வெள்ளி, 2 ஜூன், 2017

கவிக்கோ அபுதுல் இரகுமான் காலமானார்!





கவிக்கோ அபுதுல் இரகுமான் காலமானார்!


 கவிக்கோ முனைவர்அபுதுல் இரகுமான் உடல் நலக்குறைவால் இன்று (வைகாசி 19, 2048 /  சூன் 02, 2017) அதிகாலை காலமானார். ஐப்பசி 24, 1968 / நவம்பர் 09, 1937 அன்று பிறந்த கவிக்கோ, ’ வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.  

இவரது தந்தை உருதுக் கவிஞர் மகி என்னும் சையது  அகமது தாய்; சைனத்து பேகம்.  கவிஞரின் மகன் கவிதையால் ஈர்க்கப்பட்டார். தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் மாணாக்கனாக இருந்து கவிதை  உலகில் ஒளிவிட்டவர்களில் இவரும் ஒருவர். வகுபு வாரியத்தலைவராகப் பணியாற்றியுள்ளார்(2009-2011).

  இவரது கவியன்பர்களில் கலைஞர் கருணாநிதியும் ஒருவர். மேலும் ஒரு நாள் வாழ்ந்திருந்தால் எனில் அவரை வாழ்த்தி இவரும் மகிழ்ந்திருப்பார். இவரது புகழ்பெற்ற படைப்பான பால்வீதி முதற்கொண்டு 40 நூல்களைப் படைத்துள்ளார்.  கவியரங்கங்களில் தனி முத்திரை பதித்தவர்.

கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, சாகித்திய அகாதமி விருது, உமறுப்புலவர் விருது முதலான 16 விருதுகளைப் பெற்றவர்.

அவரது வலைத்தள இணைப்பை இணைக்க முயன்றால், அதுவும் இன்று தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது.

கவிக்கோ பற்றிய விவரங்களுக்கு :  விக்கிபீடியா காண்க


[  சிறுமை கண்டு பொங்கும் அவர் உணர்விற்கு ஒரு சான்று. என் பணி தொடர்பான  கோப்பு முதல்வர் மனையகத்தில் உறங்குவதாகக் கேள்விப்பட்டு, என்னிடம், “எனக்கு இப்படி அநீதி இழைக்கப்பட்டது எனில் அந்த அம்மாவின் கன்னத்தில் அறைந்திருப்பேன்பேராசிரியர்(இலக்குவனார்) ஊட்டிய வீர உணர்வு, போராளிக் குணம் என்னிடம் மங்கவில்லை. ஆனால், நீங்கள் அமைதிகாக்கிறீர்களே! வாருங்கள் போவோமா?” என்றார். ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக