வெள்ளி, 15 ஏப்ரல், 2016

நாடாளும் முத்தம்மா – நா.வானமாமலை

முத்தம்மா : muthammaa

நாடாளும் முத்தம்மா

  முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டில் உழவர் பெருமக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றூர்களில் இவளுக்குப் பெரிய கோவிலும் தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு, முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணிநாகப் புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து பெண்கள் மூவர் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டு போய்க் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் நோய்களை வரமாகக் கேட்டார்கள். பிரம்மராக்கு சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற நோய்களையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார். இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் ஆற்றல் பெற்ற மூன்று உடன்பிறந்தாள்களும் தமிழ் நாட்டிலே வந்து குடியேறி, கொடியவர்களைத் தண்டிக்கப் பரமசிவனுடைய வரங்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம்.
  இப்பொழுது பிரம்மராக்கு சக்திக்குச் சிற்சில ஊர்களிலேயே கோயில்கள் உள்ளன. முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டிலுள்ள ஒவ்வோர் ஊரிலும் கோயில் கொண்டிருக்கிறாள். இவள் தீயவர்களைக் கொடுநோயால் தண்டிப்பாள். நல்லவர்களை வாழ்த்தி வரம் கொடுப்பாள்.
  பிற்காலத்தில் கன்னடர், ஆந்திரர் படையெடுப்புகளின்பொழுது தமிழ்நாடு புகுந்த மாரியம்மன் சிற்சில ஊர்களில் இவளோடு ஒருங்கிணைந்து விட்டாள். இவள் பார்வையால் உடலில் முத்துக்கள் ஆயிரக்கணக்கில் தோன்றுவதால் இவளுக்கு ஆயிரத்தாள் என்றும், மாரியோடு கலந்து விட்டதால் முத்து மாரியென்றும், நாடு முழுவதும் பரவி இருப்பதால் தேச முத்துமாரி என்றும் பல பெயர்கள் வழங்குகின்றன.
  ஒன்பான்இரவு(நவராத்திரி) விழாவின்பொழுது இவள் அரிமா (சிங்கம்) ஊர்தியில் ஏறி வருவாள். பெண்கள் இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள்.
நா.வானமாமலை
நா.வானமாமலை




  •  – பேராசிரியர் நா.வானமாமலை :
  • தமிழர் நாட்டுப்பாடல்கள் பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக