செவ்வாய், 15 நவம்பர், 2016

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள்




மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்

தேசியக் கல்வி நாள்

தேவகோட்டை:  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள் விழா நடைபெற்றது. அனைவரும் ஏதாவது  பயிர்த்தொழிலில் ஈடுபட தலைமையர் பேபி இராணி  அறிவுறுத்தினார்.
  விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
  தனியார்  வேளாண் கல்லூரித் தலைமையர்(டீன்) பேபிஇராணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், “அனைத்து மாணவர்களும் சிறு  அகவை முதலே வீட்டைச் சுற்றிலும் சிறிய அளவிலாவது  வேளாண்மை செய்யுங்கள் .இன்று பருவமழை பொய்த்துப் போனதாலும்,பெருவாரியான நிலங்கள் விலை நிலங்களாக மாறி விட்டதாலும், கூட்டுக் குடும்பங்கள் குறைந்து விட்டதாலும், உழைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும்  வேளாண்மை செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே நீங்கள் உங்கள் பெற்றோரிடம் சொல்லிப் பசு மாடு வளர்த்தால் கூட அது  வேளாண்மைதான். ஏதாவது ஒரு வகையில்  வேளாண்மை செய்யுங்கள். மாணவர்களாகிய நீங்கள் சிறு  அகவை முதலே அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கிடைக்கும் அனைத்துத் தகவல்களையும் படித்துக் கொள்ளுங்கள். கல்விதான் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. கல்வியோடு தொடர்பு படுத்தி இயற்கை  வேளாண்மையை அதிகப் படுத்துங்கள்” என்று பேசினார்.
  மாணவர்கள் சீவா, காவியா, சின்னம்மாள், பரமேசுவரி, இரஞ்சித்து, தனலெட்சுமி, இராசேசு ஆகியோர்  வேளாண்மை தொடர்பாகக் கேள்விகள் கேட்டு  மறு மொழி பெற்றனர்.
நிறைவாக ஆசிரியர்  சிரீதர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக