வியாழன், 16 பிப்ரவரி, 2017

தொல்காப்பியர் சிலையரங்கம் - கள ஆய்வுப்பயணம்













தொல்காப்பியர் சிலையரங்கம் - கள ஆய்வுப்பயணம்


நாளை (மாசி 04, 2048 /வெள்ளி/ பிப்பிரவரி 16,2017) பிற்பகல் சிற்பக்கலைஞர் குபேரன், கட்டுமானப்பொறியாளர் தணிகாசலம் ஆகியோருடன் திருவனந்தபுரம் செல்கின்றேன்.

திருவனந்தபுரத்தமிழ்ச்சங்கத்தலைவர் முத்துராமனுடன் இணைந்து தொல்காப்பியர் சிலை அமைக்கப்பட்டுள்ள காப்பிக்காடு செல்கிறோம்.
அங்கு அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கங்களின் செயல்தலைவர் முத்துச்செல்வன், தலைநகரத்தமிழ்ச்சங்கத்தலைவர் புலவர் சுந்தரராசன் ஆகியோருடன் இணைந்து   சிலையரங்கம் அல்லது தொல்காப்பியர் கோபுரம் அமைப்பது குறித்துக் கள ஆய்வு மேற்கொள்கிறோம்.
பின்னர், அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கங்களின் சார்பில் ஐந்நூற்றுவருக்கு  மேற்பட்டோர் பங்கேற்கும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிநிகழ்ச்சிக்கும் செல்கிறோம்.

மறுநாள் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் தொல்காப்பியர் சிலையரங்கம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறோம்.

இணைத்துள்ள படங்கள்,   அமைக்கப்பட உள்ள, தொல்காப்பியர் சிலையரங்கத்தின் முகப்பு, பக்கவாட்டுத் தோற்றப்படங்களாகும்.

தோரணங்களில் இடம்பெறக் கருதிப்பார்க்கப்படும் படங்களும் இணைப்பில் உள்ளன.

சிலையரங்கத்தில் படிக்கட்டுகளுடன் மின்ஏணியும் அமைக்கப்பெறும். மின்னேணிக் கதவுகளிலும் ஓவியங்கள் இடம் பெறும்.

சிற்பம், கல்வெட்டு, ஓவியம்  ஆகியவற்றின் மூலம், தொல்காப்பியர், தொல்காப்பியம்,  ஆகியனபற்றிய குறிப்புகள், தொல்காப்பியக் காட்சிகள் விளக்கப்பெறும்.
குறிப்புகளில் தொல்காப்பிய ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பெயரும் இடம் பெறும்.
உச்சி மாடியில் தொல்காப்பிய நூல் அல்லது  தொல்காப்பியரின் சிறு படிமம்  வைக்கப்பெற்று  அதன்மீது கதிரவன் ஒளிபடும் வகையில் கோபுரம் அமைக்கப் பெறும்.

இங்கே இடம் பெற வேண்டிய கருத்துகள், படங்கள், சிற்பங்கள் குறித்துத் தமிழன்பர்கள் கருத்து தெரிவிப்பின் மகிழ்ச்சியாக வரவேற்கப்பெறும்.

 தொல்காப்பியர் சிலையரங்கம் அமைய நம் ஒவ்வொருவர் பங்களிப்பும் தேவை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக