சனி, 12 மார்ச், 2016

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்!-சி.இலக்குவனார்





தலைப்பு-மெய்ப்பாட்டாராய்ச்சி, சி.இலக்குவனார் : thalaippu_meyppaattaaraaychi_Dr.S.Ilkakkuvanar

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.
 “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.” இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம். அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப நம் முகத்தில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. கவிச்சுவையும் இலக்கியச் சுவையும் நம் உள்ளத்தில் உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இயல், இசை, நாடகம் எனும் மூன்றில் நாடகத்தில் நடிப்போரும் உணர்ச்சியை வெளிப்படுத்துவார். காண்போரும் உணர்ச்சிக்கு ஆளாவார். இசைத் தமிழ் பாடுவோரும் உணர்ச்சி வேறுபாட்டுடன் பாடுவார். கேட்போரும் உணர்ச்சி வயப்படுவர். இயல் தமிழ் ஒன்றே தாமாகப் படித்தும் உணர்ச்சி பெறத் துணையாவது. ஆதலின் மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.
-பேரா.முனைவர் சி.இலக்குவனார் :
 தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 236

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக