புதன், 31 ஆகஸ்ட், 2016

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்!





ஆங்காங்கு மு.இராமநாதன் :hongkong_mu.ramanathan

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்!

ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி!
ஆங்காங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்.
  தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்காங்கு நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்க் குமுகத்தின் (சமூகத்தின்) புள்ளியுமான மு.இராமநாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
  நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆங்காங்கு நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராய் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவரும், சுரங்கத் தொடரிப் (இரயில்) போக்குவரத்தில் தேர்ச்சி மிக்கவரும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்காங்குத் தமிழ் வகுப்புகளின் அறிவுரைஞரும், எழுத்தாளருமான மு.இராமநாதன் ஆங்காங்கு நாடு தொடர்பாக மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசியபொழுது,
  “தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும். ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியே அடிப்படைக் கல்வி. அங்கு சட்டத்தை அனைவரும் மதித்து நடப்பர். அடிப்படைக் கல்வியில் சட்டத்தின் மாட்சிமை கற்றுத் தரப்படும். அடிப்படைக் கல்வியைப் பிற மொழிகளில் படிப்பது போலியான மரியாதையே தரும். சீரான சிந்தனையையும் முறையான செயல்பாட்டையும் தாய்மொழி வழிக் கல்வியே தர முடியும். அரசுப் பள்ளிகளில் படிப்பதே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. உலக அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 25 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மூன்று ஆங்காங்குப் பல்கலைக்கழகங்கள் இடம் பெறுகின்றன. அதற்குக் காரணம் தாய்மொழிக் கல்வியில் இவர்கள் படிப்பதே ஆகும். தாய்மொழிக் கல்வியில் படிப்பதற்கு நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார்.
மேலும்,
கலந்துரையாடலின் பொழுது மாணாக்கர்கள் இரஞ்சித்து, சீவா, பரத்துக்குமார், தனலட்சுமி, செனிபர், இராசி, ஐயப்பன், கோட்டை எழுப்பிய வினாக்களுக்கு  திரு மு.இராமநாதன் விடையிறுத்துத்  தெளிவு படுத்தினார்

