிகளுமா?]