மாணவர்கள் தொடுத்த வினாக்களும்,

ஆங்காங்கு  தமிழார்வலர் மு.இராமநாதன்

விடுத்த மறுமொழிகளும்

இரஞ்சித்து: ஆங்காங்கு நாட்டில் அரசுப் பள்ளிகள் உள்ளனவா?
விடை: பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளே.
பரமேசுவரி: ஆங்காங்கு நாட்டின் உணவு முறை என்ன?
விடை: அங்கு பெரும்பாலோர் சைவ உணவுகளைச் சாப்பிடுவது இல்லை. மசால் நிறைய இருக்காது. அவர்களும் நம்மைப் போல அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள்தாம். ஆனால், சோறு குறைவாகவும் காய்கறி, இறைச்சி மிகுதியாகவும் சேர்த்துக் கொள்வார்கள். மசால் மிகுதியாகப் பயன்படுத்துவது உணவின் இயற்கையான சுவையைக் குறைத்துவிடும் என்பார்கள். எனவே, மசால் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பார்கள். இயல்பான சுவையை மிகவும் விரும்புவார்கள். ஊட்டமான உணவு வகைகளே மிகுதியாகச் சாப்பிடுவார்கள்.
தனலட்சுமி: ஆங்காங்கு நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் நேர வேறுபாடு எப்படி இருக்கும்?
விடை: இரண்டரை மணி நேரம் வேறுபடும். இந்தியாவில் ஆறு மணி என்றால் ஆங்காங்கில் எட்டரை மணியாக இருக்கும்.
செகதீசுவரன்: நாணயம் எப்படி இருக்கும்?
விடை: ஆங்காங்கு நாட்டிற்கு எனத் தனி நாணயம் உண்டு. ஆங்காங்கு தாலர் (Dollar) என்று பெயர்.
பரமேசுவரி: வேளாண்மை எப்படி இருக்கும்?
விடை: ஆங்காங்கு சிறிய நாடு. நமது சென்னை நகரத்தின் பரப்பளவும் மக்கள்தொகையும்தாம் இருக்கும். வேளாண்மை இராது. தொழில் ஆலைகள் இருக்கும். பெரும்பாலான பகுதி மலையும், மலையைச் சார்ந்த இடமுமாக இருக்கும்.
சீவா: சீனம் தொழிலில் சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம்?
விடை: சீனத்தின் வெற்றிக்குக் காரணம் தொழில் ஆலை சார்ந்த அறிவுதான். தொழிலாலை சார்ந்த அறிவு அடிப்படைக் கல்வியில் வழங்கப்படும். அடிப்படைக் கல்வி தாய்மொழி வழியில் இருப்பதால் அவர்கள் அனைத்து வகையான தகவல்களையும் நல்ல முறையில் கற்றுக் கொள்கிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது.
இரஞ்சித்து: ஆங்காங்கில் சாலை நெறிகள் எப்படி இருக்கும்?
விடை: கட்டாயம் நெறிகளை நன்றாகக் கடைப்பிடிப்பார்கள். பள்ளிகளில் நெறிகள் கண்டிப்பாகச் சொல்லித் தரப்படும். அடிப்படைக் கல்வியில் நெறிகள் கடைப்பிடிக்கக் கற்றுத் தரப்படுவதால் அவற்றை யாரும் மீறுவதில்லை. வரிசையில் வர வேண்டும் என்றால் வரிசையில் மட்டுமே வருவார்கள். அதனை ஒருபொழுதும் மீற மாட்டார்கள். சாலையில் ஊர்திகள் தேவையில்லாத ஒலி எழுப்புவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனைக் கடைப்பிடிப்பார்கள்.
ஐயப்பன்: ஊர்திகள் எப்படி இருக்கும்?
விடை: பொது ஊர்திகளில் செல்வதை மிகவும் ஊக்குவிப்பார்கள். தனி ஆட்களின் போக்குவரத்தைப் பெரிதும் ஊக்குவிப்பது கிடையாது. நேரத்திற்கு மதிப்புக் கொடுப்பார்கள். 23 நிமையத்தில் (நிமிடத்தில்) வருகிறேன் என்று சொல்லிச் சரியாக 23 நிமையத்தில் வந்து நிற்பார்கள். எனக்குத் தொடக்கக் காலங்களில் இது பெரிய வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், உண்மையில் நடக்கிறது.
சபரி: என்ன மொழி பயன்படுத்துவார்கள்?
விடை: கேண்டனிசு என்கிற சீன மொழியின் ஒரு வகை பயன்பாட்டில் உள்ளது.
இராசேசுவரி: ஆங்காங்கு நாட்டின் உடை எப்படி?
விடை: ஆங்காங்குச் சீனர்கள் மேலை நாட்டு உடைகளையே அணிவார்கள். பண்டிகைகளிலும் விழாக்களிலும் மரபு உடையை விரும்பி அணிவார்கள்.
சஞ்சீவு: எது பெரிய விழாவாக இருக்கும்?
விடை: பிப்பிரவரி மாதத்தில் நடைபெறும் சீனப் புத்தாண்டு விழா பெரிய விழாவாகக் கொண்டாடப்படும். அக்தோபரில் வசந்த விழா கொண்டாடப்படும். ஏப்பிரல் மாதத்தில் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா பெரிய விழாவாகக் கொண்டாடப்படும்.
இராசி: ஆங்காங்கு நாட்டின் தேசியப் பூ எது?
விடை: போக்கினியா. ஊதா நிறத்தில் இருக்கும்.
பார்கவி இலலிதா: இயற்கை அமைப்பு எப்படி இருக்கும்?
விடை: மலையும், மலையைச் சார்ந்த பகுதியும் இருக்கும். கட்டடங்கள் உயரமாக இருக்கும். தட்பவெப்ப நிலை மாறிக் கொண்டு இருக்கும். குளிர்காலம், கோடை காலம், வசந்த காலம் எல்லாம் இருக்கும்.
உமா மகேசுவரி: விலங்குகள் இருக்குமா?
விடை: விலங்குகள் நிறைய இருக்காது. செல்ல உயிரினங்கள் மட்டுமே இருக்கும்.
நந்தகுமார்: சமயங்கள் இருக்குமா?
விடை: சாதிகள் இல்லாத நாடு ஆங்காங்கு ஆகும். சமயம் என்பது அவரவர் விருப்பம். யார் யாருக்கு என்ன சமயத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதனைக் கடைப்பிடிக்கலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது.
காவியா: கல்வி முறை எப்படி இருக்கும்?
விடை: அடிப்படைக் கல்வி முதல் பள்ளிக் கல்வி முழுவதும் தாய்மொழியில் இருக்கும். 12ஆம் வகுப்பு வரை உண்டு. பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளே. 12ஆம் வகுப்புக்குப் பிறகு நாம் விரும்பும் படிப்பைப் படிக்கலாம்.
இவ்வாறு மாணவர்களின் கேள்விகளுக்கு மு.இராமநாதன் விடைகள் அளித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சிரீதர் செய்திருந்தார். நிறைவாக, மாணவி இராசேசுவரி நன்றி கூறினார்.

தரவு: பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக